
Post No. 9921
Date uploaded in London – 2 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாத்மா காந்திஜி : தன்னைப் பற்றிய தவறான விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!
ச.நாகராஜன்
1
மஹாத்மா பற்றிய தவறான விமரிசனங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே ஏராளம் உண்டு. அதைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை. அத்தோடு தனது பக்கம் பேசும் யாரையும் அவர் ஊக்குவிக்கவும் இல்லை. ஒருவரின் நடத்தையின் மூலமே அவரைப் பற்றிச் சமூகம் அறிய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
சாதாரணமான ஒரு அடிமை சமூகத்தில் வெள்ளையர் ஆட்சியில் இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகம் தான் என்றாலும் அவர் அதைத் தான் எதிர்பார்த்தார்.
இரு சம்பவங்களை இங்கு காணலாம்.
வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
கப்பலின் பெயர் எஸ்.எஸ். ராஜபுதனா.
கப்பலில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் ஐரோப்பியரே. அவர்கள் கப்பலிலேயே ஒரு கிளப்பைக் கொண்டிருந்தனர். கிளப்பின் பெயர் வில்லிகோட்ஸ். அவர்களுக்கென ஒரு டைப் அடிக்கப்பட்ட பத்திரிகையும் கப்பலிலேயே வெளியாகிக் கொண்டிருந்தது. அதன் பெயர் ஸ்காண்டல் டைம்ஸ் (Scandal Times). பெயருக்குத் தகுந்தாற் போல அதில் வரும் செய்திகளும் ஸ்காண்டலாகத் தான் இருக்கும். மக்களைப் பற்றிய பல தவறான அபத்தமான செய்திகள் அதில் வெளியிடப்பட்டிருக்கும்.
காந்தியடிகள் கப்பலில் பயணம் செய்வதை ஒட்டி அவரைப் பற்றிய தவறான செய்திகளும் அதில் இடம் பெற்றன. இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் அவருக்கெனவே ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது தான்!
அந்த சிறப்புமலர் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு ஆங்கிலேயர் காந்திஜியிடம் வந்தார்.
“மிஸ்டர் காந்தி! இந்த இதழில் அஞ்சலி உங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உறுப்பினர்களின் நல்லெண்ணத்துடன் இதை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் இதைப் படியுங்கள். படித்தபின் தங்களின் மேலான அபிப்ராயத்தைத் தெரியப்படுத்துங்கள்” என்றார் அவர்.
அவர் சாராயமும் அருந்தி இருந்தார். அவர், “மிஸ்டர் காந்தி! நான் எனது காபினில் இரண்டாவது கிளாஸ் அருந்து முன் உங்களது பதில் எனக்கு வேண்டும்” என்றார்.
மஹாத்மா அந்த பத்திரிகையை ஒரு நோட்டம் விட்டார். அது எப்படிப்பட்ட பத்திரிகை என்பதை ஒரு கணத்தில் அவர் புரிந்து கொண்டார். அந்த “சிறப்பிதழில்” பேப்பர்களைக் கோர்த்து அதன் மேல் வைக்கப்பட்டிருந்த கிளிப்பை அவர் எடுத்துக் கொண்டார்.
பிறகு அந்தப் பத்திரிகையை அந்த ஆங்கிலேயரிடம் திருப்பிக் கொடுத்தார். திருப்பிக் கொடுக்கும் போதே, “ இதில் வேலைக்கு ஏற்ற தேவையான பொருளை நான் எடுத்துக் கொண்டேன். மீதியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
அந்த ஆங்கிலேயர் வெட்கத்தினால் தலை குனிந்து வந்த வழியே திரும்பினார்.

2
இன்னொரு சம்பவம் இது:
வருடம் 1928. ஷ்ரத்தானந்த் என்று ஒரு வாரப் பத்திரிகை வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் விநாயக் ராம் சவர்கார் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவர் காந்திஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கான்பூரிலிருந்து வெளியாகும் ப்ரதாப் என்ற பத்திரிகை அந்தக் கட்டுரைக்குப் பதில் சொல்லும் விதத்தில் இரு தலையங்களை எழுதி வெளியிட்டது. அதில் அதன் ஆசிரியரான கணேஷ் சங்கர் வித்யார்த்தி, மிகக் கடுமையாக சவர்க்காரை விமர்சித்திருந்தார். இதைப் படித்த காந்தியவாதிகளே சற்று திகைத்தனர். அப்படி ஒரு விமரிசனம் அது! உடனே காந்திஜியின் தொண்டரான ராம்நாராயண் சௌத்ரி தனது அபிப்ராயத்தை எழுதி அந்த ஆசிரியருக்கு எழுதினார். அதை காந்திஜிக்கும் அனுப்பினார். உடனே ராம்நாராயணுக்கு காந்திஜியிடமிருந்து பதில் வந்தது.
அன்புள்ள ராம்நாராயண்,
உங்களது கடிதம் கிடைத்தது. ஷ்ரத்தானந்த் இதழில் என்னைப் பற்றி என்ன வெளியாகி இருக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை. ஓரிரு இதழ்களை சில நிமிடங்கள் மட்டுமே நான் பார்வையிடுகிறேன். யாரும் எனக்காக பதில் சொல்லவேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்தக் கடிதத்தை நீங்கள் விரும்பும் வண்ணம் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் ‘ப்ரதாப்’புக்கும் எழுதுகிறேன்.
உங்கள்
மோஹன் தாஸ்
மஹாத்மா தன்னைத் தாக்கி எழுதுபவர்களைப் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை. அதற்கு அவரும் பதில் எழுதுவதில்லை, மற்றவர்கள் எழுதுவதையும் விரும்புவதில்லை. ஒருவரின் நல் நடத்தையே அவருக்கான சிறந்த தற்காப்பு என்பது அவரது கொள்கை. அவரது நேரம் இவர்களுக்குப் பதில் சொல்லி வீணடிக்கப்படாமல் இன்னும் நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர் விருப்பம். அப்படி எழுதுபவர்களை அவர் எப்போதுமே மன்னித்து விடுவார். அது அவரது பன்முகம் கொண்ட பரிமாணங்களில் ஒரு அம்சமே.

3
இந்த 2021இல் யூடியூபர்களைச் சற்றுப் பார்ப்போம். விஷமி ஊடகங்களைச் சற்று நோக்குவோம். அற்புதமான அறிவியல் முன்னேற்றத்தை எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தால் மனம் மிகவும் நோகிறது இல்லையா. பொய், பொய், பொய்! விஷமத் தனமான பிரசாரம்! தூற்றுதலுக்கு ஒரு எல்லையே இல்லை! ஆபாசமான வார்த்தைகள்!
நாம் எங்கே செல்கிறோம் – கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இப்படிச் செய்யலாமா? இதற்கு ஒரு முடிவை எடுக்க மக்கள் அரசைத் தூண்ட வேண்டுமல்லவா! இப்படிப்பட்ட ஊடகங்களை காந்திஜியின் பாணியில் ஒதுக்குவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்! செயல்படுவோம்!!
***
Inded
Mahatma Gandhiji
Round Table conference, Travel by Ship, typed magazine, scandal times, Gandhiji removed Clip.
Savarkar, Shraddhanda magazine, Pratap magazine, Ram Narayan, Gandhiji – don’t defend me, time to be used for better purposes
Many Youtubers’ wrong presentation, Medias’ lies, Freedom of Expression should be safe guarded safely and not to be used wrongly
***

tags- மஹாத்மா காந்திஜி , கவலை, தவறான , விமரிசனங்கள்