
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9052-a
Date uploaded in London – – –19 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரு அறிஞரை இழந்தோம்!
ச.நாகராஜன்

www.tamilandvedas.com தளத்து நேயர்களுக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் திரு ஆர்.நஞ்சப்பா அவர்கள்.
அவர் 14-12-2020 அன்று பங்களூரில் காலமானார் என்ற செய்தியை அவரது புதல்வர் திரு கணபதி தெரிவித்த போது மிகவும் துயரம் அடைந்தோம். நம்ப முடியாத செய்தி தாங்கொணா துக்கத்தைத் தந்தது.
ஏனெனில் சென்ற வாரம் கூட அவரது விமரிசனப் பதிவு வந்திருந்தது. ஆகவே தான் இந்த செய்தியை எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.
சிறந்த அறிஞர். பொருளாதார வல்லுநர். அனைத்து நல்ல புத்தகங்களையும் ஆழப் படித்தவர். அதை அழகுற முக்கியமான விளக்கங்களுடன் கட்டுரைகளாகத் தரும் பாங்குடைய எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் விற்பன்னர்.
இந்திய கலாசாரத்தில் ஊறித் திளைத்தவர். அதை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – அவர் பெருமைகளை!
அவரைப் பற்றிக் கேட்ட போது எளிமையுடன் ஒரு வங்கியில் பணி புரிந்தவர் என்று போடுங்கள் என்று பதில் எழுதினார்.
அரசு வங்கி ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்த சிறந்த நிர்வாகி இப்படி எழுதியதிலிருந்தே அவரது எளிமையும் நமக்குத் தெரிய வந்தது.
ஹிந்தி திரைப்படப் பாடல்களை, 1950க்கு முன்பிலிருந்தே வந்தவனவற்றிலிருந்து சிறந்தவற்றை எடுத்து, அதன் ராகம், இயற்றியவர், பாடியவர், பாடலின் சிறப்பு, அது தொடர்பான சுவையான செய்திகளை வாரந்தோறும் அவர்
www.tamilandvedas.com இல் தந்த பாங்கு பிரமிக்க வைத்தது.
பொருளாதார நூல்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி எது எதைப் படிக்க வேண்டும் என்று அவர் கோடி காட்டினார்.
அரவிந்தர் உள்ளிட்ட பெரியோரின் அறவுரைகளைச் சுருக்கமாக வரைந்தார்.
நல்ல கட்டுரைகள் வெளியாகும் போதெல்லாம் அதற்கு உரிய அற்புதமான விமரிசனங்களைக் கீழே தர அவர் தவறியதே இல்லை.
எனது கட்டுரைகளுக்கு அவர் எழுதும் விமரிசனங்கள், எனது கட்டுரையை விட அழகுற அமைந்திருந்ததோடு அதிகப் படியான சிறந்த கருத்துக்களையும் தந்தன.
கட்டுரைகளை அவர் அனுப்பிய வேகம் யாராலும் நம்ப முடியாது. இதைப் பற்றி நான் வியந்த போது, “உங்களை என் கட்டுரைகளால் பம்பார்ட் செய்கிறேன்” என்றார். அற்புதமான ஒரு எழுத்து ஆற்றல்!
நேரில் பார்க்கவில்லை; போட்டோ கூட கிடையாது. ஆனால் எழுத்தில் ஏற்பட்ட நட்பு இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது தான் உணர்கிறோம்.
அன்னாரது குடும்பத்தாரால் இந்த இழப்பை எளிதில் தாங்க முடியாது.
அவர்களுக்கு சர்வ பலத்தையும் தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய தமிழ் அண்ட் வேதாஸ். காம் அன்பர்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

tags – ஆர். நஞ்சப்பா
***