அருணகிரிநாதரின் 3 புதிர்களுக்கு புதிய விடைகள்! (Post No.9301)

WRITTEN BY B. Kannan, New Delhi

Post No. 9301

Date uploaded in London – –23 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதில் திருப்புகழில் இருக்கும் மூன்று புதிர்களுக்கு விடை கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தார். அதற்கு பதில் தேடுமையில் மாதுளம் பழம் பற்றி நான்காவது புதிர் உதித்தது. . இவைகளுக்குப் பதி லளித்த  டில்லி நகர  தமிழ் அறிஞர் ப. கண்ணன் அவர்கள் ஞானமயம் ஒலி பரப்பில்  பிப்ரவரி 21, 22 தேதிகளில் அரிய பல தகவல்களை அளித்தார் . இதோ அவரது விடைகளுடன் கூடிய கட்டுரை)

மூன்று புதிர் குட்டிப் போட்டு நான்கான கதை!!                

பா.கண்ணன், புது தில்லி

திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகத் திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுகிறார்  நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி) கோவில் இருக்கிறது.

அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இந்த விவாதத்துக்குள் போக வேண் டாம், புதிர் முடிச்சை அவிழ்க்கப் பார்ப்போம்.   

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து
வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது
எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்.


ஒருமுறை அன்னையிடம் கோபித்துக் கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்துக்கொண்ட குழந்தை முருகன் குகை வழியே வேங்கடமலையின் உச்சியை அடைந்து நின்றான் என்கிறது கந்தபுராணம்.அம்பிகை கோபித்துக் கொண்டதனால் முருகன் தானும் கோபம் கொண்டு, ‘நான் இங்கே இருக்க மாட்டேன்; வேறு ஒரு மலைக்குப் போகிறேன்’ என்று பாதாளத்தின் வழியே வந்து வேங்கட மலையின் குகை வழியே வெளிப்பட்டானாம் …… அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். ‘முன்பு தான் தங்கிய வேங்கட கிரியைப் பார்த்தான்’ என்று பின்பு வழிநடைப் படலத்திலும் அவர் சொல்கிறார்……

கந்த புராணத்தை ஒட்டி தி. சு. வேலுசாமிப் பிள்ளை இயற்றிய கந்தபுராண வெண்பா என் னும் நூலிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் வருமாறு:

மன்னன்னை யோடுமுனி வாகித்தன் வெற்பொரீஇக்

கொன்னதத்த டேகிக் குகைவழியே-முன்னம்

வருவேல் கடமாம் வரைகண்டான் அன்பாம்

குருவேங் கடமாங் குசன்” (உற்பத்தி காண்டம்வழிநடைப் படலம்–6)

என்பது பாடல். இச்செய்தியை அடியொற்றித்தான் அருணகிரி நாதர் ‘குகை வழி வரு வேங்கட கிரி’ என்கிறார், போலும்!

மேலும், கந்தபுராணம் உற்பத்தி காண்டம் – வழிநடைப் படலத்தில், கச்சியப்பர், முருகன் சூரனை அழிப்பதற்காக, வடக்கேயுள்ள தன் கந்தகிரியிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரும் வழியில் உள்ள தெய்வப் பதிகளையெல்லாம் கண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களாவன

என்னையா ளுடையானிடம் சேர்வன்என் றிமையக்

கன்னி பூசனை செய்த கேதாரமும் கண்டான்” (3)

மையல் மானிடர் உணர்ந்திட மறைமுனி எடுத்த

கையதே யுரைத்திட்டதோர் காசியைக் காண்டான்”

அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்

தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து

மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே

பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்”

கறுத்த தலைஎன்று தொடங்கும் திருப்புகழில்

மலர்க் கமல வடிவுள செங்கை

அயிற் குமர குகைவழி வந்த

மலைக் சிகர வடமலை நின்ற பெருமாளே”- என்றும்,

சரவண பவநிதிஎன்னும் பாடலில்,

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய

குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்

சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா” என்றும் உரைக்கிறார். 

முதல் முடிச்சு அவிழ்ந்து விட்டதா?

2. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

வயிரவிவனம் எனும் திருத்தலம் வடநாட்டில் பஞ்சாபில் இருக்கிறது எனும் கருத்துக்கு மாறாக, அது இதோ இங்கேதான் இருக்கிறது என்று ஆதார பூர்வமாகத் தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் வலயப்பேட்டை திரு ரா. கிருஷ்ணன் அவர்கள். இக்கோவிலைக்  குறித்து வரும் குறிப்புகள் அவரது “அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்’ எனும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ளது வயிரவிவனம் எனும் திருத்தலம். அங்கு பிள்ளையார்பாளையம் பகுதியில் சோளீச்வரர்-வயிரவேச்வரர் கோயில் அமைந்துள்ளது. வயிரவர்= பெரும் ஆற்றல் மிக்கவன், வல்லமைப் பொருந்தியவன் என்பது பொருள்.

