
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9166
Date uploaded in London – –20 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 1 : கட்டுரை எண் 9119 வெளியான தேதி 9-1-2021; அத்தியாயம் 2 கட்டுரை எண் 9123 வெளியான தேதி 9-1-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 3
ச.நாகராஜன்
7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன?
கருடனை நோக்கி திருமால் கூறுவது : “எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியது. ஆகவே அந்த தானியம் மிகவும் பரிசுத்தமானது. எள் இரு வகைப்படும். ஒன்று கறுப்பு நிறமுள்ள எள். இன்னொன்று வெள்ளை நிறமுள்ள எள். இதில் எதை தானங்களோடு சேர்த்துக் கொடுத்தாலும் அது சிறப்புடையதே. சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதிருக்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். தர்ப்பைப் புல்லானது ஆதியில் ஆகாயத்தில் உருவாயிற்று. அந்த தர்ப்பைப் புல்லின் இரு கோடிகளில் பிரமனும் சிவனும் வாசம் செய்ய நடுவில் ஸ்ரீ ஹரியானவர் வாசம் செய்கிறார். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் உள்ளிட்ட கர்மங்கள் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்னிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மால்ய தோஷம் என்பது கிடையாது.
– கருட புராணம்

8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
ஸ்ரீமத் பாகவம் முதலாம் ஸ்கந்தத்தில் பரீக்ஷித் மஹாராஜாவின் ஜனனம் பற்றிய 12ஆம் அத்தியாயத்தில் வருவது இது.
அந்தணர்கள் பலர் தர்மபுத்திரரைச் சந்தித்து பரீக்ஷித்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பல விசேஷ பலன்களைக் கூறி விட்டு வெகுமதி பெற்றுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர்.
அந்த அந்தணர்களால் பல்வேறு குணங்கள் எல்லாம் கூறப்பட்ட உத்தரையின் புதல்வன், பரீக்ஷித் என்று உலகில் புகழ் பெற்றான், ஏனெனில், திறமையெல்லாம் அமைந்த பிரபுவாகிய அவன், தாய் வயிற்றில் இருக்கும் போது, தான் கண்ட பரம புருஷனை (ஸ்ரீ கிருஷ்ணரை) தியானம் செய்து கொண்டு இவ்வுலகத்தில் மனிதர்களுக்குள் அந்த பரம புருஷன் இருக்கிறானா என்று தேடிக் கொண்டே இருந்தான். அங்ஙனம் தேடிப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரம புருஷன் என்று நிச்சயித்தான். ஆகவே இவன் பரீக்ஷித் என்று உலகமெங்கும் புகழ் பெற்றான்,
(அதாவது தான் கருப்பையில் இருக்கும் போது கண்ட புருஷன் எவனாய் இருப்பான் என்று பரீக்ஷை செய்து கொண்டே இருந்ததால் அவன் பரீக்ஷித் என்ற பெயரைப் பெற்றான் என்பது பெறப்படுகிறது.)
9) திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?
ஸ்ரீமத் பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயத்தில் வருவது இது.
விதுரன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து திருதராஷ்டிரனுக்குக் கூறிய இறுதி அறிவுரை :-
“ராஜனே! இந்த இடத்திலிருந்து சீக்கிரம் நீர் புறப்படுவீராக. நமக்குச் சமீபத்தில் நெருங்கி வந்திருக்கும் பயத்தைப் பற்றி ஆலோசிப்பீராக. எவ்வகைக் காரணத்தினாலும் எப்பொழுதும் எதற்குத் தடை செய்ய முடியாதோ அப்படிப்பட்டதும், பகவானுடைய ஆக்ஞைப்படி மாறாமல் நடப்பதும் ஆகிய மரண காலம் நம் எல்லோருக்கும் இதோ சமீபத்து வந்திருக்கிறது. இதோ, தோன்றுகின்ற உயிர்கள் எல்லாம் மரண காலம் நெருங்கி வரப் பெறின் மிகுதியும் பிரியத்திற்குரிய உயிரை விட்டுப் பிரிந்து போகப் பெறுமென்றால், உயிரைத் தொடர்ந்து மற்ற செல்வம் உள்ளிட்ட அனைத்தும் விடுபட்டுவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட காலம் நமக்கு இப்போது வெகு அருகில் வந்துள்ளது. உமது தந்தை, உமது உடன் தோன்றல், நண்பர்கள், புதல்வர்கள் ஆகிய இவ்வனைவரும் மரணம் அடைந்தார்கள். வாலிப வயதும் போய் விட்டது. சரீரமும், கிழத்தனத்தால் மூடப்பெற்று விட்டது. ஆயினும் உயிர் வாழ்வதற்காக எதிரியின் வீட்டை அடுத்திருக்கின்றீர்! ஆ! என்ன ஆச்சரியம் இது!! உயிர்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பம் மென் மேலும் எல்லையில்லாமல் வளர்ந்து வரும் தன்மையது. நீர் அந்த ஆசையினால் அல்லவோ, பீமன் அவமதித்துக் கொடுத்த பிண்டத்தையும் வாங்கிப் புசித்து விட்டு, வீட்டைக் காக்கும் நாய் போல விழுந்து கிடக்கிறீர்!̀…
எவன் ஒருவன் தன் புத்தியினால் இந்த சம்சாரத்தின் மீது வைராக்கியம் உண்டாகப் பெற்று இந்திரியங்களை ஜெயித்து தன்னையே பற்றி இருப்பவரது சம்சார பந்தத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு பிள்ளை, பெண்டிரது வீட்டை விட்டுப் போவானோ அவனே மனிதர்களுள் சிறந்தவன். ஆகவே, நீர் வடதிசையை நோக்கிச் செல்வீராக!”
***
tags– எள், தர்ப்பை, புராணத்துளிகள்