
Post No. 8862
Date uploaded in London – – –27 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
தேசத்திற்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு!
ச.நாகராஜன்
தொடர்ந்து கொரானா காலத்தில் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.
காலனுக்குக் கண் இல்லை என்பார்கள்; அதனால் தான் அவனுக்கு அந்தகன் என்று பெயர்!
நண்பர் திரு ராகவேந்திர ராவின் மறைவுச் செய்தியை 24-10-20 காலை கேட்டவுடன் மனம் துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. காலனுக்குக் கண் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க மனம் தூண்டியது!
மானனீய கோபால்ஜி மறைந்து சில நாட்களே ஆகி இருக்கின்றன; அதற்குள் இன்னுமொரு இழப்புச் செய்தி!
அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் மதுரை சிம்மக்கல் ஷாகாவைச் சேர்ந்த ராகவேந்திரனும் ஒருவர்.
ஆர் எஸ் எஸ் -இன் சிம்மக்கல் ஷாகா மதுரையில் விறுவிறுப்பாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியிலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் இயங்கிய போது ஏராளமான அரும் ஸ்வயம்சேவகர்கள் அதில் தினமும் தவறாமல் வருகை புரிவர். அவர்களில் பலரும் இன்று பெரிய நிலைகளில் உலகெங்கும் உள்ளனர்.
ராகவேந்திரன் சேதுபதி பள்ளியில் அப்போது மாணவர். திரு சிவராம்ஜியால் கண்டெடுக்கப்பட்ட அவர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் சங்க பிரசாரக்காகவே ஆகி விட்டார்.
இனிமையான முகம். கடுஞ்சொல்லே பேச முடியாத ஒருவரைப் பார்க்க முடியுமா? முடியும் – ராகவேந்திரனே அதற்கு உதாரணம்.
மெல்லிய குரலில் எளிமையுடனும் பணிவுடனும் அன்புடனும் அனைவரிடமும் பழகுவது அவரது இயல்பாக ஆகியிருந்தது.
தேனி உள்ளிட்ட வட்டாரங்களில் அவர் ஷாகாக்களைத் தொடங்கி அரும் பணி ஆற்றினார்.
பின்னர் ஐயப்பன் கோவிலில் பணி; அத்துடன் ஒரு அனாதை இல்லத்தையும் அவர் இயக்கிப் பாதுகாத்து வந்தார்.
அந்த அனாதை இல்லத்திற்குச் செல்லும் ஒரு நல் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
எங்கள் குடும்பத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்; கள்ளம் கபடில்லாமல் இயல்பாக குடும்பத்தில் ஒருவராக அவர் ஆகியிருந்தார்.
மிகப் பெரும் சாணக்யர் என்று மதிக்கப்பட்டவரும், பிரபல வக்கீலானவரும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கேரள, தமிழ்நாட்டுத் தூண்களில் பிரதானமானவருமான மானனீய அண்ணாஜியின் அபிமானம் பெற்றவர் ராகவேந்திர ராவ். வடக்கு வெளி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலும் மாலையிலும் அவரை தினசரி சந்திப்பது பாட்டரியை சார்ஜ் செய்வது போல இருக்கும்; அரும் ஆற்றலைப் பெறும் வாய்ப்பாக இருக்கும். இதில் முதல் ஆளாக இருப்பவர் ராகவேந்திர ராவ் அவர்களே!
எந்தப் பணி என்றாலும் களத்தில் முதல் ஆளாக இறங்குவது அவர் பழக்கம்.
அவர் சிரித்த முகத்தை இனிப் பார்க்க முடியாது; அவர் இனிமையான மென்மைக் குரலை இனி கேட்க முடியாது என்பது அவரை அறிந்திருக்கும் எல்லோருக்கும் ஆழ்ந்த துயரத்தைத் தரும்.
பிரம்மசாரியாக இருந்து தேசப்பணியில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் என்பதால் பாரத அன்னை ஒரு முழு அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட மகனையும் இழந்து விட்டாள் என்பதே உண்மை!
அவர் ஆன்மா சாந்தி அடைய அன்னை மீனாட்சியை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
tags — ராகவேந்திரன், , MADURAI RSS
***