ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு ….2 (Post.10,205)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,205

Date uploaded in London – 13 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 2

ச.நாகராஜன்

“திரு நெடு வேல் இறை கந்த புராணம் அதைச் செந்தமிழ் செய்து தந்த

பொருவறு மெய்க் கச்சியப்ப சிவ புகழைப் பைந்தமிழிற் புகன்று தந்தான்

மருவுறு தில்லைப் பதி வாழ் மறைஞான குரவன் வரு வாமதேவ

குருவளர் தொன் மரபுதித்த  முருக பட்டாரகன் என்னுங்குரிசின் மாதோ

என்ற கவி வாக்கால் முருக பட்டாரகர் தான் மறைஞான சம்பந்த குருவின் மரபில் வந்தவர் என்பதை உறுதிப் படுத்துகிறார்.

தொண்டை நாட்டுப் பெருமையைப் பேச வந்தவர்,

சேக்கிழார் கலியனார் திருக்குறிப்பினார்

மேக்குறு பூசலார் விழையும் வாயிலார்

தேக்குமை யடிகளார் திகழு மூர்க்கனார்

ஆக்கமொடு உதித்தருள் அடைந்த நாடிதால்

என்று கூறி சேக்கிழார், கலிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், பூசலார் நாயனார், வாயிலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், மூர்க்க நாயனார் ஆகிய பெரியோர் அவதரித்த மண்டலம் தொண்டை மண்டலம் எனப் பெருமை படக் கூறுகிறார்.

முருகனே வந்து வீரசோழியச் செய்யுளை எடுத்துக் காட்டி அருள் பாலித்து மறைந்ததை ஆசிரியர் சிறப்புறப் பல செய்யுள்கள் மூலம் விவரிக்கும் பாங்கு அருமையாக இருக்கிறது.

பின்னர் தனது மாணாக்கரான கோனேரியப்பரை நோக்கி கச்சியப்பர், “ஸ்காந்தத்தின் ஏழாவது பகுதியான உபதேச காண்டத்தைத் தமிழ்ப் படுத்துக என்று அருள்கிறார்.

“மங்கலத்துறும் இடாடி மந்தலரிழிக்குஞ் செம்மை

யங்கமுளருனப் புத்தேள் அணி மகரத்தினின்றி

யங்கவுற்றிடு கரீரமென் றனைவோருங் கூறத்

திங்களினுருவ மூன்று திகழ் திருத் திங்கணாளில்

கச்சியப்பர் சிவபிரானொடு ஒன்றினார்.

கந்த புராணம் வாழ்க, ஆதிசைவர்கள் வாழ்க, என்று வாழ்த்துக் கூறி கந்த புராணத்தை எடுத்துரைத்தவர், ஆய்ந்தவர், கற்றவர், இனிக் கற்கப் போகின்றவர், உள்ளம் உருகிக் கேட்பவர்கள் ஆகிய அனைவரும் முக்திப் பேறை அடைவர் என்று உறுதி கூறி நூல் முடிவு பெறுகிறது.

நூலுக்கு அற்புதமாக அருள் வாழ்த்துரைகள் வழங்கியோரின் உரைகளில் ஒரு பகுதி இதோ :

திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் – கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள் ஆண்டு தோறும் இது போன்று சிறந்த நூல்களைப் பதிப்பித்து வருதல் பாராட்டத்தக்கது.

தருமை ஆதீனம் 27ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் – இந்நூலில் மூலப்பாடல் மட்டுமே இருந்த நிலையில் அவற்றுக்கு உரை எழுதப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுவது அறிந்தோம். இது சைவத்திற்கும் தமிழுக்குமாகிய தொண்டு

திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் கயிலைமாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ  காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் – பன்முகச் சிறப்புடன் நூல் வெளிவந்து பல்லாயிரம் பக்தர்களுக்கு விருந்து தந்து பரவசமூட்டிடச் செந்திற்கந்தன் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.

ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீமத் ராஜ.சரவணை மாணிக்கவாசக குரு பரமாச்சார்ய சுவாமிகள் – இவ்வரிய பயனுள்ள பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அனைவருக்கும் குருவருளும் திருவருளும் என்றும் முன்னிற்கவும் சைவக் கொள்கை நிறைந்து வாழும் அனைவருக்கும் இந்நூல் வரப்பிரசாதமாக விளங்குவதால் அனைவரும் பெற்று குருவருள் பெற்றிடவும் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம்.

விகாஸ் ரத்ன சிவஸ்ரீ கே. பிச்சை குருக்கள் – உரையாசிரியர் கூனம்பட்டி ஆதீனப்புலவர் உயர்திரு. இராம. மாணிக்க வாசகர் அவர்களின் ரத்தினச் சுருக்கமான அழகான உரை பாராட்டத் தக்கதாகும்.

மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனரும், முதல்வருமான சிவஸ்ரீ ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார் – “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி என்பார் நாவரசர். அவ்வாறு சிவ சிந்தையுடையோரால் ஆக்கப்பட்ட புராணங்களைப் படனஞ் செய்தும் செய்வித்தும் வந்தால் சிந்தை தெளிந்து ஏகாக்கிர சித்தமாய மகிழ்வுடன் வாழலாம் என்பது இந்நூலைப் பயிலுவோர்க்கு விளங்கும்.

திருச்சி, மலைவாசல் சிவஸ்ரீ M.N. கல்யாணசுந்தர சிவாச்சாரியார் – ஆதிசைவ மரபில் வந்துதித்த கச்சியப்ப சிவாசாரியார் புகழ் பாடும் இந்நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீள்பதிவு செய்து குருமரபினை நிலைநாட்டி வரும் எமது பேரன்புக்குரிய தில்லை கு. கார்த்திகேயசிவம் அவர்களின் இச்சேவை பாராட்டுக்குரியது. இப்புத்தகத்தை அன்பர்கள் வாங்கி படித்து குருவருள் பெற்றுய்ய ப்ரார்த்திக்கின்றோம்.

முத்தமிழ்ச் சைவ மாமணி சு. இராமலிங்க சுவாமிகள் (சீவம்பட்டியார்) – இது சைவ உலகிற்கு ஒரு அருட்கொடையாகும். சிவநேய மிகுந்த அன்பர்கள் கற்று உணர்ந்து சிவனருளைப் பெறுவீர்களாக

இந்நூலைப் பதிப்பித்த தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தனது பதிப்புரையில் 1) பழமையான நூலைப் பாதுகாத்து, மறுபதிப்பு செய்து, வரும் தலைமுறைகளுக்குத் தருவதும் உயர் சிவப்புண்ணிய தர்மமே ஆகும் 2) பழமையான இந்நூல் கருத்துக்கள் சைவ உலகைச் சென்றடைய வேண்டும் 3) காலவெள்ளத்தால் இந்த நூல் அழிந்து விடாமல் உயிர்பெற வேண்டும் என்ற இந்த மூன்று காரணங்களை முன் வைத்து அவற்றை மனதில் கொண்டு, தான் இந்த நூலைப் பதிப்பித்ததாகக் கூறுகிறார்.

கம்பன் கழகம் போல கச்சியப்பர் கழகமும் உருவாகி கந்தபுராணம் அனைத்துத் தமிழர் இல்லங்களையும் அடையும் என எதிர்பார்க்கலாம்.

“வாழ்க இந்த முயற்சி. நூலகங்களிலும் தமிழர் இல்லங்களிலும் தவறாது இந்த நூல் இடம் பெற வேண்டும்.” என்ற நமது வாழ்த்தையும் அளித்து இந்த நூல் தனது இரண்டாம் பதிப்பை விரைவில் காணும் என்ற நம்பிக்கையையும் இங்கு பதிவு செய்கிறோம்.

Tags- கச்சியப்ப சிவாச்சாரியார், புராணம், part 2

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: