WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 28 April 2019
British Summer Time uploaded in London – 12-50
Post No. 6319
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
உன்னை நீயே உயர்த்திக் கொள் : புத்தரின் இறுதி உபதேசம்!
ச.நாகராஜன்
கீதையில் கண்ணபிரான் கூறும் பெரிய அருளுரை – : ‘உன்னை நீயே உயர்த்திக் கொள்’ என்பது தான்!
ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தில் ஐந்தாவது ஸ்லோகம் இது:
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: ||
ஆத்மாவிற்கு ஆத்மாவே பந்து.
ஆத்மாவிற்கு ஆத்மாவே எதிரி (ரிபு)
ஆத்மாவினாலேயே ஆத்மாவை உயர்த்திக் கொள்ள வேண்டும் (உத்தரேத் ஆத்மநாத்மாநம்)
ஆத்மாவைக் கீழ் நோக்கிச் செல்ல விடக் கூடாது.
இதையே தான் புத்தரும் கூறி வந்தார்.
உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது தான் அவரது முக்கிய உபதேசம்.
தன் இறுதி நேரத்தில் மரணப் படுக்கையில் அவர் இருந்த போது தனது பிரதம் சீடரான ஆனந்தரை அருகில் அழைத்தார்.
“ஆனந்தா! எவர் ஒருவர் தனது வாழ்க்கையில் சரியாக தர்மத்தின் படி வாழ்கிறாரோ அவர் தான் ததாகதரைச் சரியாக மதிக்கிறார்கள்; போற்றுகிறார்கள். அதுவே அவரை மதிக்கும் விதம்! ஆகவே, ஆனந்தா, வாழ்க்கையில் தர்மத்தின் படி வாழ்! உன்னை நீயே இதற்காகப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.”
உடலாலும், மனதாலும், மொழியாலும் புத்தரைப் போற்ற இதுவே வழியாகும்.
ஊதுபத்தியை ஏற்றுவது, மலர்களைச் சமர்ப்பிப்பது ஆகியன ததாகதரை – புத்தரைச் சரியானபடி வணங்கும் முறை அல்ல.
இதைத் தான் புத்த மத ஆசார்யர்களும் உபதேசித்து வந்தனர்.
புத்தரின் சிலையைப் பார்த்து வணங்குவது நமக்கு நாமே உத்வேகம் ஊட்டிக் கொள்ளத் தான். அந்த உத்வேகத்தால் நாம் உயர முடியும்.
உலகில் உள்ள தலை சிறந்த அறிஞர்களும், ராஜ தந்திரிகளும், அரசியல் தலைவர்களும் புத்தரின் திரு உருவத்தையோ அல்லது படத்தையோ தாங்கள் அடிக்கடி பார்க்கக் கூடிய இடத்தில் வைத்துக் கொள்வது வழக்கம்.
பாரதப் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது சுய சரிதத்தில் இப்படி எழுதுகிறார் :
“ At Anuradhapura, I liked greatly an old seated statue of the Buddha. A year later, when I was in Dehra Dun Gaol, a friend in Ceylon sent me a picture of this statue, and I kept it on my little table in my cell. It became a precious companion for me, and the strong, calm features of the Buddha’s nature soothed and gave me strength and helped at me to overcome many a period of depression.”
“இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் புத்தர் வீற்றிருந்த கோலத்தில் இருந்த ஒரு பழைய சிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு வருடம் கழித்து டேரா டூன் சிறையில் இருந்த போது இலங்கையில் இருந்த ஒரு நண்பர் அந்தச் சிலையின் ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பினார். அது எனக்கு விலை மதிக்க முடியா தோழனாயிற்று. புத்தரின் இயல்பான வலிமையான அமைதி வாய்ந்த அவரது கோலம் என்னை சாந்தப்படுத்தியது. எனக்கு வலிமையைத் தந்தது. மனச்சோர்வுக்குள்ளான பல சமயங்களிலும் அது என்னை மீட்க உதவியது.” – இப்படி எழுதியிருக்கிறார் தனது சுய சரிதையில் அவர்.
உலகின் மாபெரும் தலைவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் இப்படிப் பலரும் புத்தரால் உத்வேகம் பெற்றதைக் காண முடிகிறது.
புத்தரின் திருவுருவம் ஒவ்வொருவருக்கும் இன்று வரை உத்வேகம் தந்து உயர்த்துவது ஆச்சரியமூட்டும் ஒரு உண்மை!
***