
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 7 NOVEMBER 2019
Time in London – 8-25 am
Post No. 7186
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கொங்கு மண்டல சதகம்
புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!
ச.நாகராஜன்
குறும்பு நாடு என்பது கொங்குமண்டலத்தில் ஒரு பகுதி. அங்குள்ள ஒரு படைத்தலைவன் பெயர் உலகுடையான். தமிழின் பால் மிக்க பற்று கொண்டவன். புலவர்களைப் பெரிதும் ஆதரித்தவன்.
புலவர் ஒருவர் அவனை அணுகி அருமையான அகத்துறைக் கோவை ஒன்றைப் பாடினார்.
அந்த இனிமையான செய்யுள்களைக் கேட்ட உலகுடையான் பெரு மகிழ்ச்சி அடைந்தான்.
அந்தப் புலவரைப் பல்லக்கில் ஏற்றி அதைச் சுமந்ததோடு அவருக்குப் பரிசும் பொருளும் கொடுத்ததோடு வயலும் கொடுத்தான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் புலவர் பெயரும் தெரியவில்லை; அவர் பாடிய அகத்துறைக் கோவையும் கிடைக்கவில்லை.
கொங்குமண்டல சதகத்தின் 82வது பாடலால் இந்த வரலாறு நமக்குக் கிடைக்கிறது.
பாடல் :-
சொல்லிக் கனைய வகத்துறை க் கோவை சொன புலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை விர னுலகுடை வீரனமர்
மல்லர்க் கினிய குறுப்பணை நீள் கொங்கு மண்டலமே
பொருள் :- இனிமையான அகத்துறைக் கோவை பாடிய புலவனுடைய பல்லக்கைச் சுமந்து வயல் நிலமும் பொன்னும் பரிசாகக் கொடுத்தவனான படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்பு நாடு சூழ்ந்தது கொங்கு மண்டலமே.
இந்த உலகுடையான் பற்றிய சாசனம் ஒன்று விஜய நகரம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் புறச் சுவரில் இருக்கிறது.

சிதிலமடைந்த சாசனத்தின் சில பகுதிகள் :-
சாசனம் நம்பர் : 565-1905 – ஸ்வஸ்தி ஸ்ரீ பாண்டிய தேவற்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற … கசு-வது தை மாதம் குறும்பு நாட்டு விஜயமங்கலத்து வெள்ளாழர் படைத்தலைவர்களில் நம் உலகுடையானேன் விஜயமங்கலம் ஆன அவத்தூரில் நாயனார் வி..சு..ம சோழீஸ்வரமுடையாற்கு வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின பணம் …ங்கைக் கொண்டோமிக் கோவில் காணியுடைய சில …….
(சில எழுத்துக்கள் மட்டுமே தெரிகின்றன)
***

