
Post No. 8481
Date uploaded in London – – –10 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் பற்றிய மூன்று பகுதி குறுந்தொடரில் இது இரண்டாவது கட்டுரை!
திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 2
ச.நாகராஜன்
- வள்ளலார் கருங்குழியில் இருந்த சமயம் பாலு ரெட்டியார் என்ற அன்பர் அவரை அணுகி தான் குஷ்ட நோயால் வருந்துவதைச் சொல்லி அதைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டினார். சுவாமிகளும் உடனே அவருக்கு திருநீறு கொடுத்து அருள் பாலிக்க அவர் குஷ்டம் நீங்கியது.
- முத்து நாராயண ரெட்டியார் என்பவர் கண் பார்வையற்று வருந்தினார். சுவாமிகளிடம் தன் குறையைச் சொல்லவே அவருக்கு திருநீறு கொடுக்கவே அவருக்குக் கண் பார்வை வந்தது. இதனால் மனம் மிக மகிழ்ந்த ரெட்டியார் தன் செல்வம் முழுவதையும் அவர் பெயருக்கு எழுதி வைப்பதாகச் சொன்னார். அதை ஏற்க மறுத்த சுவாமிகள், ‘சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு எழுதி வைத்து விடுங்கள்’, என்றார்.
- ஒரு சமயம் அன்பர் ஒருவருடன் செஞ்சி மலைக்குச் சென்றார் சுவாமிகள். அன்பர் பசியால் வருந்த உடனே ஒரு லட்டையும் செம்பு நிறைய நீரையும் வரவழைத்துக் கொடுத்தார்.
- கூடலூரில் அப்பாசாமி செட்டியார் என்ற அன்பருக்கு வாழைத் தோட்டம் ஒன்று இருந்தது. அதில் சென்ற போது சுவாமிகளை பேயன் வாழைமரத்திலிருந்த பாம்பு ஒன்று தலையில் தீண்டி விட்டது. அனைவரும் பதறினர். பாம்பைக் கொல்ல எத்தனித்தனர். சுவாமிகள் ‘அது தானாகவே இறந்து விடும். அது இறப்பதற்காகவே என்னைத் தீண்டியது’, என்றார். பாம்பின் விஷம் சுவாமிகளை ஒன்றும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் பாம்பு இறந்தது.



- கூடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் ஒரு சமயம் சுவாமிகள் ஒரு அறையில் இருந்தார். அப்போது ஒரு மனிதர் தங்கு தடையின்றி உள்ளே நுழைந்து சுவாமிகள் இருந்த அறைக்குள் சென்றார். அவரை எங்கேயும் காணாததால் சுவாமிகளை வினவ, “அவர் ஒரு சித்தர். என்னைக் காண வந்தார். இந்நேரம் காசியில் இருப்பார். இதோ அவர் கொடுத்த லட்டு” என்றார் சுவாமிகள்.
- உள் நாக்கு வளர்ந்து பெரும் துன்பமுற்ற ஜவுளி வியாபாரி ஒருவர் சுவாமிகளிடம் தன் குறையைச் சொல்ல அவர், அதைத் திருநீறு கொடுத்தே தீர்த்தருளினார்.
- அதே போல கண் நோயினால் முகம் வீங்கித் தவித்த ஒருவர் சுவாமிகளை அணுக, பக்கத்திலிருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, “இதை வைத்துக் கட்டு” என்றார். அவர் சொன்னது போலவே வாழைப்பழத்தை வைத்துக் கட்டியவுடன் நோயும் நீங்கியது.