“ஸ்ரீமத் மாதவ சிவஞானயோகிகள் என்னும் மகான் இப்பகுதியில் உள்ள திருவாவடுதுறை ஆதின திருமடத்தில் இருந்து கொண்டு காஞ்சிபுராணத்தை எழுதினார் என்பர். அதில் காஞ்சியில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன. காஞ்சியில் நான்முகன் மிகப்பெரிய வேள்வி செய்ய முற்பட்டார். அதனை விரும்பாத சரஸ்வதி தன்னுடைய வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுத்தாள். இதனைக்கண்ட நாரதமுனிவர் பிரமதேவனை வணங்கி அதனைத் தடை செய்ய வேண்டினார். நான்முகன் சிவபிரானைத் துதிக்க, அவரோ திருமாலை அழைத்து பிரமனின் யாகத்தை அழிப்பதற்கு சரஸ்வதி நதியாக வருவதால் அவள் செருக்கொழிய விரைந்து காப்பாய் என்று கூறினார். அதன்படி திருமால் சரஸ்வதி நதியைத் தடுத்துக் கடல் நோக்கிச் செல்லவிட்டார். சிவபெருமான் சொன்னவண்ணம் செய்தமையால் திருமாலுக்குச் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்று அருள்பாலித்தார். மேலும் சரசுவதி நதி வலியவினை எவற்றையும் அழிக்கும் வேகவதி நதி என்ற பெயரில் இந்நிலத்தில் ஏற்றமுற்று அதில் மூழ்குவோருக்கு இன்பவாழ்வினை அளிக்கும் என்று வாழ்த்தினார். மேற்படி செய்திகள் அனைத்தும் காஞ்சிபுராணம் சிவாத்தானப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.சரசுவதி நதி உருவில் வந்து சிவபெருமான் அருளால் வேகவதி நதி எனப் பெயர் பெற்ற புராணப்பாடல்களை நோக்கும் போது அருணகிரியார் பாடிப்பரவிய சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவிவனம் என்ற தலம் காஞ்சிபுரத்திலுள்ள வயிரவேச்வரர் திருக்கோயில் என்றே அனுமானிக்கலாம். இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………

இத்தலத்திற்கான திருப்புகழ் பாடல் : ஒன்று 

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு

     மரனிட மிருக்கு மாயி …… யருள்வோனே

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்

     வயல்புடை கிடக்கு நீல …… மலர்வாவி

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு

     வயிரவி வனத்தில் மேவு …… பெருமாளே.

(வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே).

இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………

அருணகிரியார் கூறும் வயிரவி வனம் வட இந்திய மாநிலம் ஹரியானா-பஞ்சாப் எல்லையில் நிச்சயமாக இருக்கிறது. அங்கு முருகன், கார்த்திகேயனாக அருள்பாலிக்கிறான். அதைப் பற்றிய ஒரு கட்டுரையை நான் எழுதியுள்ளேன். அதையும் இணைத்துள்ளேன். அதன் முக்கியச் சாராம் சம் இதோ…….

தமிழ்நாட்டில் அழகன் முருகன் பொதுவாகத் தனது தேவியர் வள்ளி-தேவசேனா சமேதராகக் காட்சியளிப்பவர், வட இந்திய மாநிலங்களில் ஸ்ரீகார்த்திகேயசுவாமி என்றப் பெயருடன் வீரம் செறிந்தப் பிரம்மச்சாரியாகத் தோற்றமளிக்கிறார். இப்பிரதேசப் பெண்மணிகள் இவரது சன்னிதி, கருவறை முன் நின்று வழிபடுவது கிடையாது. அதனால் அவருடையப் பிரம்மச்சரியத்துக்கு அபசாரம் செய்தவராகி, தங்களுக்குத் தீங்கு விளைந்துவிடும் என்றும் நம்புகின்றனர்

அப்படி அமைந்திருக்கும் பெஹோவா எனும் தலத்தில் தான் அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார் அழகன் முருகன். தில்லிக்கு அண்டை மாநிலம் ஹரியானாவின் குருக்ஷேத்திரம் மாவட் டத்தில் புராதன, போற்றத்தக்க, புண்ணியம்மிகுந்த, மகாபாரதச் சம்பவங்களுடன் தொடர்புடைய துமானப் பிரதேசம் பெஹோவா.அனைத்து நதிகளிலும் சிறந்ததும், அம்பிதமே, நாதிதமே, தேவிதமே சரஸ்வதி‘ (சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த பெண் தெய்வம்) என ரிக்வேதம் போற்றக் கூடியதும், இங்குப் பூமிக்கடியில் அந்தர்வாஹினியாகப் பிரவாகிப்பதாகக் கருதப் படும் வேதகாலத்து நதியான சரஸ்வதி ஆற்றின் தென் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது.

