
Post No. 9909
Date uploaded in London – 30 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc
உரை எண் : 7 – 22-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

‘ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம்!
‘ஸ்வச்ச பாரத் உருவாக்குவோம்’, ‘பசுமை பூமியை உருவாக்குவோம்’, போன்ற குறிக்கோள்களை நாம் கொள்ளும் போது அவை மிகவும் கடினமானவை என்றோ அல்லது அடைய முடியாத இலக்கு என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கழிவைக் குறைப்பதும், ஆற்றல் அல்லது சக்தியை மேம்படுத்துவதும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் எளிதில் அடையக் கூடிய லட்சியமாகும். எடுத்துக் காட்டாக சிலவற்றைப் பார்ப்போம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் உள்ள சாதாரணமான பல்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும் காம்பாக்ட் ஃப்ளோரெஸண்ட் பல்பாக (Compact Flourescent Bulb) மாற்றினால் குறைந்த பட்சம் பத்து லட்சம் கார்களை சாலைகளிலிருந்து அகற்றினால் கிடைக்கும் மாசற்ற சூழ்நிலையை அடைவோம். கணினிகளை அப்படியே ‘ஸ்லீப்’ பாங்கில் (mode) வைத்து விட்டுச் செல்லாமல் அவற்றை முழுவதுமாக மூடி விட்டால் 40 வாட்- ஹவரை நாள் ஒன்றுக்குச் சேமிக்கலாம்.
டிஷ் வாஷரை அல்லது வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும் போது அவற்றை உரிய முறையில் முழுக் கொள்ளளவு பயன்படுத்தினால் ஏராளமான நீரைச் சேமிக்க முடியும். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தினால் காற்று மாசு விலகும். பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே கழிவாகத் தூக்கி எறிந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் அவை மக்கிப் போகாது. தினமும் அசைவ உணவைச் சாப்பிடுவோர் வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அதை விலக்கினால் பூமியின் மாசைக் குறைத்தவர்களாவோம். ஒரு கிலோ இறைச்சிக்கு 15400 லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்து கொண்டோமானால் நீரை எப்படி சைவ உணவினால் காக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். பல மரங்களையும் காப்பாற்றியவர்களாவோம். பேப்பர் நாப்கின்களைப் பயன்படுத்தும் பழக்கம் பரவலாக அதிகமாகி வருகிறது. இதைக் குறைத்தால் குப்பை நிரப்புப் பரப்பு வெகுவாகக் குறையும்.
ஆயிரக்கணக்கான டன் பேப்பர்கள் அலுவலகங்களிலும் வணிக வளாகங்களிலும், கல்வி பயிலும் இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தி பேப்பரை எறியாமல் இரு பக்கமும் பயன்படுத்தும் பழக்கத்தினால் பேப்பர் பயன்பாடு பாதியாகக் குறையும். இதனால் மரங்கள், காடுகள் பாதுகாக்கப்படும்.
ஒவ்வொரு சிறு விஷயமும் அரிய விதத்தில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் என்பது இதிலிருந்து புலனாகிறதல்லவா?

***
tags- ‘ஸ்வச்ச பாரத்

