காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்! (Post No.5855)

Written by S Nagarajan


Date: 30 DECEMBER 2018


GMT Time uploaded in London – 5-29 am


Post No. 5855

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!

ச.நாகராஜன்

 வாழ்வில் ஏற்படும் சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். ஏன் அப்படி நடந்தது என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது.

நல்ல விஷயம் என்றால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுவோம். கெட்ட விஷயம் என்றால் என் விதி; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கூறிப் புலம்பி அழுது தீர்ப்போம்.

அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய எல்லோருக்குமே ஒரு ஆவல் இருக்கிறது.

ஜோதிடத்தில் மனிதனுக்குத் தீராத ஆசை ஏற்படுவது எதிர்காலத்தை அறியத் துடிக்கும் மனிதனின் இந்த மனப்பான்மை தான்!

 இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆஸ்டிரிய – பிரிட்டிஷ் தத்துவஞானியான சர் கார்ல் ரெய்மண்ட் பொப்பர் ( Sri Karl Raimond Popper – பிறப்பு 28-7-1902 மறைவு 17-9-1994) , ‘தர்க்கரீதியாகப் பார்த்தால் வரலாற்றின் எதிர்காலம் பற்றி  நம்மால் முன்கூட்டி கணிக்கவே முடியாது’ ( for strictly logical reasons, it is impossible for us to predict the future course of history) என்றார்.

அடுத்த விநாடி நடக்கப் போவதை அறியாதவன் ஆயிரம் ஆண்டுக்கு ஜோஸியம் சொன்னானாம் என்று அவர் எள்ளி நகையாடுகிறார்.

பல சம்பவங்களைப் பார்க்கும் போது நமக்கு வியப்புத் தான்  மேலிடுகிறது.

மூழ்கவே மூழ்காத கப்பல் என்று விளம்பரம் செய்யப்பட்ட டைட்டானிக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு 1912 ஏப்ரலில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

வட அட்லாண்டிக்கில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி அது உடைந்தது; அதில் பயணித்த 2224 பயணிகளில் 710 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

அது மூழ்கியவுடன் தான் அதில் பயணிக்கத் தவறியவர்கள் யார் யார், ஏன் அவர்கள் அதில் பயணிக்கவில்லை என உலகினரால் விசேஷமாகப் பார்க்கப்பட்டார்கள்.

அவர்கள் ‘Just Missed It’ Club – அதாவது ‘மயிரிழையில் பிழைத்தவர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இந்தப் பட்டியலில் ஏராளமானோர் இருந்தனர்.  அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களுள், தொழிலக முன்னோடிகள் என்று சொல்லக் கூடிய ஹென்றி க்ளே ஃபிரிக் (Henry Clay Frick),  ஜே.பி. மார்கன் (JP Morgan), ஜே. ஹொரேஸ் ஹார்டிங் (J. Horace Harding) ஆகியோரும் அடங்குவர்.

இந்த மூவருமே டைட்டானிக் கப்பலில் பயணப்பட ஏற்பாடுகளைச் செய்தவர்கள்!

ஹென்றி க்ளே ஃபிரிக் அமெரிக்காவின் தலைசிறந்த செல்வந்தர்களுள் ஒருவர். எஃகு, உருக்குத் தயாரிப்பாளர். பிப்ரவரியிலேயே தனக்கும் மனைவிக்குமாகச் சேர்த்து டிக்கட்டை முன்பதிவு செய்திருந்தார் அவர். ஆனால் திடீரென்று அவர் மனைவிக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டது. கணுக்கால் எலும்பில் முறிவு ஏற்படவே, இத்தாலியில் அவர் மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆகவே அவர்களால் டைட்டானிக்கில் பயணிக்க முடியவில்லை. இவர்களுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த B-52,54,56 ஆகிய மூன்று சூட் ஜேபி மார்கனுக்கு ஒதுக்கப்பட்டது. வங்கித் தொழிலில் கொடி கட்டிப் பறந்த மார்கனும் மிகச் சிறந்த செல்வந்தர் தான். ஆனால் ஐரோப்பாவில் அவரது வணிக சம்பந்தமான திட்டத்திற்காக அவர் கொஞ்சம் அதிக காலம் தங்க வேண்டியதாயிற்று. அவரும் பயணத்தை ஒத்திப் போட்டார். இந்த முறை இவருக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ஜே. ஹொரேஸ் ஹார்டிங்கிற்கும் அவரது மனைவிக்கும் ஒதுக்கப்பட்டன. இவரும் வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த பணக்காரர் தான்! ஆனால் இவர்களுக்கு இதற்கு முன்னர் கிளம்பிய கப்பலில் இடம் கிடைத்ததால் இவர்கள் முந்திக் கொண்டு அதில் சென்றனர்; காலன் பிந்திக் கொண்டு விட்டான்!