தில்லியிலிருந்து 197கி.மீ., ஸ்தானேசர்- குருக்ஷேத்திரத்திலிருந்து சுமார் 30கி.மீ. தொலைவில் பஞ்சாப், ஹரியாணா எல்லைக்கருகில் உள்ளது. பாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந் துப் பெஹோவாவைப் பற்றிய விவரங்களை அறிய முடிகிறது.

பக்த துருவன் வம்சத்தில் வந்த மன்னன் பிருது. பின்னாளில் தற்போதையக் குருஷேத்திரத் துக்கு அருகிலிருந்த நீர்நிலைக் கரையில் தவமிருந்து, முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் அளித்துப் பித்ருகடன் செய்து முடிக்கிறான். ப்ருது + உதக்(தண்ணீர்)= ப்ருதுதக். அதனால் இக்குளம் ‘பிருதுதக்’, பிருதுதீர்த்தம் என அழைக்கப் படுகிறது. அதுவே காலப்போக்கில் ‘பெஹோவா’ என மருவிவிட்டது. காசி, கயாவுக்கு அடுத்து இவ்விடமும் நீத்தாருக்குத் திதி கொடுக்கும் புண்ணிய இடமாக விளங்குகிறது,

மகாபாரதம், வாமன, ஸ்கந்த, மார்க்கண்டேயப் புராணங்களில் பிருதுதக் நீர்நிலையைப் பற்றிச்.சொல்லப்பட்டுள்ளது. “புண்யமாஹு குருஷேத்ர, குருஷேத்ராத் சரஸ்வதி, சரஸ்வத்மாஸ்ச தீர்த்தாநி தீர்த்தப்யஸ்ச ப்ருதுதகம்”குருஷேத்ர நகரம் புனிதமிக்கது. அதைவிட அதிகம் புண்ணியம் வாய்ந்தது இங்குப் பாயும் சரஸ்வதிநதி, இவற்றைவிட மிகவும் புனிதம் வாய்ந்தது ப்ருதுதக் தீர்த்தம்—என்று விவரிக்கிறது மகாபாரதம்.பாரதப்போர் ஆரம்பிப்பதற்கு முன், கிருஷ்ணனின் ஆலோசனைப்படி பாண்டவர்கள் இங்கு வந்து முன்னோர் களை வழிபட்டு, சரஸ்வதிநதியை ஆராதித்தனர் என்று அறிகிறோம். குப்தர்காலத்தில் வந்த ஃபாஹியான், மன்னன் ஹர்ஷர், பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் வந்த ஹ்வேன்சாங் போன்ற சீன யாத்ரீகர்கள் தங்கள் பயணக் கட்டுரைகளில் குருஷேத்திரத்தை வர்ணிக்கும் அளவுக்குப் பெஹோவாவைச் சிறப்பிக்கவில்லை. ஸ்தானேசரில் இருந்தத் துறவிமடம் கோவிந்தாவிகாரை என இவர்களால் அழைக்கப் பட்டுள்ளது ( பார்க்க ஹ்வேன்சாங் எழுதியப் புத்தகம் “சி-யூ-கி). இங்கிருந்து அவர்கள் திரும்பி நேராக மதுரா சென்று விடுகின்றனர். கஜனி முகமதுவுடன் வந்தப் பாரசீக யாத்ரீகர் அல்பரூனி மட்டுமே பிருதுதக் சென்றது பற்றிக் குறிப்பிடுகிறார். சரஸ்வதி , கார்த்திகேயன் கோவில்கள் மிக்கப் பிரசித்திப் பெற்றவையாகும். இங்குள்ளச் சுப்பிரமணியர் ஆலயம் சுமார் 4500 ஆண்டுகள் புராதனமானதும், மகாபாரதக் காலத்துக்கு முற்பட்டதாகவும் அறியப்படுகிறது.குப்தர், குஷாண் வம்சத்தினர், ஆந்திர இக்ஷ்வாகு மன்னர்கள், பஞ்சாப்பை ஆண்ட குறுநில அரசர்களான யௌதேயர் முதலானோருக்குக் கார்த்திகேயன் கண்கண்டத் தெய்வமாக விளங்கியுள்ளார். யௌதேய மன்னர்கள் மற்றும். குஷாண் வம்சத்தினர் கார்த்திகேயன் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்…….

விரிவானக் கட்டுரை வேறு பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புதிருக்கும் விடை கிடைத்து விட்டதல்லவா?

3. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது

என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன? 

