
Post No. 9652
Date uploaded in London – – –27 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி!
ச.நாகராஜன்

ஸ்ரீ சத்யசாயி பாபா ஊட்டி, நந்தனவனத்தில் சத்யசாயி இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கிடையே 16-4-1988இல் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது:-
உலகியல் இன்பங்கள் எல்லாமே நிலத்திருப்பவை அல்ல. வந்து செல்பவை அவை. இறைவன் ஒருவனே எல்லையில்லா ஆனந்தம் தருபவன்.
அரசன் ஒருவன் ஏராளமான கலைச் செல்வங்களையும் ஓவியங்களையும் கொண்ட பிரம்மாண்டமான கண்காட்சி ஒன்றை அமைத்தான். அனைத்து மக்களையும் அழைத்த மன்னன், உள்ளே செல்வோர் தங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னான்.
அவ்வளவு தான், கூட்டம் அலைமோதியது. அவரவர் தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை அல்லது இதர பொருளை எடுத்துக் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு பெண்மணி மட்டும் கண்காட்சியிலிருந்து ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் எதையும் எடுக்காமல் வெளியில் வந்தாள். வெளியே நின்றிருந்த அரசன் அவள் எதையும் எடுக்காமல் வந்ததைப் பார்த்தான். அவளை அழைத்தான். “என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா?” என்றான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்றாள் அவள்.
“மிக அழகிய பொருள்கள் உள்ளே உள்ளனவே. அவற்றில் எதுவுமே வேண்டாமா?” என்றான்.
“உள்ளே மிக அழகிய பொருள்கள் இருக்கின்றன” என்று பதில் சொன்னாள் அவள்.
“அப்படியானால் ஒன்று கூட அவற்றில் உங்களுக்கு வேண்டாமா? என்று அரசன் கேட்டான். திட்டவட்டமாக வேண்டாம் என்றாள் அவள்.
“அப்படியானால் உங்களுக்கு என்ன தான் வேண்டும்? அதைச் சொல்லுங்கள் நான் தருகிறேன்” என்றான் அரசன்.
“அரசே! வாக்கு மாற மாட்டீர்களே! நான் கேட்டதைத் தருவீர்களா?” என்றாள் அந்தப் பெண்மணி.
“நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான்” என்று அரசன் உறுதி கூறினான்.
உடனே அந்தப் பெண்மணி, “அரசே! எனக்கு நீங்கள் தான் வேண்டும்” என்றாள்.
தான் கொடுத்த வாக்கின் படியே அரசன் அவளைப் பணிந்து வணங்கி தன்னை அவளுக்குக் கொடுத்து விட்டான்.
அரசனே அவளுக்குச் சொந்தமான பின்னர் அந்தக் கண்காட்சியில் இருந்த அனைத்துமே அவளுக்குச் சொந்தமாகி விட்டது.
இந்த பிரபஞ்சம் ஒரு பெரிய கண்காட்சி. அது இறைவனால் படைக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நுழைபவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வேலை பிடிக்கிறது. சிலருக்கு செல்வம் தேவைப்படுகிறது. ஆனால் எவருமே “ஸ்வாமி! இதில் ஒன்றை எடுத்துக் கொள்வதால் எனக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது. நீங்கள் என்னவராக ஆகி விட்டால் எல்லாமே எனக்குக் கிடைத்து விடுமே” என்று சொல்வதில்லைல்.
பிரபஞ்ச எக்ஸிபிஷனில் (COSMIC EXIBITION) நுழையும் நீங்கள் தெய்வீகத்தை வேண்ட வேண்டும். அப்போது பிரபஞ்சமே உங்களுடையதாகி விடும். எது ஒன்று மாறாததோ எது ஒன்று நிலைத்து நிற்பதோ அதையே நீங்கள் நாட வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றாக ஒன்றின் பின் ஒன்றாக நீங்கள் செல்லக் கூடாது. அதில் எப்போதுமே திருப்தி கிடைக்காது. இன்று கவர்ச்சியாக இருப்பது நாளைக்கு கவர்ச்சியாக இருக்காது. ஆனால் இறைவனைக் கொள்பவர்களுக்கோ அனைத்துமே கிடைத்து விடும்.
ஆசைகளைத் துறக்க மனிதன் தன் மனதை கடவுள் பால் திருப்ப வேண்டும். அதுவே திருப்தி, சந்தோஷம், எல்லையற்ற ஆனந்தம் அடைய வழி வகுக்கும்.
ஆதாரம் ; Sri Sathya Sai Speaks Volume 21 chapter 11 (ஆங்கிலத்தில் உள்ள உரையின் சுருக்கம் மேலே தமிழில் தரப்பட்டுள்ளது)
ஓம், ஸ்ரீ சாயி சரணம்!
***

tags- அம்மணி, அரசன்,கேள்வி , சத்யசாயி பாபா