


Post No. 9879
Date uploaded in London –21 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரோமானிய காதல் பாடல் கவிஞர் ஓவிட்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் காதல் பாட்டுக்களை நகைச் சுவை ததும்ப எழுதிய புலவர் ஓவிட் (OVID) , லத்தின் மொழி இலக்கிய கர்த்தாக்களில் வர்ஜில் , ஹோரஸ் போன்றோருடன் வைத்து எண்ணப்படுபவர்.
ரோமானிய புராணத்தையும் இவர் சுவைபடப் பாடியுள்ளார். மத்திய இத்தாலியில் சல்மோனா என்னும் ஊரில் பணக்கார நிலச் சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, ‘மகனே நீ சிறந்த வழக்கறிஞர் ஆக வேண்டும்’ என்று சொல்லி ரோம் நகருக்குக் கல்வி கற்க அனுப்பிவைத்தார். ஓவிட்டுக்கு வழக்காடுதலைவிட சொல்லாடல், கவியாடுதல் மிகவும் பிடித்தது. ஆகையால் வழக்கறிஞர் படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு எழுத்துச் சித்தராக மாறினார். நல்ல சுக போக வாழ்வு. முப்பது வயதுக்குள் ரோம் நகரம் முழுதும் அறிந்த பிரமுகர் ஆனார்.
ஓவிட் , அகஸ்டஸ் சக்ரவர்த்தி காலத்தில் வாழ்ந்தார். அவர்தான் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. அதற்கு முன்னர் பல நுற்றண்டுகளாக இருந்த ரோமானிய ஆட்சி ஊழல் புயலில் சிக்கி, உ ள் நாட்டுப் போரில் இடிந்து விழுந்தது .புதிய சக்ரவர்த்தி புராதன ரோம சாம்ராஜ்ய பண்புகளை மீண்டும் எழுப்ப அரும்பாடு பட்டார் . பழைய பண்புகள் மலர வேண்டும் என்றார் .
இந்த சூழ்நிலையில் ஓவிட் காதல் பற்றி ஒரு கிண்டல், நக்கல் கவிதை (THE ART OF LOVE ) எழுதினார். அது அகஸ்டஸை ஆத்திரப்படுத்தியது. ஒரு ஆணையோ பெண்ணையோ மயக்கி காதல் வலையில் சிக்க வைப்பது பற்றி அவர் பகடியும் கேலியும் மிகுந்த கவிதை ஒன்றை யாத்தார். அவருடடைய யாப்பு, அவருக்கு ஆப்பு வைத்தது . ஆபாசக் கவிதை எழுதிய குற்றத்துக்காக உம்மை நாடுகடத்துகிறேன் என்று சொல்லி, சக்ரவர்த்தி அகஸ்டஸ், நமது கவிஞர் ஓவிட்டை கருங்கடல் கரையிலுள்ள ஒரு தன்னந்தனிக் காட்டு ஊருக்கு அனுப்பினார்.
ரோம் நகரை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மெட்டமார்பசிஸ் METAMORPHOSES என்னும் நூலை எழுதி முடித்தார். ரோமானிய கிரேக்க புராணக் கதைகளில் வரும் தேவதைகளைப் பற்றிய நூல் இது. இதன் பொருள் – உரு மாற்றம்.
கருங்கடலோர ஊரில் தனிமை வாழ்வு வாழ்ந்தபோதும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. தன்னை மீண்டும் ரோம் நகருக்குள் அனுமதிக்கும்படி கெஞ்சிக் கெஞ்சி கவிதைகளை யாத்தார் . அனால் அகஸ்டஸோ , அவருக்குப் பின்னர் வந்த டைபீரியஸ் என்ற மன்னரோ மனம் மாறவேயில்லை. ஓவிட் , கடலோர ஊரிலேயே உயர்நீத்தார் .
பிறந்த தேதி – மார்ச் 20, கி.மு.43
இறந்த ஆண்டு – கி.பி.17
வாழ்ந்த ஆண்டுகள் – 60
எழுதிய நூல்கள் –
Between 16 BCE AND 2 CE
AMORES
HEROIDES
THE ART OF LOVE
THE CURES OF LOVE
BETWEEN 2 CE AND 17 CE
FASTI
METAMORPHOSES
TRISTIA
–SUBHAM—
TAGS- ரோமானிய, காதல் பாடல், கவிஞர் ,ஓவிட், OVID

