


Post No. 10,076
Date uploaded in London – 10 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்காட்லாந்து தேசீய புலவர் (National Poet of Scotland) ராபர்ட் பர்ன்ஸ் (ROBERT BURNS)
ஒரு ஏழை விவசாயி கவிஞர் ஆன வரலாறு ஸ்காட்லாந்தில் இருக்கிறது. ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் ஸ்காட் மக்கள் வரலாற்றைப் போற்றி, அந்த பிரதேச மொழி வழக்கில் ( SCOTTISH DIALECT ) கவிதைகளை இயற்றியதால் அவர் ஸ்காட்லாந்தின் தேசீய கவிஞராகக் கருதப்படுகிறார்.
ஆங்கில கலாசாரம் ஸ்காட்லாந்துக்கே உரிய கலாசாரத்தை விழுங்கி ஏப்பம் விடக்கூடிய தருணத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகன் அந்த கலாசாரத்தைக் காப்பாற்றினார். ராபர்ட் பர்ன்ஸ் ஒரு ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ஆயினும் அவருடைய தந்தை, தன் மகன்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தார். மேற்கு ஸ்காட்லாந்தில் அல்லோவே ALLOWAY என்னும் இடத்தில் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்தார்
ராபர்ட்டும் ROBERT அவருடைய சகோதரர் கில்பெர்ட்டும் GILBERT சேர்ந்து குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யத் துவங்கினர். ஆனால் அந்த நிலம் வளமான நிலம் இல்லாததால் விளைச்சல் இல்லை. தந்தை பாராத நேரத்தில் பல பெண்களையும் கவிதைகளையும் ராபர்ட் காதலித்தார். பல கவிதைகளை இயற்றியது போல பல குழந்தைகளையும் பெற்றெடுத்தார் பல பெண்கள் மூலம்!
பல காதலிகளில் ஒருவரான ஜீன் ஆர்மர் JEAN ARMOUR என்பவரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் பெண்ணின் தாயும் தந்தையும் சம்மதிக்கவில்லை. அந்தக்காலத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களை அவர் கற்றபோதும் ஸ்காட்லாந்தின் வட்டார மொழியில் (Scottish dialect) கவிதைகளை எழுத அவர் துணிந்தார். அத்தோடு ஸ்காட்டிஷ் சர்ச்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
வட்டார ஆங்கில மொழி வழக்கில் அவர் எழுதியதை ஸ்காட்லாந்து மக்கள் வரவேற்றனர் . 27 வயதானபோது தான் எழுதியவற்றை POEMS ‘’கவிதைகள் என்ற தலைப்பில் புஸ்தகமாக வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் எடின்பரோ நகருக்குக் குடியேறினார் . அங்கு உயர்குல மக்களுடன் கலந்து பேசி மகிழ்ந்தார். இவர் பெயரும் புகழும் பெற்றவுடன் ஜீனின் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பச்சைக் கொடி காட்டினார்கள் .
மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் பிறக்கவே முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக, வரி வசூல் அதிகாரி வேலை கிடைத்தது.
1784 முதல் 1786 வரையான காலத்தில் நீண்ட கவிதைகளை எழுதினார். பின்னர் கவிதைகளை விட்டுப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். சிவப்பு ரோஜா A RED, RED ROSE என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதியதோடு பிறர் எழுதிய பாடல்களையும் திருத்தி(Edit) மேம்படுத்தினார். அவருடைய யாப்பிலக்கண கவிதைகளைவிட மெல்லிசைப் பாடல்களே அவருக்குப் புகழ் சேர்த்தது. அவருக்கு இருதய நோய் இருந்ததால் இளம் வயதிலேயே உயிர் துறந்தார். கல்யாணம் கட்டிய எட்டே ஆண்டுகளில் அவர் ஆவி பிரிந்தது.


ராபர்ட் பர்ன்ஸ்
பிறந்த தேதி – ஜனவரி 25, 1759
இறந்த தேதி – ஜூலை 21, 1796
வாழ்ந்த ஆண்டுகள் – 37
அவருடைய நூல்கள்-
1786 – POEMS , CHIEFLY IN THE SCOTTISH DIALECT
***
PUBLISHED AFTER HE DIED
1834-1886 – THE WORKS OF ROBERT BURNS
1938 – ROBERT BURN’S COMMONPLACE BOOK 1783-85
–SUBHAM–tags- ஸ்காட்லாந்து, தேசீய புலவர், ராபர்ட் பர்ன்ஸ் ,ROBERT BURNS,ஏழை
விவசாயி, புலவர்

