
Post No. 8668
Date uploaded in London – – –12 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹாபாரத மலர்!
மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது? மஹாபாரதம் படிப்பதால் என்ன பயன்?
ச.நாகராஜன்
மஹாபாரதம் – பெயர்க் காரணம்!
இது மஹத்தாக இருப்பதனாலும் (பெரிதாக இருப்பதாலும்), பாரமாக இருப்பதனாலும் (கௌரவமுள்ளதாக இருப்பதாலும்) மஹா பாரதம் என்று சொல்லப்படுகிறது.
மஹாபாரதம் இயற்ற எவ்வளவு காலமாயிற்று?
பிரபுவும், பகவானுமான வியாஸ முனிவர் சிறந்ததும், புண்யமுமான இந்த பாரதம் முழுவதையும் மூன்று வருஷங்களில் செய்தார்.
வியாஸரின் பெருமை என்ன?
ஸத்யவாதி. ஸர்வஜ்ஞர். விதியை அறிந்தவர். தர்மத்தைப் பற்றிய ஞானம் உள்ளவர். வித்வான். அதீந்திரியர். (இந்திரியங்களை வசப்படுத்தியவர் என்று பொருள்). பரிசுத்தர். தவத்தால் பரிசுத்தமாகச் செய்யப்பட்ட சித்தத்தைக் கொண்டவர். ஐஸ்வர்யத்தில் நிலை பெற்றவர். ஸாங்கியமும் யோகமும் உள்ளவர். அநேக தந்திரங்களை (ஸித்தாந்தங்களை) நன்கு அறிந்தவர்.
பாண்டவர்களின் பராக்ரமம், செல்வம், கீர்த்தி ஆகியவற்றையும் வாசுதேவ கிருஷ்ணனது விளையாட்டையும் , அனைத்து தேவர்களின் பிறப்பையும் ஸாயுஜ்யத்தையும் உலகில் பிரபலப்படுத்துபவர். திவ்ய திருஷ்டியினால் அனைத்தையும் கண்டு மஹாபாரதத்தை இயற்றியவர்.

இதைக் கேட்பதால் என்ன பயன்?
எவன் ஒருவன் இந்த வேதத்தை (மஹாபாரதத்தை) முழுவதும் மனவடக்கத்துடன் கேட்பானோ அவனுடைய பிரம்மஹத்தியினால் ஏற்பட்ட பாவமும் அந்தக் கணத்திலேயே அழிகிறது.
மஹாபாரதத்தையும் புராணங்களையும் ஒப்பிட்டால் பாரதத்தின் பெருமை என்ன?
பதினெட்டு புராணங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் (ஆறு) அங்கங்களுடன் கூடிய வேதங்களும் ஒரு தட்டிலும் மஹாபாரதம் ஒரு தட்டிலும் (சமமாக) இருக்கின்றன!
மஹாபாரதத்தின் ஏனைய பெருமைகள் என்னென்ன?
ஜயம் என்ற பெயரை உடைய இந்த மஹாபாரதத்தை எப்பொழுதும் பக்தியுடன் கேட்டால் அப்படிக் கேட்டவனுக்குச் செல்வமும், புகழும், கல்வியும் எப்போதும் சேர்ந்தே உண்டாகின்றன.
அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது.
இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை.
ஜயம் என்ற பெயரை உடைய மஹாபாரதமானது எப்பொழுதும் எவ்விடத்தில் படிக்கப்படுகின்றதோ அவ்விடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றன.
பாரதத்தைச் சொல்லுகின்றவனையும், கேட்பவர்களையும், எழுதுகின்றவர்களையும், சித்தர்களும், பரம ரிஷிகளும் மிக்க சந்தோஷத்துடன் பூஜிக்கின்றார்கள்.
மஹாபாரத்தைச் சொல்பவனை இவ்வுலகில் எந்த மனிதர்கள் பூஜிக்கவில்லையோ அவர்களுடைய எல்லா நற்கர்மங்களும் நசித்து விடும்.
அவர்களைத் தேவர்களும் சபிப்பர்.
ஜயம் என்ற பெயருள்ள இந்த இதிஹாஸமானது வெற்றியை விரும்புகின்ற அரசனாலும், அரச குமாரர்களாலும், கர்ப்பிணிகளாலும் கேட்கத் தக்கது.
ஸ்வர்க்கத்தை விரும்புகின்றவன் ஸ்வர்க்கத்தை அடைவான்.
ஜயத்தை விரும்புகின்றவன் வெற்றியை அடைவான்.
கர்ப்பிணியானவள் புத்திரனையாவது மிக்க பாக்கியமுள்ள புத்திரியையாவது அடைவாள்.
மஹாபாரதத்தில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன?
வியாஸர் நான்கு வேதங்களையும் அவற்றைக் காட்டிலும் வேறான அறுபது லக்ஷம் சம்ஹிதைகளையும் செய்தார். அவற்றுள் முப்பது லக்ஷம் சம்ஹிதைக்ள் தேவ லோகத்திலும் பித்ரு லோகத்தில் பதினைந்து லக்ஷம் சம்ஹிதைகளும், யக்ஷ லோகத்தில் பதினான்கு லக்ஷம் சம்ஹிதைகளும் வைக்கப்பட்டன. ஒரு லக்ஷம் சம்ஹிதைகள் மானிட லோகத்தில் சொல்லப்பட்டன.
இதை யார் யார் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், யக்ஷர்களுக்கும், மனிதர்களுக்கும் சொன்னார்கள்?
இதை நாரதர் தேவர்களுக்குச் சொன்னார். அஸிதர் என்னும் தேவலர் பித்ருக்களுக்குச் சொன்னார். சுகர் ராக்ஷஸர்களுக்கும் யக்ஷர்களுக்கும் சொன்னார். வைசம்பாயனர் மனிதர்களுக்குச் சொன்னார்.
*
மஹாபாரதத்தின் இப்படிப்பட்ட பெருமையை ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் இறுதி அத்தியாயமான ஐந்தாம் அத்தியாயத்தில் காணலாம். இக்கட்டுரையில் அந்த அத்தியாயத்தின் சுருக்கமே தரப்பட்டுள்ளது.
tags — மஹாபாரதம் , பயன், பெருமை
–subham—