
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9029
Date uploaded in London – – –13 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
கொங்குமண்டல சதகம் பாடல் 55
ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!
ச.நாகராஜன்
ராஜராஜ சோழனின் பெருமையை நாளுக்கு நாள் தமிழர்கள் நன்கு உணர்ந்து வருகின்றனர்.
தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த இவனது காலம் கி.பி.985 முதல் 1012 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீழ் நிலையில் தாழ்ந்திருந்த சோழ ராஜ்யத்தை பெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கிய பெருமை இவனையே சேரும்.
பெரும் நீதிமான். மாபெரும் வீரன். பல கலைகளைக் கற்றவன். சைவ சமயத்தைச் சார்ந்திருந்த போதிலும் பௌத்தர்களுக்கும் ஆதரவளித்தவன்.
இவன் கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கி நாடு, குடகு, ஈழம் முதலிய ராஜ்யங்களை தன் வீர வலிமையினால் வென்றான்.
மூவேந்தர் தமிழ் நாட்டுக்கும் அதிபர் என்பது விளங்குமாறு ‘மும்முடிச் சோழன்’ என்ற பட்டத்தையும் பெற்றான்.
உலகின் மாபெரும் கோவிலை உருவாக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட இவன் பிரஹதீஸ்வரர் ஆலயத்தை உலகோர் வியக்கும் வண்ணம் அதிசய ஆலயமாக அமைத்தான்.
தனது நாட்டில் எங்கெல்லாம் ஆலயங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஆகம விதிப்படி பூஜைகள் நடக்க வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த ராஜராஜன் அதற்கென தேர்ந்த வல்லுநர்களான பிராமணர்களை வட நாட்டிலிருந்தும் வரவழைத்தான்.
அவர்களுக்கு உரிய காணி நிலங்களைக் கொடுத்து அவர்களை மிகவும் கௌரவித்தான்.
இவனுக்கு ஏராளமான பட்டங்கள் உண்டு.
இவன் காலத்துக் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் மிக அற்புதமானவை. அவை தனியே ஆராயப்பட வேண்டியவை.
இவன் ஆளுகையில் கொங்கு மண்டலமும் உட்பட்டிருந்தது.
கொங்கு மண்டல சதகம் பாடல் 55 இவனது பெருமையைப் போற்றிப் புகழ்கிறது.
பாடல் இதோ:
குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த
தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு
நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு
வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : –
குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய மாமன்னர்கள் கொங்கு நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆகமம் கூறிய படி நடத்த வேண்டும் என்று கருதி தன்னாட்டில் உள்ள வல்லவர்களை அழைத்து அவர்களுக்கு காணி பூமி கொடுத்து அவர்களை நன்கு கௌரவப் படுத்தினான். அப்படிப்பட்ட ஆதி சைவர்கள் விளங்குவது கொங்கு மண்டலமே ஆகும்.

tags — ராஜ ராஜ சோழன், வீர சைவர்,
***