
Post No. 9790
Date uploaded in London – –29 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பல நாடக ஆசிரியர்கள் சோக நாடகங்களை (Tragic Dramas) எழுதிவந்தனர் . அந்த வரிசையில் முன்னணியில் நின்றவர் யுரிபிடீஸ் (EURIPIDES) ஆவார். அவருக்கு முன்னால் , ஏஸ்கைலஸ் (AESCHYLUS), சோபோக்ளீஸ் (SOPHOCLES) போன்றோர் சோக நாடகங்களையும் கவிதைகளையும் எழுதினார்கள் . ஆனாலும் அந்த அழுகுணி எழுத்தாளர்க ளிடையையே முதலிடம் பெற்றவர் இவர்தான். சோக எழுத்தாளர்களிடையே மிகவும் சோகமாக எழுதியவர் யூரிபிடீஸ்தான் என்று அரிஸ்டாட்டிலே (ARISTOTLE) கூறிவிட்டார்.
யுரிபிடீஸ், ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். கசடறக் கற்றார். அந்தக் கால புகழ்மிகு தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் SOCRATES முதலியோருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்களுடைய போதனைகள் இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் தலை சிறந்த , கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர் ஆனார் .அவருடைய காலத்தில் எழில் மிகு ஏதென்ஸில் புதிய கொள்கைகள், தத்துவங்கள் துளிர்விட்டன; அந்த புதிய அணுகுமுறையை சிக்கெனப்பிடித்த யூரிபிடீஸ் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கு சவால் விட்டார்..
கிரேக்க மக்களின் வாழ்க்கையில் நாடகம் முக்கிய இடம்பெற்றது. அவ்வப்போது நாடகப் போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றி பெறுவோர், சமுதாயத்தில் பிரமுகர் ஆகிவிடுவார்கள். அவர்கள் எங்கு சென்றினும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தன. முப்பது வயதிலேயே நாடகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. மீண்டும் மீண்டும் பகீரதப் பிரயத்தனம் செய்தார் . 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசை வென்றார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அன்றோ!’
முதல் முதலில் அவரது நாடகங்கள் அரங்கேறியபோது வாதப் பிரதிவாதங்கள் வெடித்தன. சர்ச்சைப் புயல் வீசியது. ஏனைய நாடக ஆசிரியர்களைப் போல கிரேக்க நாட்டின் இதிஹாச, புராண கதாநாயகர்களையே அவரும் நாடக மேடை ஏற்றினார். ஆனால் அவர்கள் பேசிய வசனங்களோ புதுமையாக இருந்தன. அவர்கள் யதார்த்த மனிதர்களை போல பேசினர் . இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எல்லோரும் அறிந்த புராண கதாபாத்திரங்கள், தற்காலத்த்தில் வாழ்ந்தால் என்ன செய்வார்கள், எப்படிப் பேசுவார்கள் என்று காட்டினார். அதுமட்டும் அல்லாமல் இரும்பு நெஞ்சம் படைத்த உணர்ச்சிமிக்க ஒரு பெண்ணை முக்கிய கதா பாத்திரமாகவும் நுழைத்தார். அவருடைய மெடியா MEDEA நாடகம் இதற்கு ஒரு சான்று.
92 நாடகங்களை எழுதிய போதும் அவருடைய நான்கு நாடகங்களுக்கு மட்டுமே முதல் பரிசு கிடைத்தது. அவர் இறந்த பின்னர்தான் மேலும் புகழ் பரவியது. அவருடைய நாடகங்களை ரசிகர்கள் நகல்/ படி எடுத்து தொடர்ந்து நடித்தனர். ஆகையால் அவருடைய பல நாடகங்கள் காலத்தை வென்று இப்போது நம் கைகளில் தவழ்கின்றன.
யூரிபிடீஸ் பிறந்த ஆண்டு – கி.மு 485
இறந்த ஆண்டு – கி.மு.406
வாழ்ந்த காலம் – 79 ஆண்டுகள்
அவர் எழுதிய நாடகங்களில் நமக்குக் கிடைத்தவை:-
Publications
All years in BCE
431 – MEDEA
426- ANDROMACHE
422 – THE SUPPLIANTS
415 – THE TROJAN WOMEN
413 – ELECTRA
412 – HELEN
410 – THE PHOENICIAN WOMEN
408 – ORESTES
PUBLISHED AFTER HE DIED —–
405 – THE BACCHAE






–SUBHAM—
TAGS- யுரிபிடீஸ் , சோக, கிரேக்க, நாடகம்,EURIPIDES