Compiled by London swaminathan
Date: 3 August 2018
Time uploaded in London – 13-20 (British Summer Time)
Post No. 5285
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருநாதரின் பெயர் தோதாபுரி, அவர் பரமஹம்சரை கிண்டல் செய்த ஒரு சம்பவம் இதோ:
ராமகிருஷ்ணர் சிறு வயதிலிருந்தே விடியற்காலையிலும் மாலையிலும் கைகளைத் தட்டிக்கொண்டும், சில நேரங்களில் நடனமாடிக்கொண்டும் இறைவனின் பல்வேறு திருநாமங்களைச் சொல்லிப்பாடுவார்.
‘ஹரி போல், ஹரி போல்’ (ஹரியின் பெயரைச் சொல்) ‘ஹரியே குரு’, ‘குருவே ஹரி’, ‘ஓ என் உயிரே கோவிந்தா’, பிராணனே கோவிந்த, அறிவே கோவிந்தா, உணர்வே கோவிந்தா’ ‘நீவீர் உலகம்’ ‘நான் இயந்திரம், நீ என்னை இயக்குபவன்’ என்றெல்லாம் பாடுவார்.
அத்வைத சாதனை செய்து கடவுளை உருவமும் குணமும் இல்லாதவராக- எங்கும் நிறைந்த எல்லாமான பிரம்மமாகக் கண்ட பிறகும் கூட அவரிடம் இந்தப் பழக்கம் நிற்கவில்லை.
ஒருநாள் மாலை தோதாபுரியும் ராமகிருஷ்ணரும் உடகார்ந்து வழக்கம்போல ஆன்மீகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வெளிச்சம் மறைந்து இருள் சூழத் துவங்கியது. சந்தியாகால நேரம்; ராமகிருஷ்ணர் வழக்கம்போலக் கைகளைத் தட்டிக்கொண்டு கடவுளின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு பாட ஆரம்பித்தார். இதைக் கண்டு தோதாபுரி ஆச்சர்யமடைந்தார். ஏனென்றால் ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் செய்யக்கூடிய காரியம் இது. ராமகிருஷ்ணரோ ஆன்மீக சாம்ராஜ்யத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்; அத்வைத சாதனையில் வெற்றி பெற்றதால் அதற்கு மேல் எதுவும்தேவை இல்லை.
அவர் இப்படி சாதாரண மனிதன் போல ஆடுவதும் பாடுவதும் கை தட்டுவதும் குருநாதரான தோதாபுரிக்கு வியப்பைத் தந்தது. மேலும் அவர் புன்சிரிப்போடு, குரு நாதரைப் பார்த்துக்கொண்டு கைகளைத் தட்டி ஆடினார். அவர் கைகளை ஒன்றோடு ஒன்று தட்டி ஆடியதைப் பார்த்த தோதாபுரி, “என்ன பூரி செய்ய மாவு தட்டுகிறாயா?” என்று கேட்டார்.
இதைக்கேட்டதும் ராமகிருஷ்ணர், ” என்ன அர்த்தமில்லாமல் பேசுகிறீர்கள்? நான் இறைவனின் புனிதமான பெயரைப் பாடுகிறேன். அதைப் போய் பூரி தட்டும் வேலையோடு ஒப்பிடுகிறீர்களே. இது மிகவும் மோசம்” என்றார்.
தோதாபுரி புன்சிரிப்போடு பதில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார்.
ஆதாரம்—‘பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்’, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை.
‘சித்தன் போக்கு சிவம் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு’– என்று தமிழில் பழமொழி உண்டு. ஒவ்வொரு பெரியோரின் வாழ்விலும் இது போல சில விநோதச் செயல்கள் இருக்கும்; அதை வைத்து நாம் அவர்களை எடை போட்டால் நாம் மதியீனர்கள் ஆவோம்.
Picture shows Muralidhara Swamikal with his devotees
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894- 1994) கூட அத்வைதம் பேசும் தாங்கள் ‘’ஏன் உத்துரணி தட்டும் வேலை’’யைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அருமையான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
கீழ்நிலயில் உள்ள நம்மைப் போன்றவர்களும் அவர்களிடம் வரவேண்டும் என்பதற்காவே அவர்கள் இப்படிப் பூஜை புனஸ்காரங்களைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர்களைப் போன்ற பெரியோர்கள் மலைக் குகைகளில் உடகார்ந்து தவம் செய்யத் துவங்கினால் நமக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமல்லவா?
–சுபம்–