அந்தப் பாடலின் பகுதி….

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் … சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே…………

ஒளிர் ஆனையின்கரமில் … விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில்

மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த …மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள்  

அளித்தவளும்

உமை யருள்பாலா … ஆகிய உமாதேவி, பார்வதி அருளிய பாலகனே,

மாதுளம் பழம் (அ) கொம்மட்டி மாதுளை என்பதற்கு பச்சை எலுமிச்சம் பழம் என்று சொல்லப்பட்டிருந்தது. ‘மாதுலுங்க பல’ (அ) மாதுலம் என்பதற்குப் பேரெலுமிச்சை, கொடி எலுமிச்சை, ஊமத்தை என்றும்  ஜம்பீரம் என்று எலுமிச்சையைச் சம்ஸ்க்ருத அகராதியும் பொருள் சொல்கிறது. மேலும், தாடிம: என்று மாதுளையை சம்ஸ்க்ருதத்திலும்,, அனார் என்று ஹிந்தியிலும் குறிப்பிடுகிறார்கள்.

ஏகம் ஆம்ரம் எனும் ஒற்றை மாமரத்தினடியில் காட்சியளித்து,ஏழவார்குழலி எனும் தன்னை மணந்து கொண்ட ஏகாம்பரரின் மனதுக்கு உகந்ததினால் தனக்கும் பிடித்தமான அம்மரத்தின் இனிப்புச் சுவை மிகுந்த மாம்பழத்தையே நாரதர் அளித்துள்ளாறோ என மனமகிழ்ந்து, யானை முகன் விநாயகன் கரத்தில் அந்த “மகிழ்மாது” உமையவள் தன் ” (உ)ளங்கவர் கனி”யை அளித் திருக்கலாம், அல்லவா? இங்கு பண்டிதர்களுக்கே உரித்தான Poetic Justice  உத்தியைக் கையாண்டு மகிழ்மாது  ளங்கனியை என்ற சொற்களைச் சிறிது மாற்றிப் பதம் பிரித்து,  நாரத முனி அளித்த மாங்கனிக்கு இழுக்கு வரா வண்ணமும், காமாட்சி தேவியின் மனதைக் குளிர் விக்கும் விதமாகவும் அருணகிரியார் விவரித்திருக்கலாம்,அல்லவா?

மூன்றாவது புதிருக்கும் விடை கண்டாகி விட்டதா?

அதிகப்பிரசங்கித் தனமாய் இருக்குமானால் அறிவார்ந்த சபையோர் மன்னித்தருள வேண்டும்.

சரி,இப்போது சிவரஹஸ்யம் ஸ்லோகத்துக்கு வருவோம்…..

4. हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको

मौढयान्नाकनिवासिनां भयपरैर्वाक्यैरिव प्रार्थितः ।

नीलीशम्बरनीलमम्बरतलं जम्बूफलं भावयन्

तं मुच्ञन् गिरिमम्बरं परिमृशन् लम्बोदरः पातु मा

சிவரஹஸ்ய கிரந்தத்தில் இருக்கும் இச் ஸ்லோகம் பரமேஸ்வரனால் பிரம்மாவின் குமாரர் ருபுவுக்கு உபதேசிக்கப் பட்டதாகும்.இதன்பொருள் : பரம்பொருள் தனது அதீத மாயா சக்தியால் அனைத்து இயற்கை வஸ்துக்களையும் சிறியது முதல் பெரியது வரை,தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது என்பதாம்.

ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய  மோதாதிகோ என்று துவங்கும் அந்த ஸ்லோகத் தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் என்கிறீர்கள் . இந்த வரியின் மொத்த பொருள்:–அப்படியானால்,

மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்றும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது  நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது

மாதுலுங்க பல (அ) மாதுலம் என்பது ஊமத்தையும் குறிக்கும்,அல்லவா? அவை ஈசனுக்கு மிக வும் பிடித்த மலரும், காயுமல்லவோ? பிதாவை வணங்கும் விதமாக அதைத் தன் தும்பிக்கை யில் வைத்தவாறு, ஊமத்தைக் காய் போன்ற கரடு முரடான மேரு மலையை அனாயாசமாகத் தூக்கும் கணபதியே…. என்றும் சொல்லலாம், அல்லவா? எலுமிச்சைத் தோல் பாகம் வழவழப் பா யிருக்குமே? எனவே மேரு மலைக்கு ஊமத்தையே ஒத்து போகும் என்பது Poetic Justice! இதற்கும் என் பார்வை தவறென்றால் சிவாச்சாரியார் அவர்கள் க்ஷமிக்க வேண்டும்.

–subham–

tags – அருணகிரிநாதர்,  புதிர் ,  விடைகள்

____________________________________________________________________________________________________

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: