
Post No. 8486
Date uploaded in London – – –11 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் பற்றிய மூன்று பகுதி குறுந்தொடரில் இது மூன்றாவது (இறுதிக்) கட்டுரை!
திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 3
ச.நாகராஜன்
- ஒரு சமயம் வள்ளலார் பெருமான் திருவாதிரை தரிசனத்திற்காக சிதம்பரம் செல்லுகையில் வழியில் ஒரு மனிதன் குன்ம நோயால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கருணை கொண்டார். அவரது அருளால் அப்போதே அம்மனிதனின் வியாதி நீங்கியது.
- வடலூரில் ஒரு சமயம் மழை இல்லாமல் போனது. அனைவரும் வருந்துவதைக் கண்ட சுவாமிகள் நான்கு செவி மழை பொழிய அனுக்கிரகித்தார். அதே போல புதுப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சுவாமிகளை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இரண்டு கிணறுகளிலும் நீர் இன்மையைச் சொல்லி அருள் புரிய வேண்டினர். சுவாமிகள் அனுக்கிரகம் செய்தார். உடனே இரு கிணறுகளும் நிரம்பியதோடு அவற்றின் நீரும் இனிமையானது. அந்தக் கிணறுகள் இன்று வரை வற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
- ஒரு இரவில் சுவாமிகளும் மஞ்சக்குப்பம் கோர்ட்டு சிரஸ்தார் இராமச்சந்திர முதலியாரும் ஒரு மாட்டு வண்டியில் ஏறி வடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் சென்று கொண்டிருந்தனர். வழியில் சில கள்வர்கள் வண்டியை மறித்தனர். முதலியார் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழட்டுமாறு அவர்கள் அதட்டினர். சுவாமிகள் அக்கள்வரை நோக்கி ‘அவசரமோ’ என்றார். அவரை அடிக்க கள்வர் கையை ஓங்க, ஓங்கிய கைகள் அப்படியே நின்றன. அவர்களின் கண் பார்வையும் போனது. பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் மன்னிக்குமாறு வேண்ட ‘பிச்’ என்னும் மகா மந்திரத்தை சுவாமிகள் கூறினார். இழந்த பார்வையை மீண்டும் பெற்ற கள்வர்கள் அன்று முதல் களவுத் தொழிலை விட்டு விட்டு சன்மார்க்க நெறியில் நின்றனர்.
- குறிஞ்சிப்பாடியில் உள்ள வணிகர் ஒருவர் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜலங்கழிக்க மறைவில் ஒதுங்கும் போது புற்றரவு ஒன்று அவரைத் தீண்டி விட்டது. உடனே அவர் “இராமலிங்கத்தின் மீது ஆணை” என்று கூறவே அப்பாம்பு புற்றில் நுழையாமல் அப்படியே நின்று விட்டது. அதை அவர் கவனியாமல் பயந்து அங்கிருந்து விரைவாக அகன்று வீடு போய்ச் சேர்ந்தார். விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அவர் வடலூர் வந்து சுவாமிகளை தரிசனம் செய்த போது, “அட, பிச்! ஒரு உயிரை எத்தனை நாள் தான் பட்டினி போடுகிறது?! மூன்று நாட்கள் ஆயிற்றே. உடனே போய் ஆணையை விடுதலை செய்யும்!” என்றார் சுவாமிகள். வியப்படைந்த அந்த வணிகச் செட்டியார் உடனே பாம்பு இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு புற்றின் வாயிலில் பாம்பு பரிதாபமாக படுத்துக் கிடந்தது. செட்டியார் ஆணையை விடுதலை செய்ய பாம்பு புற்றுக்குள் நுழைந்தது.



- சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமான தேவநாயகம் பிள்ளை என்பவரின் ஒரே புதல்வரான ஐயாசாமி என்பவர் நோய்வாய்ப்பட்டார். இருபது வயதே ஆன அவரை வைத்தியர்கள் கை விட்டு விட்டனர். அவர் ‘ஒ’வென்று அரற்றி சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனை செய்தார். அன்று இரவே 11 மணிக்குப் பின்னர் அவர் இல்லம் வந்து சேர்ந்த சுவாமிகள் அவருக்கும் புதல்வருக்கும் திருநீறு கொடுத்து அருளி, “நாளை குணமாகும்” என்றார். மறு நாள் வியாதி குணமானது.
ஆனால் அவர் தேவநாயகம் வீட்டில் இருந்த அதே சமயம் வடலூர் சத்திய தரும சாலையில் சுவாமிகள் உபந்யாசம் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். இது பின்னால் தெரிய வர அனைவரும் இரு இடங்களில் ஒரே சமயத்தில் அவர் இருந்ததை எண்ணி பிரமித்தனர்.
- இளம் வயதான் இஸ்லாமிய சிறுவன் ஒருவன் உடலில் எண்ணெயைத் தடவிக் கொண்டு ஆங்காங்கே பஞ்சை ஒட்ட வைத்து சுவாமிகளிடம் வந்து விளையாட்டாக, ‘எனக்கு உடம்பெல்லாம் சிரங்குங்க, நீங்க தீர்க்கணுங்க” என்றான். சுவாமிகள் “தீர்ந்து விடும், போ” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். அவன் வீடு போய்ச் சேர்வதற்குள் பஞ்சு ஒட்ட வைத்த இடமெல்லாம் பெரும் சிரங்குகள் உண்டாகி அவன் துன்பம் அடைந்தான். துன்பம் பொறுக்க முடியாத நிலையில் சுவாமிகளிடம் வந்து முறையிடவே, சுவாமிகள் அவனிடம் சாலையில் உள்ள கிணற்று தீர்த்தத்தில் முழுகும்படி கூறினார். அவனும் தீர்த்தத்தில் முழுகினான். சிரங்குகள் அகன்றன.#
- ஒரு நாள், வெளியே சென்ற சுவாமிகள் வரவில்லையே என்று எண்ணிய வேலூர் சண்முகம் பிள்ளை என்பார் சாலையை விட்டு வெளியே போய்ப் பார்த்தார். அங்கே சுவாமிகளுடைய அங்கங்கள் எல்லாம் தனித்தனியே கிடந்தன. ஐயோ என்று அலறி அந்த அன்பர் புலம்பித் தவித்த வேளையில் சுவாமிகள் திடீரென்று அவர் கண் முன்னே தோன்றினார்., “இனி நீர் இது மாதிரி வந்து பார்க்காதீர்” என்று அவரை சுவாமிகள் எச்சரித்தார். அவரும் மகிழ்ச்சியுடன் சுவாமிகளைப் பின் தொடர இருவரும் சத்திய தரும சாலையை அடைந்தனர்.
- ஒரு நாள் வடலூருக்கு அருகில் இருந்த குள்ளஞ்சாவடிக்குப் பெருமானார் சென்றார். அங்குள்ள அன்பராகிய இஸ்லாமிய போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் புது வஸ்திரம் ஒன்றை பெருமானாருக்குக் கொடுத்து அதை அணிந்து கொள்ளுமாறு வேண்டினார். அவரும் அதை அணிந்தார். அன்று இரவு அவர் படுத்திருந்த போது திருடன் ஒருவன் அந்த வஸ்திரத்தை மெல்ல இழுத்தான். இதைக் கண்ட கான்ஸ்டபிள் அவனைப் பிடித்து தண்டிக்க முயன்றார். அவரைத் தடுத்த சுவாமிகள் அந்த புது வஸ்திரத்தை அந்தக் கள்வனுக்கே கொடுத்து அனுப்பினார்.
- சாலையில் இருந்த சில அன்பர்களுக்கு சுவாமிகளை போட்டோ எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. சென்னையில் உள்ள மாசிலாமணி முதலியார் முதலானவர்களைக் கொண்டு எட்டு தரம் போட்டோ படம் பிடித்தனர். ஆனால் ஒரு தடவையும் அவர் உருவம் படமாகவில்லை. சுத்த தேகத்தை எப்படிப் படம் பிடிக்க முடியும்?
வள்ளலார் வாழ்வில் நடந்த இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொழுவூர் வேலாயுத முதலியார் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.
மிக பிரம்மாண்டமான ஒரு மஹா புருஷர் தமிழ் மண்ணில் தோன்றி ஆயிரக் கணக்கான பாடல்களை அருளி இருக்கிறார் என்பது தமிழர்கள் செய்த புண்ணியமே.
வள்ளலாரைப் படித்து அவர் காட்டும் சன்மார்க்க நெறி வழி அனைவரும் நடப்போம்; உயர்வோம்!
*** இத்தொடர் நிறைவுற்றது
tags – வள்ளலார், அற்புதங்கள்! – 3