
மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 2
ச.நாகராஜன்
ஆபஸ்தம்பரைப் பற்றி பிரம்ம புராணம் கூறும் இன்னொரு சம்பவம் இது :
ஒரு முறை அகஸ்திய மஹரிஷி ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு வந்தார்.ஆபஸ்தம்பர் தன் சிஷ்யர்களோடு கூட அகஸ்தியரை நன்கு வரவேற்று உபசரித்தார்.
பின்னர் அவரிடம் கேட்டார்: “ஓ! மஹரிஷியே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்த மூவரில் எவர் மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்? எவரிடமிருந்து சுகானுபவத்தையும் முக்தியையும் அடைய முடியும்? எவர் அன்ன தாதா? எவர் அழிவற்றவர்? எவர் தேவர்களுக்கெல்லாம் தேவர்? எவர் யாகங்களால் பூஜிக்கப்படுகிறார்? வேதங்கள் யாருடைய புகழை விசேஷித்துச் சொல்கின்றன? எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தேகங்களைத் தயவுசெய்து தீர்த்தருள்வீராக.”
அகஸ்தியர் உடனே அவரை நோக்கிப் பின்வருமாறு நீண்ட பதிலை உரைத்தார்:” அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட வேத சப்தமே முக்கியமான பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. வேதத்தால் எவர் துதிக்கப்படுகிறாரோ அவரே பராத்பரர்.
அபரர் என்பது யார் என்றால் ம்ருதர் – அதாவது அழியை அடைபவர்.
பரர் என்பது யார் என்றால் அம்ருதர் – அதாவது அழிவை அடையாமல் என்றும் இருப்பவர்.
எவர் சரீரம் இல்லாதவரோ அவரே பரர்.
சரீரமுள்ளவர் அபரர்.
அபரன் என்பது குணம், ரூபம், வியாபகம் ஆகிய இவற்றின் வேறுபாடுகளினால் – அதாவது பேதங்களால் – மூன்று விதங்களாக மாறுகிறது. ஒருவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாகச் சொல்லப்படுகிறார். இம்மூன்று பேர்களில் அறியத்தக்கதான பதார்த்தம் ஒன்று தான். அது தான் பரம் என்று சொல்லப்படும். அந்தப் பரம் என்ற பொருளே உலகத்தின் நன்மையின் பொருட்டு வியாபகம், குணம், செயல் ஆகிய பேதங்களாக இப்படி மூன்று ரூபங்கள் உள்ளதாக ஏற்படுகிறது.
இதுவே முக்கியமான உண்மை.
இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வித்வான். (கற்றறிந்தவன்)
இந்த விஷயத்தில் எவன் ஒருவன் பேதத்தைச் சொல்கிறானோ அவன் லிங்கபேதி என்று சொல்லப்படுகிறான்.
அப்படிப்பட்டவனுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.
இந்த மூன்று தேவர்களுடைய மூர்த்தி பேதமானது வேதத்தில் தனித்தனியே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீரம் இல்லாமல் இருக்கும்படியான அந்த ஒரே பதார்த்தமாகிய பரம் மேற்சொன்ன மூன்றிலும் மேலானதாகும்.”
என்று இப்படி முடித்த அகஸ்தியரை நோக்கி ஆபஸ்தம்பர் கேட்டார்:” நீங்கள் கூறிய இந்த பதிலில் எனக்கு எந்த வித நிச்சயமும் ஏற்படவில்லை. என்றாலும் கூட அதற்குள் ரகசியமாய் இருக்கும் விஷயத்தை எனக்குச் சொல்வீராக!”
அகஸ்தியர் உடனே, “ இந்த மூன்று உலகங்களிலும் ஒருவருக்கொருவர் பேதம் என்பதே கிடையாது. என்றபோதிலும் மங்கள ரூபமாய் இருக்கின்ற சிவனிடமிருந்தே எல்லா சித்திகளும் உண்டாகின்றன. அவரே இந்த ஜெகத்திற்குக் காரணம். அவரே ஜோதி ரூபமாக விளங்குகிறார். ஆகவே தண்டகாவனத்தில் உள்ள கௌதமி நதிக்கரை ஓரத்தில் சேவிப்பவர்களின் பாவத்தைப் போக்கும் பரமசிவன் இருக்கிறார். அங்கு சென்று மிகுந்த பக்தியுடன் அவரை பூஜித்து வாரும்” என்றார்.
இதைக் கேட்ட ஆபஸ்தம்பர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
நேராக கங்கை நதிக்குச் சென்று அங்கு ஸ்நானம் செய்து பரமசிவனை நோக்கி இப்படித் துதித்தார்:-
“ கட்டைகளில் நெருப்பும், மலர்களில் வாசனையும், விதைகளில் மரமும், கற்களில் தங்கமும் போல எல்லாப் பிராணிகளிலும் எவர் மறைந்திருக்கிறாரோ அப்பேர்ப்பட்ட சோமநாதரை நான் சரண் அடைகிறேன்.
எந்த பரமசிவன் விளையாட்டினால் ஜெகங்களை சிருஷ்டித்து காப்பாற்றி வருகிறாரோ, எவர் விஸ்வரூபரோ, எவர் ஸத்துக்கும், அஸத்துக்கும் மேலானவரோ, எந்த ஒருவரை நினைத்த மாத்திரத்தில் ஒருவன் தரித்திரம், பாபம், சாபம், ரோகம் ஆகியவற்றின் கொடுமைகளிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கிறானோ எவரால் ஆதியில் பிரம்மா முதலியவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை அறிந்து அதில் ஆசை கொண்டார்களோ, யாரால் இவ்விதம் இரு சரீரங்களை அடைந்தார்களோ, மந்திரத்தினால் பரிசுத்தமாயிருக்கிற நமஸ்காரமும் அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட பதார்த்தமும் எவரைச் சென்று அடைகிறதோ, எவரைக் காட்டிலும் வேறொரு பிரசித்தமான வஸ்து இல்லையோ, எவரைக் காட்டிலும் பெரிது, சிறிது வேறொன்றும் இல்லையோ, எவரது ஆணையால் இந்த உலகம் ஆச்சரியகரமாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ, எவரிடத்தில் ஐசுவரியம், கர்த்தத்வம், மகத்துவம், அன்பு, கீர்த்தி, சுகம், சாஸ்வதமான தர்மம் ஆகிய அனைத்தும் இருக்கின்றனவோ, யார் எல்லோரையும் காக்கிறாரோ, சரணம் அடைந்தவர்களிடம் யார் ஒருவர் பிரியமுடன் இருக்கிறாரோ அந்த சோமேஸ்வரரை நான் சரணடைகிறேன்.”
இந்த ஸ்தோத்திரத்தினால் மகாதேவர் சந்தோஷமடைந்து ஆபஸ்தம்பர் முன் தோன்றினார்.

ஆபஸ்தம்பர் மகாதேவரிடம், “ யார் ஒருவர் இவ்விடத்தில் ஸ்நானம் செய்கிறார்களோ, அவர்கள் இஷ்டப்படி அனைத்தையும் அடைய வேண்டும்” என்று தனக்காகவும் மற்ற அனைத்து மக்களுக்காகவும் இப்படி வேண்டினார்.
பரமசிவனும்,” அப்படியே ஆகுக” என்று கூறி அனுக்ரஹித்தார்.
அது முதல் அந்த தீர்த்தம் ஆபஸ்தம்ப தீர்த்தம் என்ற பெயரில் பிரஸித்தம் அடைந்தது.
அதில் ஸ்நானம் செய்பவர்கள் வெகு காலம் தன்னைத் தொடர்ந்து வரும் அஞ்ஞான இருளிலிருந்து நீங்கி ஞான ஒளியைப் பெறுவான் என்ற நிலை உருவானது.
மஹரிஷி ஆபஸ்தம்ப சூத்ரத்தை அனுஷ்டிப்போர் இன்றும் ‘ஆபஸ்தம்ப சூத்ர:’ என்று தங்கள் சூத்ரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது.
*** (முற்றும்)
tags —ஆபஸ்தம்பர்! –2