அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்! (7549)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7549

Date uploaded in London – – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிப்ரவரி 8, 2020 – தைப்பூச நன்னாள். வள்ளலாரின் அடி தொழுது ஜோதி தரிசனம் பெறுவோம்!

அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்!

ச.நாகராஜன்

வடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர் ஆற்றிய அற்புதங்கள் பிரமிக்க வைப்பவை. (வள்ளலார் தோற்றம் :  5, அக்டோபர் 1823, ஒளியுருவாய் மறைந்தது 30,ஜனவரி 1874).

ஆனால் இந்த அற்புதங்களுக்கெல்லாம அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அருகிலிருந்தோர் பார்த்து பிரமித்தனர்; வியப்படைந்தனர்.

சுமார் 43 அற்புதங்களை நேரில் பார்த்தும் அன்பர்கள் சொல்லக் கேட்டும் அதிகாரபூர்வமாக வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் தொழுவூர் வேலாயுத முதலியார் ‘வள்ளலாரின் சரித்திரச் சுருக்கம் என்ற நூலில் எழுதியுள்ளார்.

பிரம்மாண்டமான வேத, இதிஹாச, புராணங்களின் உட்பொருளை உணர்வது, அனாயாசமாக அற்புதமான தமிழில் ஆழ்ந்த பொருளடங்கிய தமிழ்ப் பாக்களை உடனுக்குடன் யாப்பது, வீண் வாதுக்கு வந்தோரை சில நிமிடங்களில் வெல்வது, சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு உணர்த்துவது என்று இப்படி ஏராளமான விஷயங்களை வள்ளலாரின் வாழ்க்கையில் காணலாம்.

   ஒரு முறை திருவொற்றியூர் வடிவாம்பிகை அம்மன் சந்நிதி முன் வள்ளலார் நின்று தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு அன்பர் சதுர்வேத சார சங்கிரகம் என்று நூலின் ஏட்டுச் சுவடியைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

   தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட வள்ளலார் பலரது சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

ஒரு முறை சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்த போது சம்ஸ்கிருத நூல் ஒன்றில் ஒரு பகுதியில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நூலில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்க வல்ல புலவர்கள் இங்கு உண்டோ என்று அவர் ஒரு பிராமணரை வினவ, அவர் வள்ளல் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உடனே சங்கராசாரியார் அவரிடம் நூலைத் தந்து தனக்கு சந்தேகம் ஏற்பட்ட இடத்தைக் காண்பிக்கவே அதை ஒரு முறை பார்த்தார் வள்ளலார். பின்னர் தன் முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் சந்தேக நிவர்த்தி செய்து வைக்குமாறு பணிக்கவே அவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

   இது மட்டுமல்ல, பல வருடங்களாக குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் அடிகளைக் கண்டு வணங்கித் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வலத்தால் திருநீறு கொடுத்து அதை நொடிப்பொழுதில் போக்கினார் வள்ளலார்.

    இன்னொரு சமயம் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தும் வாத நோயைத் தீர்த்தருளுமாறு வள்ளலாரை வேண்டினார். உடனே கருணையுள்ளம் கொண்ட அடிகளார் அவரது நோயைத் தீர்த்தருளினார்.

இதனால் மிக்க மகிழ்ச்சி கொண்ட சுப்பராய முதலியார்,

அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் றானோ

மகத்துவமாஞ் சம்பந்த மாலோ – சகத்திலகுஞ்

சச்சிதா னந்தத்தின் தண்ணாளியோ என்னென்பேன்

மெச்சுமதி ராமலிங்க வேள்

என்று ஒரு புகழ்மாலையை அவருக்குச் சூட்டித் தன் நன்றியைத் தெரிவித்தார்.

அற்புதங்கள் ஒரு புறமிருக்க சமுதாயச் சீர்திருத்தத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார்; பக்தி, ஞானம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அவர் தனது உபதேச உரைகளை அருளினார்.

தமிழ் மொழியின் வல்லமையை அனைவரும் உணருமாறு செய்தார்.

‘தைப்பூசம் தவறாதீர்கள் என்ற அவரது அருளுரை பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்தது.

தைப்பூசத்தன்று ஆண்டு தோறும் சன்மார்க்கச் சங்கத் திருக்கூட்டம் வடலூரில் நடைபெற்று வருகிறது.

அன்று ஏழு திரைகள் விலக ஜோதி தரிசனம் காணலாம்.

அவர் ஏற்றி வைத்த தீபம் இன்று வரை தொடர்ந்து எரிகிறது.

பசித்தோர்க்கு அன்னமிட வேண்டும் என்ற அவரது எண்ணப்படி இன்றளவும் அவர் மூட்டி வைத்த அடுப்பு அணையாமல்  தொடர்ந்து எரிந்து அன்னம் வழங்கப்பட்டு வருவது உலக அதிசயங்களுள் ஒன்று.

வள்ளலாரின் வாழ்க்கையை ஊன்றிப் பார்ப்பதோடு, அவரது பாடல்களை – அருட்பாவை – படித்து ஓர்ந்து உணர்ந்தால் ஜோதி தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை!

tags- ஜோதி தரிசனம், வடலூர், வள்ளலார்

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: