
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8794
Date uploaded in London – – –10 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BY ச.நாகராஜன்
வாலிப காசி என்று புகழப்படும் இடம் எங்குள்ளது தெரியுமா?
அது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் உள்ளது.
பவானி நதி காவேரியுடன் கலக்கின்ற இடத்தைக் கூடுதுறை என்பர். கிரகண காலங்களில் மக்கள் வந்து அதில் ஸ்நானம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். இதனால் பொன்னுலகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஆலயம் தான் திருநண்ணாவூர். பவானி என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதுவே வாலிப காசி எனப்படுகிறது.
இதை கொங்கு மண்டல சதகம் தனது 14ஆம் பாடலில் கூறி பெருமைப்படுகிறது.
பாடலைப் பார்ப்போம்:-
காலி லரவ மிருசுட ரைப்பற்றுங் காலத்திலே
மேலுல கம்பெறு வோர் புனல் மூழ்க விரும்புவதுங்
கோல மிகுந்தப வானியும் பொன்னியுங் கூடுதுறை
வாலிப காசி நண் ணாவூர் பயில்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :-
பொன்னுலகத்தைப் பெற விரும்புகின்ற சீலர்கள், சூரிய சந்திர கிரகண காலங்களில் பவானி நதி காவேரியுடன் கலக்கின்றதான கூடுதுறையில் முழுகுகிறார்கள். அந்த வாலிப காசியான திருநண்ணாவூர் இருப்பதும் கொங்கு மண்டலத்திலே தான்.
பவானி கூடல் என்பது திரிவேணி சங்கமமாகும். காவேரி நதியே கங்கை நதி.

பவானி நதியே யமுனை. பராசர முனிவரால் உண்டாக்கப்பட்ட ஆலயத்திலிருந்து வரும் அமுத நதியே காசி க்ஷேத்திரத்தில் உள்ள பவானியாகும்.
ஆதலால் இந்த மூன்று நதிகள் கூடவே திரிவேணி சங்கமம் ஆயிற்று.
திருநண்ணாவூர் அமைந்துள்ள இடம் கொங்கு மண்டலத்தில் உள்ள வடகரை நாடு ஆகும்.
பவானித் தல புராணம் இப்படிக் கூறிச் சிறப்பிக்கிறது இதை:-
“பொன்னியே கங்கை யமுனையே பவானி பொருவரும் பராசரன் வகுத்த
மின்னவி ரமுத நதியதே வானி யல்லது வேறல விந்தத்
தன்னிகர் பிறிதில் தலந்திரி வேணி சங்கம மாதலாற் றென்பாற்
கன்னிமா மதில்சூழ் காசியின் மேலாய்க் கவிமிக் கடிநக ரன்றே
திருநணா என்று சுருக்கி அழைக்கப்பட்ட இந்த தலத்தின் மகிமை பற்றி மூவர் தேவாரத்திலிருந்தும் அறியலாம்.
முக்கூடலில் அமைந்துள்ள கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டால் ஒரு தீமையும் நண்ணாது என்ற கருத்தில் திருநண்ணாவூர் என்ற பெயர் அமைந்துள்ளது.
நணா (பவானி) பற்றி ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தின் சில பாடல்களைக் கீழே காணலாம்:
முத்தேர் நகையா ளிடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்சடையில்
வைத்தாரிடம் போலுஞ் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா
லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யென முரலக் கேட்டார்
வினை கெடுக்குந் திருநணாவே
வில்லார் வரையாக மாநாகம்
நாணாக வேடங் கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க்
கிடம்போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழல் மேற்’
கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல
அருள் புரியுந் திரு நணாவே
கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரும்
ஞானசம் பந்தன் எண்ணும்
சொல்வித் தகத்தால் இறைவன்
திருநணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தான் மொழிவார்
பழியிலரிம் மண்ணின் மேலே (இரண்டாம் திருமுறை – ‘பந்தார் விரல் மடவாள்’ எனத் தொடங்கும் பதிகம்)
திருநணா வினை கெடுக்கும்.
திருநணா அருள் புரியும்.
திருநணா ஏத்து பாடல் வல் விகத்தால் மொழிவார் அனைவரும் மண்ணின் மேலே பழியிலராய் வாழ்வர்!

TAGS- வாலிப காசி
***