
Post No.7885
Date uploaded in London – 26 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அகஸ்திய மகரிஷி பற்றி அறியாத இந்தியர் எவருமிலர். புராணங்களில் கூறப்படும் மாபெரும் பொறியியல் வல்லுனர்களின் – எஞ்சினியர்களில்- பகீரதனுக்கு அடுத்தபடியாக இந்தியா முழுதும் தெரிந்த எஞ்சினியர் அகத்தியர்தான். அதுமட்டுமல்ல, வியாசர், வால்மீகி ஆகிய இரண்டு முனிவர்களுக்கு அடுத்த படியாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமான ரிஷியும் அகஸ்தியர் ஒருவரே. இந்துக்கள் வணங்கும் ஏழு ரிஷிக்களின் பெயர்களும் துருவன் என்ற சிறுவனின் பெயரும், அருந்ததி என்ற கற்புக்கரசி பெயரும் வடக்கு வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு சூட்டப்பட்டதை நாம் அறிவோம். இதற்கு அடுத்தபடியாக தெற்கு வானில் நட்சத்திரமாக ஜொலிப்பதும் அகஸ்தியர் (Canopus) ஒருவரே. தென் வானத்தில் தென்படும் சத்தர்ன் கிராஸ் (Southern Cross) எனப்படும் திரிசங்கு நட்சத்திரம் தென்பட்டாலும் அது சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட திரிசங்கு ராஜாவின் பெயர் சூட்டப்பட்ட நக்ஷத்திரமேயன்றி முனிவரல்ல.
இவ்வாறு விந்தியமலை வழியாக தென்னாட்டுக்கு சாலை அமைத்த, காவிரி நதியை கேரளத்துக்குச் செல்லவிடாமல் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிட்ட, அகஸ்தியர் பகீரதன் போல சிவில் எஞ்சினியர் (not only a Civil Engineer but also a Marine Engineer) மட்டுமல்ல. அவர் ஒரு மரைன் — அதாவது — கப்பல் போக்குவரத்து — எஞ்சினியரும் கூட !—“தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுது” – “வடக்கில் ஜனத்தொகை பெருகிப் போயிற்று- ஆகையால் 18 குடி மக்களை தெற்கே அழைத்துச சென்று குடியேற்று” – என்று சிவபெருமான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு வந்த அகத்தியன் , அந்தப் பணிகளை முடித்த பின்னர் சும்மா இருக்க முடியவில்லை.
பாண்டியமன்னரின் கடற்படையை எடுத்துக்கொண்டு, முட த்திருமாறன் என்ற மன்னரை அழைத்துக் கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமில் இந்து மத ஆடசியைத் துவக்கிவைத்தார். துலுக்கர்கள் வந்து அவர்களை மதம் மாற்றும் கி.பி 1600 வரை அது நீடித்தது. இப்போது பெயர் அளவுக்கு தாய்லாந்தில் மட்டும் இருக்கிறது. வியட்நாமில் கண்டு பிடிக்கப்பட்ட ஸ்ரீமாறன் கல்வெட்டுதான் (முடத் திருமாறன்) கல்வெட்டுதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே பழைய கல்வெட்டு. இப்போது அகஸ்தியர் சிலை இல்லாத தென் கிழக்கு ஆசிய நாடு கிடையாது. இவை எல்லாம் நான் 11 ஆண்டுகளாக இந்த பிளாக்குகளில் எழுதிய பழைய விஷயம். இப்போது புதிய விஷயத்துக்கு வருகிறேன் .
அய்யாசாமி கல்யாண ராமன் என்ற தமிழ் அறிஞர் ‘ஆர்யதரங்கிணி’ என்ற பெயரில், இரண்டு தொகுதிகளில், ஆங்கிலத்தில், இந்திய கலாசாரம் பற்றி அரிய , பெரிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அகஸ்தியர் பற்றி அதற்கு முன்னர் தமிழ் அறிஞர்களுக்குத் தெரியாத தென்கிழக்காசிய அகஸ்திய முனி கல்வெட்டுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவர் போகிற போக்கில், ‘தொல்காப்பிய முனிவரின் சிலை த்ருண பிந்து என்ற பெயரில் அகஸ்தியர் சிலையுடன் ஜாவாவில் இருக்கிறது’— என்று எழுதி இருந்தார். நீண்ட நாளகத் தேடிய அந்த முனிவரின் சிலையின் படம் கிடைத்துவிட்டது. இத்துடன் உள்ள படங்களைக் காண்க.

பிலிப் ராவ்சன் எழுதிய ‘தென் கிழக்காசிய நாடுகளின் கலைகள்’ என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் ஒரு பக்கம் சம உயரமுள்ள அகஸ்தியர் , விஷ்ணு சிலைகளின் படங்களை வெளியிட்டு அவை மத்திய ஜாவாவில் சண்டி பனோன் என்ற இடத்தில் கிடைத்தவை என்று எழுதியுள்ளார். ஜாவா தீவு இந்தோனேஷியாவின் ஒரு பகுதி . உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் தூபி உள்ள இடம். எட்டாம் நூற்றாண்டு முதல் பல கட்டிடங்கள் அங்கே உள்ளன. சிங்கசாரி என்னும் இடத்தில் கிடைத்த அகஸ்தியர் சிலை, த்ருண பிந்து சிலைகள் பற்றி எழுதுகையில் அகஸ்தியர் ஒரு தெய்வ ரிஷி என்றும் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார் என்றும் சொல்கிறார். த்ருண பிந்து (Trunabindhu) என்பவர் கொழுத்த முனிவர் அவர் சிவ பெருமானின் புகழ் மிகு பக்தர் என்று மட்டும் சொல்கிறார் .
த்ருண பிந்து தொல்காப்பியரா?

