Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 5 November 2018
GMT Time uploaded in London – 18-11
Post No. 5629
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
டான்டே (DANTE) என்பவர் உலகப்புகழ் பெற்ற கவிஞர் வரிசையில் இருப்பவர். இதாலிய மொழியில் தி டிவைன் காமெடி (THE DIVINE COMEDY) என்ற காதல் காவியத்தை யாத்தவர். சிறு வயதிலேயே ரோமானிய கவிஞரான வர்ஜில் (VIRGIL) மூலம் ஊற்றுணர்ச்சி பெற்றவர்.
பிறந்த வருடம் 1265
இறந்த ஆண்டு 1321
இறந்தபோது வயது 56
இதாலியில் உள்ள ப்ளாரன்ஸ் (FLORENCE) நகரில் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோதே அவருடைய மணப்பெண் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவரோ வேறு ஒரு பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு பீட்ரைஸ் என்று நாமகரணம் செய்தார். அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் பாக்கியமே இல்லாவிடினும் டிவைன் காமெடி என்னும் கவிதை உதயமாக அந்தப் பெண் காரணமானாள்.
இதாலியில் நகரங்கள் இடையே போர்கள் மூளுவது வாடிக்கை. அதில் டான்டே அலிகியரியும் பங்கேற்றார். இவருடைய மானஸீக காதலி, வேறு ஒருவரை மணந்து 24 வயதிலேயே சொர்க்கத்துக்குச் சென்றாள். அவளது நினைவால் பிறந்த ‘கவிதைத் தாஜ்மஹல்’— டிவைன் காமெடி.
ப்ளாரென்ஸ் நகர், இவர் எதிரிகள் வசமானவுடன் இவர் அந்த நகரை விட்டு நீங்கினார். இதற்குப் பிறகே கவிதை உலகில் நுழைந்தார். அவர் அரசியல் அகதியாகி நகர் நகராக அலைந்தார்.
டிவைன் காமெடியில் இவர் நரகம், இடைப்பட்ட பரிகார உலகம், சொர்கம் என்ற மூன்று இடங்களுக்குப் பயணம் செய்து இறுதியில் சொர்க்கத்தில் மானசீகக் காதலி பீட்ரைஸுடன் இணைகிறார்.
மத்தியகால ஐரோப்பிய நம்பிக்கைகளைக் காட்டும் காலக் கண்ணாடி இந்த காதல் காவியம். எண்ணற்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் 800 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் ஊற்று இது.
XXX
கற்றோரே கற்றோரைக் காமுறுவர்!
டான்டே ஒரு முறை இதாலியின் வெரோனா நகர அரசரைச் சந்தித்தார். அவர் பெயர் டெல்லா ஸ்கேலா (SIGNOR DELLA SCALA). அவர் சொன்னார்:-
ஐயா, திருவாளர் டான்டே அவர்களே! உம்மைக் கண்டால் என் அரசவை ஆட்கள் எல்லோரும் காறித் துப்புகிறார்களே. இவ்வளவு கல்வி கற்றும் உமக்கு ஏன் இந்த நிலை?
டான்டே சொன்னார்:-
மன்னர் அவர்களே! உமக்குத் தெரியாதா? நம்மைப் போல யார் இருக்கிறார்களோ அவர்களைத் தானே நமக்குப் பிடிக்கும். இது உலக இயல்பு என்பதை அறியீரோ?
(கற்றோரே கற்றோர் காமுறுவர் (முட்டாள்களுக்கு முட்டாள்களைத்தான் பிடிக்கும்).
XXX
அவ்வையார் அந்தக் காலத்திலேயே சொன்னார்:
நல்தாமரைக் கயத்தில்நல் அன்னம் சேர்ந்தால் போல்
கற்றாரை கற்றாரே காமுறுவர்; – கற்பு இல்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்– மூதுரை, அவ்வையார்
தாமரைக் குளம் அழகானது; அங்கேதான் அன்னங்கள் போகின்றன. அது போல கற்று அறிந்த அறிஞர்களுடன்தான் கற்றோர் சேருவர். மூர்க்கர் என்போர் அறிவற்றவர்கள். அவர்கள் முட்டாள்களையே நாடுவர். சுடுகாட்டில் காக்கைகள் இருப்பது போல.
டான்டே சொல்லுவதற்கு முன் அவ்வையார் செப்பிவிட்டார்.
–SUBHAM–