- வேட்டவலம் என்னும் ஊருக்கு ஜமீந்தாராக விளங்கியவர் அப்பாசாமி. அவருக்கு இரு மனைவிகள். ஒரு மனைவியை பிரம்மராக்ஷஸ் பிடித்துக் கொண்டது. இன்னொரு மனைவியை மகோதர நோய் வருத்தியது. ஏராளமான பொருட்செலவில் பூசாரிகள், மந்திரவாதிகள் வைத்தியர்கள் உள்ளிட்டோர் வந்து பார்த்த போதும் பிரம்ம ராக்ஷஸ் போகவில்லை; மகோதர நோயும் போன பாடில்லை. ஜமீந்தார் சுவாமிகளைத் தனது அரண்மனைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். சுவாமிகளும் இசைந்தார். ஜமீந்தார் இரு நாற்காலிகளை தயார் செய்தார். தான் நினைத்த நாற்காலியில் சுவாமிகள் அமர்ந்தால் தனக்கு நல்லது நேரும் என்று அவர் நினைத்து அப்படிச் செய்தார். சுவாமிகளை எதிர் கொண்டழைத்த ஜமீந்தாரின் மனைவி அவரிடமிருந்து திருநீறை வாங்கியவுடன் அவரைப் பிடித்த பிரம்மராக்ஷஸ் அகன்றது. ஜமீந்தார் கண்ணீர் வடித்தார். அவர் நினைத்த நாற்காலியிலேயே வள்ளலார் அமர்ந்தார். அவரது இன்னொரு மனைவிக்கு மூன்று வேளை திருநீறு கொடுக்க அவரது நோயும் தீர்ந்தது.
- அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வப்பொழுது இரும்பு, ஈயம், செம்பு ஆகிய உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் காண்பிப்பார் சுவாமிகள். பின்னர் யாரும் அதை எடுக்காதபடி கேணிகளிலும் குளங்களிலும் எறிந்து விடுவார். அவருடனேயே இருந்த வேம்பையர் என்பவர் சுவாமிகள் உலோகங்களை மாற்றும் விதத்தையும் அதற்கென அவர் கொண்டிருந்த பொருள்களையும் நன்கு கவனித்து வந்தார். அந்தப் பொருள்களைச் சேகரித்து தானும் மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயன்றார். அவர் கண் பார்வை உடனே மங்கி ஒளியை இழந்தது. என்ன செய்தும் கண் பார்வை வரவில்லை. சுவாமிகளிடம் வந்து தான் செய்த தவறை ஒளிக்காமல் சொல்லி மன்னிப்பு வேண்டினார் அவர். சுவாமிகள் நீரை எடுத்து அவர் கண்ணில் பூசவே கண்ணொளி அவருக்கு மீண்டது.
- விருத்தாசலத்தில் வசித்து வந்தவர் வேங்கடேச ஐயர் என்பவர். அவர் ஒரு வக்கீல். ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமிகள் ஆற்றும் பிரசங்கங்களுக்குத் தவறாமல் வருகை புரிந்து அதைக் கேட்டு முடிந்த பின்னர் இரவு நேரத்தில் மூன்று மைல் தூரமுள்ள காட்டுப் பாதையைக் கடந்து அவர் ஊர் திரும்புவது வழக்கம். காட்டுப் பாதையில் செல்லும் போது அவர் முன்னர் (ஆள் யாரும் இல்லாமல்) இரு தீவட்டிகள் மட்டும் போய்க் கொண்டிருக்கும். அதை ஏந்துபவர் யாரும் இருக்க மாட்டார்கள். சுவாமிகளின் அருட்செயலே இது என்பதை உணர்ந்த ஐயர் வடலூருக்கு வந்து அங்கேயே தங்கி சுவாமிகளின் பூரண அருளுக்குப் பாத்திரர் ஆனார்.
- சுவாமிகளின் சத்திய தரும சாலையில் ஒரு நாள் இரவு திடீரென்று நூறு பேர் வந்து சேர்ந்தனர். சமையல் எல்லாம் முடிந்து அனைவரும் உண்ணும் தருணம் அது. என்ன செய்வது என்று அனைவரும் தவித்தனர். ‘பிச், இலை போடுங்கள் எல்லோருக்கும்’ என்று கூறிய சுவாமிகள் தானே அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார். இருந்த உணவு நூறு பேருக்கும் போதுமானதாக இருந்தது. அனைவரும் திருப்தியுடன் உண்டனர்.
*** அற்புதங்கள் தொடரும்

tags — வள்ளலார், அற்புதங்கள்! – 2