
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9979
Date uploaded in London – 15 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 15 ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
நேயர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
XXXX
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்-
58 பேருக்கு பணிநியமன ஆணை

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.
இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14- ஆம் தேதியன்று, வழங்கினார்.
மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
தமிழில் அர்ச்சனை புதிதல்ல‘ : ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம்
‘கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல’ என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.

‘கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா’ என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது. அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Xxxx
பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த கவர்னர் தமிழிசை
தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை, பொங்கல் வைத்து தலையில் சுமந்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் “போனாலு” என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.
தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையன்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.
அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.
xxxxxxx
காஷ்மீரில் கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு

காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ் மீருக்கு வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
XXXX
முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி/திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆகஸ்ட் 8ம் தேதி காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.
ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.
xxxxx
திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ. 55.5 கோடி
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது. 35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
Xxxx
வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை
வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ”இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,” என்றார்.
Xxxxxxx
ராமர் கோவில் கட்டுமானத்தை பக்தர்கள் பார்க்க அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.
கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்
என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.
Xxxx
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முக்தி அடைந்தார்

77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
மதுரை ஆதீனத்தின் உயிர் வெள்ளிக் கிழமை இரவில் பிரிந்தது.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
XXXX
மதுரை ஆதீனத்தின் புதிய 293வது குருமகா சன்னிதானம் தேர்வு.
ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் நியமிக்கபட்டுள்ளார். சிலநாட்கள் சென்ற பின்பு ஆதினப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்
tags- Tamil hindu, Newsroundup, 1582021