
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9325
Date uploaded in London – –1 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 28-2-2021
இன்று பிப்ரவரி -28 ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
Xxx
திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை

திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை, காணிக்கையாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.2 கோடி.
அந்த பக்தரின் பெயர் தங்க துரை . மூன்றரைக் கிலோ எடை கொண்ட தங்க சங்கு, சக்கரத்தை திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை கொடுத்தது ஏன் என்றும் அவர் விளம்பினார். தான் ‘கோவிட் வைரஸ்’ தாக்குதலில் நோய்வாய்ப்பட்டபோது, தன்னை அவர் காப்பாற்றியதால் இதைச் செய்வதாகவும் செப்பினார்
XXXXX
திருப்பதி கோவிலில் துளசி விதைகளுடன் கூடிய லட்டு பிரசாத பைகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ,
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன..இதற்கு பல் வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
XXXXX
ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்
.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறந்த பின்பு 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும். மற்ற நேரங்களில் இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்ய முடியாது.
ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த
பிப்ரவரி 22 ஆ ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் பிப்ரவரி 24 ஆ ம் தேதி வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் இருந்து சுமார் 2 கிலோ எடையில் புதிய ஸ்படிக லிங்கம் கொண்டுவரப்பட்டு ராமேசுவரம் கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
பின்னர் மடத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஸ்படிகலிங்கம் கொண்டுவரப்பட்டு கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விநாயகர், காசி விஸ்வநாதர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு யாக பூஜை நடந்த பின்பு கருவறையில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிப்ரவரி 25-ந்தேதி அதிகாலை முதல் இந்த புதிய ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.
XXXXX
விராலிமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

விராலிமலை ஶ்ரீமுருகப்பெருமான் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்
சிவஸ்ரீ அண்ணா தலைமையில் கடந்த 25-ந்தேதி இனிது நிகழ்ந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தரிசித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடந்த பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர்.. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
XXX
ரத யாத்திரைக்கு அனுமதி தாமதம் —மதுரை போலீஸ் அதிகாரிக்கு கோர்ட்உத்தரவு
மதுரையில், ராம ரத யாத்திரையை அனுமதிப்பதில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என, அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில், போலீஸ் கமிஷனர் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த செல்வகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, நிதி சேகரிக்க, மதுரையில் ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்கள் உள்ள ரதத்தை இயக்க ஏற்பாடு செய்து உள்ளோம். ரத யாத்திரை, 100 வார்டுகளிலும் நடைபெற அனுமதி கோரி, மதுரை போலீஸ் கமிஷனர், திலகர் திடல் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம்.
உதவி கமிஷனர், ‘கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருதி, ரதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என, நிராகரித்தார். மதுரையில் அரசியல் நிகழ்ச்சிகள், மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டது. உதவி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து, அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, செல்வகுமார் குறிப்பிட்டார்.
பிப்., 19ல் நீதிபதி ஆர்.ஹேமலதா விசாரித்து, ‘அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் பரிசீலித்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வாகனம் சென்று வர, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.
‘இதை நிறைவேற்றாததால், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, செல்வகுமார் மனு செய்தார்.
நீதிபதி ஆர்.ஹேமலதா விசாரித்தார். ரத யாத்திரையை பாதியில் போலீசார் தடுத்தி நிறுத்தினர்’ என மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ‘போலீஸ் கமிஷனர் மார்ச், 1-ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்றார் நீதிபதி,.
XXXXXX
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கலிடும் விழா நேற்று நடந்தது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்கல் நாளான நேற்று அவர்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டு அம்மனை வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதன்படி நேற்று காலை கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர். பொங்கல் நைவேத்திய நிகழ்ச்சி மாலை 3.40 மணிக்கு நடந்தது .
XXX
மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கோவை மாவட்டம், ஆனை மலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்கினி குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் அக்கினி குண்டம் விழா தொடங்குவது வழக்கம்.
குண்டம் விழா என்பது எரியும் தீயில் நடந்து செல்லும் தெய்வீக சடங்கு ஆகும் .இவ்வாறு தீயில் பக்தர்கள் நடந்து செல்லும் நிகழ்ச்சியை பூக்குழி இறங்குதல், தீ மிதித்தல் என்றும் சொல்லுவார்கள் .
இந்த ஆண்டு கடந்த 11-ந் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. 25-ந் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை அம்மன் அருளாளிகள் ஆழியாற்றில் நீராடிவிட்டு குண்டம் இறங்குவதற்காக உத்தரவை பெற்றனர். சிலருக்கு அருளாளிகள் உத்தரவு தரவில்லை. அம்மன் அருளாளிகள் உத்தரவு கிடைக்காதவர்கள் குண்டம் இறங்க மாட்டார்கள்.
அருளாளிகளிடம் உத்தரவு பெற்ற பக்தர்கள் குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது வானில் கருடன் 3 முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு முறைதாரர்கள் எலுமிச்சை கனி, பூ மாலையால் செய்யப்பட்ட பந்து ஆகியவற்றை குண்டத்தில் உருட்டிவிட்டனர்.
அவைகள் வாடாமல் அப்படியே இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூக்களை 3 முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.
குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 250-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு, தீயணைப்பு துறையினர் போன்றவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனைமலை களைகட்டியிருந்தது.
xxxxxx
கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்… தமிழக அரசுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சத்குரு நேற்று வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர்.
அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,

வணக்கம்
tags- tamil Hindu news, 28221,