
Post No. 9115
Date uploaded in London – –7 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்!
ச.நாகராஜன்
ஸ்ரீ விஜயதாஸரின் சீடராக இருந்து கோபால்தாஸர் என்று புகழ் பெற்ற ஜோதிடரின் இயற் பெயர் பாகாண்ட். (Bhagannd).
கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் உத்தனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார் பாகாண்ட். அங்கேயே அவர் கி.பி. 1740 முதல் 1780 முடிய வாழ்ந்தார்.
அவருக்கு மூன்று சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். தாயின் வளர்ப்பிலும் வழிகாட்டுதலிலும் அவர் வளர்ந்து வந்தார். அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அதனால் மிகுந்த ஏழ்மை நிலையில் அவர் கஷ்டப்பட்டார்.
என்றாலும் கூட அவரது எட்டாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. காயத்ரி மந்திர உபதேசம் அதன் மூலம் தரப்பட்டது.

தன்னை எல்லோரும் அலட்சியப்படுத்தியதையோ அல்லது வெறுத்ததையோ பற்றி பாகாண்ட் வருத்தப்படவில்லை.
கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நாள் செல்லச் செல்ல ஜபம் அதிகரித்தது; தீவிரமானது.
ஒரு ஆறு வருடங்கள் ஓடின.அவருக்கு தெய்வீக அருள் கிட்டியது. அதன் பயனாக பிரம்மஞானத்தையும் ஜோதிட அறிவையும் பெற்றார்.
அவரது பிரகாசமான முகத்தைக் கண்ட அனைவரும் அவரை மதிக்க ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் அவர் ஜோதிடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். யார் ஜோதிடம் கேட்க வந்தாலும் அவரது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கூற ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது
யார் வந்தாலும் அவரது முந்தைய மூன்று பிறப்புகளைப் பற்றி அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
எல்லோரும் பிரமிப்புடன் அவரை மதித்து காணிக்கையும் செலுத்த ஆரம்பித்தனர். அவரது ஏழ்மையும் அகன்றது. குடும்பத்தின் நிலை சீரானதோடு வளமாகவும் ஆனது.
சில வருடங்கள் கழிந்தன. பிருகு முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்ட விஜயதாஸர் அப்போது பிரபலமாக இருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்த பாகாண்ட் அவரது சீடரானார். அவரது உபதேசப்படி நடக்கவே, விஷ்ணுவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
அவருக்கும் நாளடைவில் சீடர்கள் உருவாயினர். அவர் கோபால்தாஸ் என அனைவராலும் அறியப்பட்டார். அவரது முக்கிய சீடர்களுள் புகழ் பெற்றவரே ஜகந்நாத தாஸர்.
ஸ்தல யாத்திரை செய்ய ஆரம்பித்த கோபால்தாஸர் அனைவருக்கும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். தேவையானோருக்கு இதர பொருள்களையும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.
இறைவன் புகழைச் சொல்லும் ஏராளமான கீதங்களைப் புனைய ஆரம்பித்த அவர் விட்டலைப் போற்றி நிறைய கீதங்களைப் படைத்தார். அவை பெரும் புகழ் பெற்றன. இன்றும் பாடப்படுகின்றன.

காயத்ரி மந்திரத்தால் அரும் பெரும் சக்தி பெற்ற ஒருவராக அவரை உலகம் அறிந்தது.
காயத்ரி மந்திரத்தின் சக்திக்கு ஒரு அளவே இல்லை என்பது உண்மையே.
***
tags– கோபால்தாஸ், காயத்ரி மந்திரம்