த்ருண பிந்து என்ற பெயர் மைசூர் ராமர் கோவில் மற்றும் ராமாயண சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒரு முனிவராக காட்டப்படுகிறார். ஆனால் தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றே உள்ளது. ஆகவே த்ருண பிந்துதான், த்ருண தூம அக்கினியா என்று ஆராய வேண்டும்..
தொல்காப்பியர் எனப்படும் த்ருண தூமாக்கினி முனிவர் எழுதிய தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகப்பழைய நூல் என்று பெரும்பாலோர் செப்புவர். இவருடைய காலம் பற்றிய வேறுபட்ட கருத்துக்களை ‘தொல்காப்பியர் காலம்’ என்ற தொடர் கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இவர் பற்றி உலகப் புகழ் உரைகாரர் , ‘உச்சிமேற் புலவர் கொள் , நச்சினார்க்கினியர்’ ஒரு கதை சொல்கிறார்.
தொல்காப்பியரின் இயற்பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றும் அவர் அகத்தியர் சீடர் என்றும் சொல்லிவிட்டு தொல்காப்பிய பாயிர உரையில் ஒரு சுவையான கதையைச் சேர்த்து இருக்கிறார். அது என்ன கதை?
“ஏ , சீ டா , தொல்காப்பியா ; இங்கே வா! என் மனைவி லோபாமுத்ரா விதர்ப்ப (மத்திய பிரதேச மாநிலம்) நாட்டு அரசி ; அவளைப் போய் அழைத்துவா. ஒரு முக்கியமான விஷயம் ; குருவின் மனைவி மீது கை பட்டுவிடக்கூடாது ; ஆகையால் நாலு கழி / கோல் நீள த்துக்குத் தள்ளியே நடந்துவா” என்று கட்டளை இட்டார்.
அப்படியே ஆகட்டும் குருவே என்று சொல்லிவிட்டு, த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட தொல்காப்பியர் 99 சதவிகிதம் பணியை செவ்வனே செய்து முடித்தார். மதுரைக்கு வருகையில் வைகை நதி வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடியது. ‘தொல்’.லுக்கு பெரிய தொல்லை ! உடனே பேரழகி, விதர்ப்ப நாட்டு அரசி லோபாமுத்ராவை நோக்கி, “தாயே ஓர் கழியின் ஒரு புறம் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். மறுபுறத்தை நான் பிடித்துக் கொள்கிறேன் ; உங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் காப்பது என் கடமை” என்று சொல்லி வெற்றிகரமாக அழைத்தும் வந்தார்.
அகஸ்திய முனிவரிடம் அவர்தம் மனைவியை ஒப்படைக்கையில் வைகை வெள்ளத்தை வெற்றிகரமாக கடந்து வந்த சாதனை பற்றி விதந்து ஓதினார் . “அடப்பாவி ; நாலு கழி இடைவெளி இருக்க வேண்டும் என்று சொன்னேனே ; ஒரு கம்பு நீளம் தான் இருந்தது என்று சொன்னாயே ; நீ சொர்க்கத்துக்கு போக மாட்டாய்; தொலைந்து போ” என்று சபித்தார். த்ருண துமாக்னிக்கும் கோபம் வந்தது .
“என்ன குருவே , எல்லை மீறிப் போகிறீர் ! செய்யாத தப்புக்கு சாபமிடுவது முறையோ ? இது தகுமோ? இந்தா , பிடி சாபம் ! நீ வீரும் சொர்க்கத்தைக் காண மாட்டீர்” — என்று சாபம் இட்டார்.

இது ‘நச்சி.’ சொல்லும் கதை. 600 ஆண்டுப் பழமையான கதை. தொல்காப்பியர் பிராமணர் என்பது உண்மையே. அவர் உலகப் புகழ் பெற்ற ‘காவ்ய கோத்திர’த்தில் வந்ததால் ‘காப்பிய’ என்ற அடைமொழி பெற்றார் என்பர் ஆன்றோர். ‘காப்பியாற்றுக் காப்பியனார்’ என்ற வேறு ஒரு சங்கப் புலவரும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
‘நச்சி.’ சொல்லும் கதைக்கு வேறு எங்கும் ஆதாரமில்லை. மேலும் அவர் சொல்லும் ரிக் வேத அகஸ்தியர் – லோபா முத்திரை காலத்தில், தொல்காப்பியர் இருந்திருக்க முடியாது. ‘தொல்’. காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரையே அறிஞர் பெருமக்கள் வைப்பர். இது தவிர தொல் பற்றிய சம்ஸ்கிருத பெயர் சரியா? அதுவும் த்ருண பிந்துவும் , தூமாக்னியும் ஒருவரா என்றும் ஆராய வேண்டும்.
இவ்விஷயத்தில் மேலும் ஆராய்ச்சி செய்ய, நாம் த்ருண பிந்து பற்றிய கல்வெட்டுகளைப் படிக்கவேண்டும். பின்னர் மைசூர் முதலான கோவில் சரிதங்களில் அடிபடும் முனிவர் இவர்தானா எனக் காண வேண்டும். அதற்குப் பின்னர் அகத்தியர் சிலையுடன் ஒட்டி உறவாடும் இவர் தொல்காப்பியர் தானா என்று பார்க்க வேண்டும். அப்படி ஆதாரம் கிடைக்குமேயானால் நச்சி. ‘கப்ஸா’ அடிக்கவில்லை உண்மைதான் விளம்பினார் என்ற முடிவுக்கு வரலாம்.

வாழ்க தமிழ்! வளர்க தொல்காப்பியன் புகழ்!!
tags – இந்தோனேஷியா, தொல்காப்பியர் சிலை, த்ருண பிந்து சிலை, ஜாவா