
Post No. 9632
Date uploaded in London – – –22 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதத் துளிகள்
நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று உகும் இறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் என்ன?
ச.நாகராஜன்
நம்மாழ்வார் கருங்கடல் வண்ணனை நினைத்தாலே கண்களில் நீர் மல்க நெக்கொசிந்து கரைவார். கண்ணபிரான் என்று சொன்னாலேயே உகந்து உகந்து உள் மகிழ்ந்து ஆனந்தம் அடைவார்.
அவரது திருவாய்மொழியில் பண்டிதர்களுக்கும் அரசன் விக்ரமசிங்கனுக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது.
திருவாய்மொழியில் ஆறாம் பத்தில் ஐந்தாம் பகுதியில் முதல் பாசுரம் இது:
“துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவனை
நீர் இனி அன்னைமீர்! உமக்காசையில்லை விடுமினோ
தவளவொண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கணென்றும்
குவளையொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”.
பாடலின் பொருள் பார்க்கப் போனால் எளிது தான். சங்கு சக்கரபாணியை நினைத்தால் குவளை ஒத்த மலர்க் கண்கள் நீர் மல்கிடும்.
ஆனால் எப்படி நீர் மல்கும் என்பதை நம்மாழ்வார் கூறுகிறார்: “கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”
இங்கு தான் சந்தேகம் எழுந்தது; விவாதமும் ஆரம்பமானது.
‘நின்று நின்று குமுறும்’ என்பதை சில பண்டிதர்கள் ‘நின்று உகும் இறும்’ என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்றனர்.
அதாவது அவரது இறைவன் பால் கொண்ட காதல் மட்டற்றது. அந்த அன்பினால் நின்று அவர் ‘உகும்’ அதாவது உருகி விடுவார்; பின்னர் ‘இறும்’ அதாவது இறந்து விடுவார்.
எல்லையிலா நெஞ்சத்து அன்பு ஊற அதில் உருகி அவர் இறந்து விடுவார்;
ஆனால் ராஜா விக்ரமசிம்ஹனுக்கு இந்த விளக்கம் பொருத்தமாகப் படவில்லை.
அவன் விளக்கலானான் இப்படி: “நின்று நின்று குமுறும் என்பதில் குமுறும் என்பதை கொந்தளிக்கும் என்ற பொருளிலேயே ஆழ்வார் கூறியிருப்பதாக எனக்குப் படுகிறது. ஏனெனில் உருகி இறந்து விடுவது என்று வைத்துக் கொண்டால் மிகப் பெரும் மகானான நம்மாழ்வாரின் அன்பு அவர் இறப்பதால் ஒரு முடிவுக்கு வந்ததாக ஆகி விடுகிறது. ஆனால் அப்பேர்க்கொத்த மகானின் அன்புக்கும் ஒரு எல்லை உண்டோ, ஒரு முடிவு தான் உண்டோ, நிச்சயமாக இருக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எல்லையற்று குமுறிக் கொந்தளித்துக் கொண்டே தான் இருக்கும். ஒரு ஓடையில் சுழலில் எப்படி நீர் கொந்தளித்துக் குமுறிக் கொண்டே அதே இடத்தில் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்குமோ அதே போல ஆழ்வாரின் அன்பு குமுறிக் கொந்தளித்து அப்படியே ஆழமாய்ச் சுழலின் உள்ளே சென்று சுழன்று சுழன்று என்றும் நிற்கும்; அது அந்த இடத்திலிருந்து அகலாது, செல்லாது. இந்த அன்பு ஓசை அற்றது, இதயத்திலிருந்து வருவது, வார்த்தையால் சொல்வதற்கு முடியாதது; சொல்லுக்கு அப்பாற்பட்டதாகும்! எப்படி ஒரு பசுவானது அதனுடைய கன்று தாயிடமிருந்து விலகிச் சென்று சற்றுத் தொலவில் இருந்த போதும் அதனுடைய மடியில் பால் சுரந்து நிரம்பி நிற்குமோ, எப்படி அது தனது வாயால் தனது கன்றை அடைவதற்காக ஏங்கி நிற்கும் அன்பைச் சொல்ல முடியாது தவிக்குமோ அதே போலத் தான் இதுவும்!”
அரசனின் விளக்கத்தைக் கேட்ட பண்டிதர்கள் அசந்து போனார்கள்; அவனது விளக்கத்தையே மேலான, சரியான விளக்கம் என்று ஒப்புக் கொண்டார்கள்.
உகும், இறும் என்றால் உருகி இறந்து படுவதாக ஆகி விடும். ஆழ்வாரின் அன்புக்கு ஒரு முடிவு ஏற்பட்டதாக ஆகி விடும்! அது சாத்தியமே இல்லையே! ஆகவே குமுறிக் குமுறி அது கொந்தளித்து எப்போதும் அதே இடத்தில் நிலையாக வளர்ந்து கொண்டே இருக்கும்!
சபாஷ் ராஜா! சரியான விளக்கம்!
***
இந்த அருமையான சம்பவத்தை பகவத் விஷயம் ஆறாம் தொகுதியில் 2804ஆம் பக்கம் படித்து மகிழலாம்.
tag–நம்மாழ்வார்