
Post No. 9695
Date uploaded in London – –6 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பால்சாக் (Honoré de Balzac)

பால்சாக் என்பவர் பிரெஞ்ச் நாவலாசிரியர். இவர் 1799ஆம் ஆண்டில் பிறந்தார். 1850-இல் இறந்தார். புகழ் பெற்ற புதின எழுத்தாளர்களில் ஒருவர்.
பெற்றோர் தன் மீது பாசம் காட்டவில்லை என்று கருதிய பால்சாக் 21 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். நேரடியாக பாரிஸுக்குச் சென்று வாழ்ந்தார். எழுத்தாளராகி காலந்தள்ள முயன்றார். பாரிஸில் வாழ்ந்த காலத்தில் உயர்மட்ட மனிதர்கள் இவருக்கு அறிமுகமானார்கள். பணக்காரர்களைக் கண்டவுடன் அவருக்கும் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை வந்தது.
பால்சாக் எழுதிய முதல் புதினங்களுக்கு வரவேற்பு இல்லை. எழுத்துமூலம் போதுமான பணம் கிடைக்காததால் பெற்றோர்களிடமே திரும்பிச் சென்றார். பின்னர் புத்தகங்களை வெளியிடும் தொழிலில் இறங்கினார். அந்தத் தொழிலும் மூன்றே ஆண்டுகளில் படுத்துவிட்டது. பால்சாக்கின் வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான காலம் அது. மிகவும் மனம் உடைந்து போனார்.
இதற்குப் பின்னர் அவர் எழுதி வெளியிட்ட புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1831இல் THE WILD ASS’S SKIN என்ற அவரது நூல் வெற்றிநடை போட்டது. போலந்து பிரபு COUNTESS HANSKA இவரது ரசிகையானாள். அவருக்கு உடனே கடிதம் எழுதினார். இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. ஆனால் அந்த பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆனவள். ஆகையால் வெளிப்படையாக சந்திக்க முடியவில்லை. அவளைப் பார்ப்பதற்கு பால்சாக் ரோம், பிரஸ்ஸல்ஸ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வியன்னா என்று நகரம் நகரமாக அலைய வேண்டியிருந்தது.
இதற்குப் பின்னர் 18 ஆண்டுக் காலத்தில் பால்சாக் எழுதிய புத்தகங்கள் சக்கைப்போடு போட்டன. அவைகளில் சிறந்தது OLD GORIOT. இது ஒரு தந்தையின் துயரக்கதை. தனது குழந்தைகளை உளமார நேசித்த ஒரு தந்தை அவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து போகிறார். ஆனால் குழந்தைகளோ அவரிடம் சிறிதும் பாசமோ மதிப்போ வைக்கவில்லை என்பது கதையின் மையக் கருத்து.
பால்சாக்கிற்கு எழுதுவதில் வேகம் பிறக்கவே கடினமாக உழைக்கத் தொடங்குகிறார். சில நாட்களில் 16 மணி நேரத்திற்கு இடைவிடாமல் உழைப்பார். கடுங்காப்பியை கோப்பை கோப்பையாகக் குடிப்பார். அந்தக் காப்பியே அவரது உடலைக் கெடுத்துவிட்டது.
அவர் இறக்கும் தருவாயில் COUNTESS HANSKAவைத் திருமணம் செய்துகொண்டார். 18 ஆண்டுக் காதல் அப்போதுதான் கனிந்தது. அவர் பணக்காரராக வாழ்ந்தாலும் வரவுக்கு மேல் செலவு செய்தார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே இறந்து விட்டார். அப்போது அவர் பெரிய கடனாளி!
இவர் 90க்கும் மேலான நாவல்களை எழுதி 2000க்கும் மேலான கதா பாத்திரங்களைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

–subham–




tags- Balzak, பிரெஞ்ச், நாவலாசிரியர், பால்சாக்,