
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9697
Date uploaded in London – –6 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜூன் 6 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு உதவித்தொகை துவக்கம்
கொரோனா நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாதச் சம்பளமின்றி திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக 4000 ரூபாய் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 4000 ரூபாய் தொகையும், 10 கிலோ அரிசியும், மளிகைப் பொருள் தொகுப்பும் வழங்கப்படும்.
கொரோனா நோய் தொற்று காலத்தில் திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகையும், 1000 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கும் திட்டம் ஜூன் 3 அன்று முதல்வர் முக.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Xxxx
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து! – பக்தர்கள் அதிர்ச்சி


கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த கோயிலின் கருவறையின் மேல்பகுதி கேரள பாரம்பர்ய கட்டடக்கலையின்படி ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் புதன் கிழமை காலை பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது. தீ எரிவதை பார்த்த அப்பகுதி பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன்,
தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு செய்வார்கள். இனி அரசு இப்படி செய்யாது என்று நம்புகிறேன். அறநிலையத்துறை ஹிந்து கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்படும் வரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள், பூஜாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள பாரம்பரிய முறைப்படி செயல்படும் இந்த கோயிலை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும். மேற்கூரை எரிந்த நிலையில் தங்க தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Xxxx
கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள கூறப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.
குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-
கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.
“என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது” –இவ்வாறு நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்பதிலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
Xxxxx
கோவிட் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்

ஆந்திராவில், கோவிட் நோயாளிகளுக்கு ஆனந்தய்யா என்ற மருத்துவர் வழங்கிய மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெறுவதற்கு தினமும் ஆயிரகணக்கானோர் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர்.
இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxxx
சவூதி அரேபிய கல்வித்திட்டத்தில் ராமாயணம், மஹாபாரதம்
சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளது!
இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.
மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார்.
உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீ விருது 2018இல் வழங்கப்பட்டது.
Xxxxx
பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாது‘ என, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்‘ என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது. அவர் கூறிய கருத்துகள் அடிப்படை சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது‘ எனக் கூறி, வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஜூலை 13ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று ராம்தேவிடம் கூறுமாறு உயர் நீதிமன்றம் வழக்கறிஞரைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
xxxxxxxxxxxxxxx
பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
பல்கலைக்கழகங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பணி நியமனம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கபட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்யக் கோரி ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘‘தன் கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின் போது கவுதமன் தாக்கல் செய்யவில்லை. உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும் சட்டவிரோதமானது. தகுதியில்லாத கவுதமனை ஓய்வுபெற அனுமதித்தது தவறானது. அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக பாரதியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் பணிநியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும். பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து இருப்பதாக கண்டறிந்தால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
xxxxxxxxxxxxxxxxxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்
ராணி ஸ்ரீனிவாசன்

நன்றி, வணக்கம்
tags- உலக, இந்து சமய, செய்தி மடல் 6-6-2021,