
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9728
Date uploaded in London – –13 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஜூன் 13 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx

கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – அமைச்சர் சேகர்பாபு
அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஜூன் 12 ம் தேதி நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும்.
மேலும் அவர் கூறுகையில், மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ, அதே நடைமுறையை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பார்கள். பெண்களும் அர்ச்சகர்களாக விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றார்.
xxxx


சிவபெருமான் கையில் மதுபானம்: சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு
சிவபெருமானை சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கராக செய்ததற்காக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில், பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில், சிவன் என தேடினால், சிவபெருமானின் கார்ட்டூன் ஒன்று, ஒரு கையில் மொபைல்போனும், மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் ஒன்று உள்ளது.
இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டில்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து தற்போது அந்த ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Xxxx

கோயில்களை பாதுகாக்க வேண்டும்.. கோயில் நகைகள், சிலைகள் பற்றியும் ஐகோர்ட் உத்தரவு
மாநிலத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய சிலை கடத்தல் பிரிவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ அரசுக்கு உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன.
மேலும், மாநிலத்திலுள்ள 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோவில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோவில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோவில்கள் முழுமையாகச் சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதி சிதிலமடைந்த, முழுமையாகச் சிதிலமடைந்த இந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலைத் தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலாகத் தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சிலைகள், நகைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன்,கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனவும், கோவில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். கோவில் நிலங்கள், சொத்துக்களைத் திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன
xxxx

கோவில் நிலங்களை குறைந்த வாடகைக்கு விடக்கூடாது: நிலுவை தொகையை வசூலிக்கவும் வலியுறுத்தல்
”கோவில் நிலங்களை வைத்து என்ன செய்யலாம் என்பது, அறங்காவலர் அதிகாரத்திற்கு உட்பட்டது; அரசு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே தர முடியும். கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என சொல்வது, சந்தனக்கட்டை வைத்து கொண்டு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது,” என, ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான, 300 ரூபாய் கோடி மதிப்பி லான, 5.52 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அமைச்சரும், கமிஷனரும் தனிக்கவனம் செலுத்தி மீட்டது, மகிழ்ச்சி அளிக்கும் செயல். ‘கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவை மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்படும்’ என, அமைச்சர் கூறியுள்ளார். அதையும் வரவேற்கிறோம்.அதேசமயம், அறநிலையத்துறை அமைச்சர், கமிஷனருக்கு சில விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
*கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவை மீட்கப்படும் என்று, அமைச்சர் கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. தற்போது, அத்தகைய மிக மதிப்புள்ள, ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பல உள்ளன.அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பரணி தீப கட்டளையின், 500 கிரவுண்ட் நிலம் சென்னை அடையாறிலும்; 175 கிரவுண்ட் நிலம் ராயப்பேட்டையிலும் உள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 250 கிரவுண்ட் நிலங்கள் கிரீன்வேஸ் சாலையிலும்; 150 கிரவுண்ட் நிலங்கள் லஸ் சர்ச் சாலை, ராமகிருஷ்ணா சாலையிலும் உள்ளன.காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்ட் நிலம் மீட்கப்படாமல் உள்ளது. கோடம்பாக்கம், பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 350 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த ஒரு கோவிலுக்கு மட்டும், 60 கோடி ரூபாய் வாடகை பாக்கி வரவேண்டியுள்ளது.
இவை அனைத்தும் சிறிய உதாரணங்கள் மட்டுமே. இந்த நிலங்கள் எல்லாம் மீட்கப்பட வேண்டும். வாடகை நிலுவை வசூல் செய்யப்பட வேண்டும் என ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
xxx

ராமர் கோவில் கட்டுமானம்; டிசம்பரில் கற்தூண் பணிகள்
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு அஸ்திரவாரம் அமைக்கும் பணி அக்டோபருக்குள் முடியும் என்றும், டிசம்பரில் இருந்து கற்துாண் அமைக்கும் பணி துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறியுள்ளதாவது: ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பூமிக்கு 50 அடி ஆழத்தில், 400 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலம் உடையதாக பிரமாண்ட கோவிலின் அஸ்திவாரம் அமைகிறது.
இந்த அஸ்திவாரம் அமைக்கும் பணி, வரும் அக்டோபருக்குள் முடியும். அதன்பின், கோவிலுக்கான கற்துாண்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள், டிசம்பரில் துவங்கும்.இதற்கான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
xxx

காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கோயிலில் தீ விபத்து
காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஷ்மீரின் ரீசாய் மாவட்டத்தில் கத்ரா நகரில் பிரசித்தி பெற்ற வைஷ்ண தேவி கோயில் உள்ளது. கோயில் வளாகத்தினுள் போடப்பட்டிருந்த கொட்டகையில் திடீரென தீ பற்றிக்கொண்டது. கொட்டகை முழுவதும் தீக்கிரையானது. |
தகவலறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதுவும் இல்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாகி தெரிவித்தார். தீ விபத்திற்கான காரணம் குறி்த்து விசாரணை நடந்து வருகிறது.
Xxx
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அதன் விவரங்களை பார்த்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தமிழ் நிலம்’ மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.
Xxxx
வாழ் நாள் சாதனையாளர் விருது
மயிலாடுதுறையிலுள்ள சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி அதன் முதலாவது ஆண்டுவிழாவை இணையம் வாயிலாக ஜூன் 11,12, 13ம் தேதி கொண்டாடியது. இன்றும் நேற்றும் வாழ் நாள் சாதனையாளர் விருது பலருக்கு வழங்கப்ப ட் டது. லண்டன் முருகன் கோவில் தலைமைக்கு குருக்கள் ஸ்ரீ நாகநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு இன்று சாதனையாளர் விருது கிடைப்பது குறித்து லண்டன் வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லண்டன் உலக இந்து மஹா சங்கம் , அகாதமிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவோர் :- காஞ்சிபுரம் கே ராஜப்பா சிவாச்சாரியார் , லண்டன் முருகன் கோவில் தலைமைக் குருக்கள் ஸ்ரீ நாகநாத சிவாச்சாரியார் , திருவிடை மருதூர் கண்ணப்ப சிவாச்சாரியார் ,மஹாதேவ குருக்கள், மதுரை தங்கம் பட்டர்.
விருது பெற்ற அனைவருக்கும் ஞானமயம் குழு வாழ்த்து தெரிவிக்கிறது
xxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்
ராணி ஸ்ரீனிவாசன்

நன்றி, வணக்கம்
tags- tamilhindunews, roundup13621,