
Post No. 9832
Date uploaded in London –9 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எமிலி டிக்கின்ஸன் (EMILY DICKINSON) என்ற அமெரிக்கப் பெண் கவிஞரின் வாழ்வு மிகவும் மர்மம் மிக்கது. அவர் உயிருடன் இருந்த போது ஏழு கவிதைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துபோன பின்னர் அவருடைய பெட்டி ஒன்றை சகோதரி திறந்து பார்த்து பிரமித்துப் போனாள் . அதில் 2000 கவிதைகள் இருந்தன.அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை முழுதும் அச்சாகின.இன்று அவர் புகழ் அமெரிக்கா முழுதும் பரவி இருக்கிறது. ஆங்கிலக் கவிதை ரசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எமிலியின் கீர்த்தி பரவிவிட்டது .
எமிலி திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் வெள்ளை உடையையே அணிந்தார். பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி எவரையும் சந்திக்க மறுத்தார். ஆயினும் கடிதங்களை எழுதிக் குவித்தார். அவற்றின் மூலம் எல்லோரையும் தொடர்பு கொண்டார். மரணத்தைத் தனது நண்பன் என்றும் , அதைச் சந்திக்கத் தயார் என்றும் எழுதினார். பிற்காலத்தில் இவர் புகழ் பரவியபோது இவரது வாழ்வைத் சித்தரித்தோர் அவரை அமைதியான எரிமலை (Silent Volcano) என்றும். பிரஷர் குக்கர் (Pressure Cooker) என்றும் வருணித்துள்ளனர்


பிறந்த தேதி – டிசம்பர் 10, 1830
இறந்த தேதி – மே 15, 1886
வாழ்ந்த ஆண்டுகள் – 55
எமிலியின் வாழ்க்கை விந்தையானது; புதிரானது. ஒரு சன்யாசினிபோல ஏன் வாழ்ந்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை ; இதுவரை புரிபடவும் இல்லை. எல்லா குடும்பங்களிலும் நடை பெறும் பிரச்சனைகள்தான் இவரது சகோதரி, சகோதரர் வாழ்விலும் இருந்தன. அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா, வேலை நிமித்தம் வெளியூர் சென்றாலும் குழந்தைகளின் படிப்பில் நல்ல கவனம் செலுத்தினார். நல்ல வசதியான குடும்பம்தான் .
அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பகுதியில் ஆமர்ஸ்ட்(Amherst) என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர்.. பள்ளிக் கல்வியை முடித்த எமிலி, ஒரே ஒரு ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாசித்தார். அது ஒரு பெண்கள் கல்லூரி ஹா ஸ்டல். வீட்டுக்குத் திரும்பியவுடன் அம்மாவுக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டதால் தங்கையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை வகித்தார்.
பகல் முழுதும் ரொட்டி சுடுதல், தையல் வேலை, தோட்ட வேலை, நாயை கூட்டிக்கொண்டு உலா வருதல்; இரவு முழுதும் எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் படித்தல், கவிதை எழுதல் என்று தன வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். அன்பு, வாழ்க்கை, வலி, வேதனை, மரணம், இயற்கை என்று பல விஷயங்களை கவிதையில் வடித்தார்.
கவிதையைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மனிதர்களைச் சந்திக்க மறுத்தார். 40 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறியதே இல்லை. தோட்டத்தின் வேலிதான் அவருக்கு எல்லை. அதைத் தாண்டவுமில்லை. புது முகங்களை சந்தித்ததும் இல்லை. ஏன் இந்த மாறுதல்? இதுவரை எவருக்கும் புரிபடவில்லை. அவரும் எழுதி வைக்கவில்லை. அவர் எழுதிய ஏராளமான கடிதங்களையும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2000 கவிதைகளையும் வைத்து ஊகிக்கத்தான் முடிகிறது. அப்போதும் புதிர் விடுபடவில்லை .
அவர் வாழ்ந்தகாலத்தில் ஒரு சில கவிதைகளே வெளியிடப்பட்டன. அவைகளையும் சிலரே புரிந்து கொண்டனர். அவருடைய காலத்துக்குப் பொருந்தாத விஷ யங்கள்; பொருத்தமில்லாத சொற்கள் ; ; புதிய எண்ணங்கள்; ஆழ்ந்த பொருள் படைத்தவை. இவரைத் தவிர மற்ற கவிஞர்கள் வார்த்தைகளைக் கொண்டு இந்திரஜாலம் செய்த காலம் அது. சொல் வேட்டுவர்களுக்கு சுவை தரும் கவிதைகளை மற்றவர்கள் எழுதினர்.
அவர் 55 வயதில் இறந்த பின்னர், அவனுடைய தங்கை ஒரு பெட்டியைத் திறந்துபார்த்தபோது சுமார் 2000 கவிதைகள் இருந்தன. 1955ம் ஆண்டு வாக்கில் அவை முழுதும் அச்சுக்கு வந்தன.
இவ்வளவு கவிதைகளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடிதங்களையும் எழுதிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்ததால் இவரைப் பற்றி பல திரைப்படங்களும், புஸ்தகங்களும், டெலிவிஷன் தொடர்களும், வானொலி நிகழ்ச்சிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆமெர்ஸ்ட்(Amherst) என்னும் அமெரிக்க கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தை அமெரிக்க அரசு தேசீய வரலாற்றுச் சின்னமாகஅறிவித்துள்ளது.
எமிலி இறந்த பின்னர் வெளியான அவரது கவிதை நூல்கள் –
1890 – POEMS BY EMILY DICKINSON
1891 – POEMS SECOND SERIES
1896 – POEMS THIRD SERIES
1914 – THE SINGLE HOUND
1955 – THE COMPLETE POEMS OF EMILY DICKINSON
IN THREE VOLUMES
1958 – THE LETTERS OF EMILY DICKINSON
IN THREE VOLUMES
1961 – FINAL HARVEST


–சுபம்-
tags- 2000 கவிதை, பெட்டி, , அமெரிக்க பெண்மணி, எமிலி டிக்கின்ஸன் ,EMILY DICKINSON,

