
Written by London swaminathan
Post No.7650
Date uploaded in London – 4 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
வாழும்போது எவ்வளவோ விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் சாகும்போதும் அப்படி நடப்பது மிகவும் அபூர்வமே. இதோ சில விந்தையான சம்பவங்கள்—
சாகும்போது Good Bye குட் பை!
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஜான் மார்ஷல் ஹார்லன் (John Marshal Harlan) படுத்த படுக்கையாகக் கிடந்தார். சாவதற்கு சற்று முன் கண் விழித்தார். அரை குறை நினைவுடன் பேசினார். “உங்களை எல்லோரையும் நீண்ட நாட்கள் காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன். குட் பை Good Bye “என்று சொல்லிவிட்டு கண்ணை மூடி இறுதியாத்திரைக்கு தயாரானார்.
Xxxx

சாகும்போது வரைந்தவர் யார்?
வில்லியம் பிளேக் (William Blake 1757-1827) என்பவர் புகழ்பெற்ற ஆங்கில ஓவியர், கவிஞர். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் போற்றப்படவில்லை. இறப்பதற்கு மூன்றே நாட்கள் இருந்தன. அவர் கடைசியாக எடுத்துக்கொண்ட ஒரு ஓவியத்தை வரைவதற்காக படுக்கையைக் கொஞ்சம் தலைமாட்டில் உயர்த்தும்படி செய்தார். தனக்குப் பிடித்த வண்ணங்களை தீட்டினார். திடீரென தூக்கி எறி ந்து, அவ்வளவுதான்; இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“ஹே கேதி (Kate) ! அப்படியே அசையாமல் நில்.
வழக்கம் போல் தோன்று .நீ வாழ்நாள் முழுதும் என்னைக் காத்த தேவதை. நான் உன்னை வரையப்போகிறேன். அசையாது அழகாக நில்”– என்று கட்டளையிட்டுவிட்டு மனைவியின் ஓவியத்தை வரைந்தார். பின்னர் இறந்தார். அதுதான் அவருடைய கடைசி ஓவியம்!
Xxx

சாகும்போது பாடியவர் யார் ?
தாமஸ் ஆர்ன் ( Thomas Arne) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இசை மேதை. அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே கடைசி மூச்சு உள்ளவரை வாழ்ந்ததாக அவருடைய நெருங்கிய நண்பர் வெர்னன் (Vernon) கூறு கிறார் :-
நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கடைசியாக தான் இயற்றிய சாகித்யத்தின் சிறப்பை எடுத்துக் காட்டி அதை மெல்லிய குரலில் பாடியும் காட்ட துவங்கினார். பாடிக்கொண்டே இருந்த அவரது குரல் மேலும் மேலும் சன்னமாகிக் கொண்டே வந்தது. பாடியவாறே கடைசி மூச்சை விட்டார். பிரிட்டனின் தேசீய கீதத்தின் ஒரு பகுதி அவர் இயற்றியதாகும்
அன்னப் பட்சி சாவதற்கு முன்னர் பாடும் (Swan Song) என்பது மேலை நாட்டு கவிகள் சொல்லும் மரபு. நமது இந்துக் கவிகள் பாலையும் தண்ணீரையும் சேர்த்துவைத்தால் அன்னப்பறவை பாலை மட்டும் பிரித்து உண்ணும் சக்தி படைத்தது என்று சொல்லுவது போல இதுவும் ஒரு நம்பிக்கை ; க்ஷேக்ஸ்பியர் கூட சாகும் அன்னப் பறவையின் கீதம் என்று உவமை காட்டுவார் . அதுபோல சாகும் அன்னப்பறவையாக ஆர்ன் உயிர்துறந்தார்.

xxxx Subham xxxx