
Post No. 9894
Date uploaded in London – 26 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc
உரை எண் : 5 – 20-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது
சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம்!
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டிற்கும், ஆற்றல் இன்றியமையாதது. நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணெய் வளம் உள்ளிட்ட படிம எரிபொருள்களாலேயே உலகில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இந்த படிம எரிபொருள்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி நச்சு வாயுக்களை வளி மண்டலத்தில் கலக்கச் செய்கிறது.
ஆகவே மனித குலம் மாற்று முறையில் தயாராகும் ஆற்றலை எதிர்நோக்குகிறது. ஒரு பெரும் வரபிரசாதமாக சூரிய ஆற்றல் தங்கு தடையின்றி எங்கும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு அரிய சக்தி. இந்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி சோலார் கார்கள் எனப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்குத் தயாராக உள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட படிம எரிபொருள்களிலிருந்து உலகம் விடுதலை பெறும்; சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் மாசும் குறையும்; அபாயமும் மறையும்.
இன்று புழக்கத்தில் வந்துள்ள சோலார் பேனல்கள் (Solar Panels) நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாது. சோலார் பேனல்களால் உருவாக்கப்படும் 879 மெகாவாட் ஆற்றலானது ஐந்து லட்சத்தி நாற்பதினாயிரம் டன்கள் கழிவுப் பொருளை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிப் பெறும் ஆற்றலுக்குச் சமம். ஒரு மெகாவாட் என்பது பத்து லட்சம் வாட்களாகும் (Watts). சோலார் பேனல்களை தயாரிக்க நீர் தேவைப்படுவதில்லை என்பதால் அரிய நீர்வளமும் சேமிக்கப்படுகிறது. சூரிய ஆற்றல் தெளிவானது, மாசில்லாதது, அதிகம் செலவில்லாதது. ஒரு ஐந்து கிலோவாட் சூரிய ஆற்றல் மின் அமைப்பை ஒருவர் 25 ஆண்டுகள் பயன்படுத்தினால் அது 2,98,108 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைட் உருவாவதைத் தடுக்கும். புகை மூட்டத்தை உருவாக்கும் நச்சு வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடில் 928 பவுண்டுகள் என்ற அளவு தடுக்கும், அமில மழையை உருவாக்குகின்ற சல்பர் டை ஆக்ஸைடில் 840 பவுண்டுகள் உருவாவதைத் தடுக்கும், ஆஸ்த்மாவை உருவாக்கும் துகள்மங்களில் (particulates) 57 பவுண்ட் உருவாவதைத் தடுக்கும். படிம எரிபொருள்களைப் பயன்படுத்தி 25 வருடங்களில் ஒருவர் ஓட்டும் சுமார் மூன்று லட்சம் மைல்களில் வரும் நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுக்கும. இப்படி உலகளாவிய விதத்தில் பல லட்சம் பேர்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்தால் ஏற்படும் நல்விளைவுகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக அமையும். அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியை வரவேற்று சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம். புவியை மாசில்லாத பூமியாக மாற்றுவோம்!
–subham–
சூரிய சக்தி