துரதிர்ஷ்டவசமான அந்த அறைகள் வொய்ட் ஸ்டார் லைன் சேர்மனான ஜே. ப்ரூஸ் இஸ்மேக்குப் போய்ச் செர்ந்தது.

மூன்று தொழிலதிபர்களும் டைட்டானிக் ஆபத்திலிருந்து எப்படி பிழைத்தனர்!

யாராலும் சொல்ல முடியவில்லை. துரதிர்ஷ்டவசமான அந்த அறைகளுக்கு அவர்கள் செல்லவே இல்லை!

இதே போல லண்டனில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சை சேர்ந்த பாதிரியாரான ஜே. ஸ்டூவர்ட் ஹோல்டனும் (J. Stuart Holden) இதில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது மனைவியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்படவே பயணத்திற்கு ஒருநாள் முன்னர் ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று தன் பயணத்தை அவர் தள்ளி வைத்தார்; பிழைத்துக் கொண்டார். இப்படி ஏராளமானோர் துரதிர்ஷ்டவசமாக முடியப் போகும் பயணத்தைத் தவிர்த்தனர்.

இதெல்லாம் யாரால், ஏன் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.

இப்படி உயிர் பிழைக்க அதிர்ஷ்டம் காரணமாகும் நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க,  சில சிறிய நிகழ்வுகள் ஒருவருக்குப் பெரிய வாழ்வைத் தந்து விடுவதையும் பார்க்கிறோம்.

மன்னர் நான்காம் ஜார்ஜுக்கு ஒரு சமயம் திடீரென்று வலிப்பு வந்து விட்டது. தற்செயலாக அங்கு சென்றிருந்த ஒரு கிராம வைத்தியர் அவருக்கு உடனடி சிகிச்சை கொடுத்தார்; மயக்கமடைந்த மன்னருக்கு உணர்வு வரும்படி செய்தார். மன்னரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் மனநிலையை மாற்றி அவரைச் சிரிக்கவும் வைத்தார். அவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக அவர் அரண்மனை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

இப்படி எத்தனையோ பெருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதையும் பார்க்கிறோம்; அவர்கள் பிரபலமாவதையும் பார்க்கிறோம்.

விஷம் கொடுத்துச் சாகாமல் இருப்பவர்கள் என்ற விஷயத்தை நம்ப முடியாது என்றாலும் கூட ரஸ்புடீனை எடுத்துக் கொண்டால் சற்று பிரமிப்பு தான் ஏற்படும்.

அவருக்கு கடுமையான விஷம் தரப்பட்டது. ஆனால் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பிழைத்துக் கொண்டார்.

இதே போல பதினான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்த ஒரு குழந்தை புல்தரையில் விழுந்து ஜம்மென்று நடந்த கதையையும் செய்தித் தாளில் பார்க்க நேரிடுகிறது.

என்ன ஆச்சரியம் போங்கள், இந்த மனித வாழ்க்கை!

காலன் அழைத்தாலும் காத்து விடுகிறது அதிர்ஷ்டம்!

சில சமயமோ நல்ல விஷயம் நடப்பதில்லை; எதிர்பார்த்ததற்கு மாறாக  ஏடாகூடமாக ஏதாவதொன்றில் சிக்கிக் கொள்கிறோம்.

வரலாற்றின் எதிர்காலம் இருக்கட்டும்; வரக் கூடிய அடுத்த கணமே நமக்கு எப்படி இருக்கும் என்பது தெரியாது, அது பற்றிச் சொல்லவும் முடியாது என்பது தான் உண்மை போலும்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: