
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9017
Date uploaded in London – – –10 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்?
ச.நாகராஜன்
ராகங்கள் வியாதியைக் குணப்படுத்தும் என்பது மிகப் பழைய செய்தி. பல்வேறு நவீன் ஆய்வுகள் இந்தச் செய்தியைத் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளன.
அதிக களைப்புடனும் மனச் சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் இருக்கும் மனிதர்கள் தங்களையே மறந்து இசையிலே லயித்தால் அவர்களது களைப்பு தீரும்; மனச் சோர்வு போகும். ஏமாற்றங்கள் மறக்கப்படும்.
இனிய பழைய கால நினைவுகளை இசையின் மூலம் உடனே மனதில் கொண்டு வர முடியும் என்பது அனைவரது அனுபவமும் ஆகும்.
இனி எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும் என்பதைப் பார்ப்போம்;
காச நோய் (Tubercuosis) – மேகமல்ஹார் (Meghmalhar)
தொடர்ந்த தலைவலி – தர்பாரி, ஜெய்ஜய்வந்தி, குன்ஹா (Gunkah)
உயர் இரத்த அழுத்தம் – கோரக் கல்யாண்(GorakhKalyan), பீம்ப்ளாஸ் (Bhimpalas), பூரியா (Puriya)
மனச்சோர்வு -நட்நாராயண்
ஜலதோஷம், இருமல் – குர்ஜன் தோடி(Gurjantodi), பைரவி
முடக்கு நோய் – ஜெய்ஜயவந்தி
பசியின்மை – தீபக், சந்த்ரகௌன்ஸ் (Chandrakauns)
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) – பைரவி, ஆஹிர்பைரவி, குங்கலி(Gunkali)
வயிற்றுப் பொருமல், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை – மல்கான்ஸ், ஜோன்புரி (Malkauns, Jaunpuri)
தோல் சம்பந்தமான வியாதிகள் (Skin disorders) – அசாவேரி
இந்த ராகங்களில் அமைந்துள்ள பாடல்களை ஒருவர் முழு ஓய்வுடனும், இசையில் லயித்த மனதுடனும், தனது முழுக் கவனத்துடன் பாட்டுடன் ஒன்றிய நிலையில் கேட்டால் வியாதிகள் அகலும்.
இசையைப் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்தியுள்ளன.
குறிப்பிடத்தகுந்த இரு ஆய்வகங்களாக சென்னையில் உள்ள ராகா ரிஸர்ச் செண்டரும் (Raga Research Centre RRC) பரோடாவில் உள்ள இசைக் கல்லூரியும் (Music College, Vadodara) அமைகின்றன.

குன்னக்குடி வைத்யநாதன் இந்த இசை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். பைரவி ராகம் சக்தியைத் தரும் ராகம் என்பதை பல வித ஆய்வுகள் மூலமும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மூலமும் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவித்தார்.
ஆர் ஆர் சி ஒரு பெரிய குழுவைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள், மூளை இயல் நிபுணர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோர் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்கள் முழுத் திறமையையும் ஒத்துழைப்பையும் தருவதால் இந்தக் குழு பல நல்ல முடிவுகளைக் கண்டறிந்து வந்துள்ளது.
அசாவேரி ராகம் நம்பிக்கை தரும் ராகம். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
தூக்க வியாதி எனப்படும் இன்ஸோம்னியாவை குணப்படுத்தும் ராகம் பாகஸ்ரீ. (Bageshri – Insomnia). இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்
சிறுநீரகக் கற்களை அகற்றி குணப்படுத்தும் ராகம் வசந்தவிஹார். (Basant Bahar – Gall stones). இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
உயர் ரத்த அழுத்தம், கவலை முதலியவற்றை நீக்க வல்லது பீம்ப்ளாஸ் (Bhim palas – Anxiety, Hypertension). இது பகல் நேரத்தில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
இரவில் தூக்கத்தைத் தரும் அருமருந்தான ராகம் தர்பாரி.
குர்ஜரி தோடி (Gurjri Todi) இருமலை நீக்கும். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
கேதார் (Kedar) ராகம் தலைவலி, ஜலதோஷம், ஆஸ்த்மா ஆகியவற்றைப் போக்கும். இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
பூரியா ராகம் பெருங்குடல் அழற்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகியவற்றை நீக்கி விடும். (Puriya – Colitis, Anaemia, Hypertension). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
யமன் ராகம் முடக்கு வாதத்தை நீக்க வல்லது (Yaman). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
பல்வேறு ஆய்வுகள் தரும் முடிவுகள் இவை.
செலவில்லாமல் இனிமையாக வியாதிகளைக் குணப்படுத்தும் இசையைப் போற்றி இசையுடன் இசைந்து வாழ்வோமாக!
tags — வியாதி, ராகம் ,
***
R Nanjappa
/ December 10, 2020இப்படி ராகங்கள் வியாதிகளைக் குணப்படுத்தும் என்று பரவலாகச் சொல்கிறார்களே தவிர, documented case histories எங்கும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
மேதை எம்.டி ராமனாதன் மறைவுக்குப் பின்னர், அவர் பாடிய ஸஹான ராகம் [ குறிப்பாக த்யாகராஜரின் “கிரிபை” பாடலைத்] திரும்பத் திரும்பக் கேட்டதன் மூலம் தன் உயர்ரத்த அழுத்தம் குறைந்ததாக ஒருவர் சென்னையிலிருந்து வெளிவரும் “ஶ்ருதி” Shruti என்ற இசைப் பத்திரிகையில் எழுதியிருந்தார். இப்படி ஆய்வுகள் இருந்தால் அவற்றைத் தொகுத்து வெளியிடவேண்டும்.
இங்கு ஒரு முக்கிய அம்சம் இசையில் வாய்ப்பாட்டுக்குத் தாக்கம் அதிகமா, இசைக்கருவிகளின் தாக்கம் அதிகமா, அது எந்த மாதிரி வாத்யம்- தந்தி வாத்யமா, காற்று வாத்யமா, மீட்டி வாசிப்பதா (வீணை) அல்லது வில் போட்டு வாசிப்பதா (வயலின்) போன்ற விஷயங்களை தெளிவுபடுத்தவேண்டும்.
ஆனால் ஒன்று நிச்சயம் இசைக்கு ஒரு தாக்கம் உண்டு. இது மனிதர்களை மட்டுமின்றி சில விலங்குகளையும் கவர்கின்றன. பியானோ இசைக்கு மயங்கும் யானைகள் பற்றியும். பசுக்கள் பற்றியும் பல வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. பாடித் தூங்கவைக்கும் யானைக்குட்டிகள் பற்றியும் வீடியோக்கள் இருக்கின்றன!
santhanam nagarajan
/ December 12, 2020பல சுவையான நிஜ சம்பங்களை பல கட்டுரைகளில் நான் எழுதியுள்ளேன். குறிப்பிடத் தகுந்த சில:-
தான்சேன் அக்பரின் வற்புறுத்தலினால் தீபக் ராகத்தை ஒரு ஏரிக் கரையில் இசைத்து உடல் பற்றி எரியும் முன்னர் நீரில் பாய்ந்தது.
இன்ஸோம்னியாவில் அவஸ்தைப்பட்ட சர்வாதிகாரி முஸோலினியை நம் இசைக் கலைஞர் சந்தித்து பாட, அவர் நெடு நேரம் அயர்ந்து தூங்கியது; பின்னர் விழித்து வியந்து போனது
வராளி ராகம் வலியைப் போக்கும் என் வலி தாங்க முடியவில்லை வராளி பாடேன் என பிரபல இசைக் கலைஞர் சொன்னது
குன்னக்குடி வைத்தியநாதன் தன் தந்தையாரின் பாரிச வாயுவைப் போக்க பைரவி இசைத்தது – இப்படி பல நிஜ சம்பவங்கள் உள்ளன. எழுதியுள்ளேன்.
ஆய்வின் முடிவுகள் பற்றி பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
நன்றி