Post No. 10,271
Date uploaded in London – 29 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கச்சியப்பரைத் தந்தப் பல்லக்கில் ஏற்றி நகர் வலம் வந்தவர் யார்?
ச.நாகராஜன்
தொண்டை மண்டல சதகம் தொண்டை நாட்டின் ஏராளமான சிறப்புக்களை நூறு பாடல்களில் தரும் அற்புத நூல். காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாசாரியார் தாம் இயற்றிய கந்த புராணத்தை அரங்கேற்றினார்.
திகடச் சக்கரம் என்று முருகனே அடி எடுத்துக் கொடுக்க கச்சியப்பர் இதை இயற்றி அருளினார்.
இது பற்றிய கட்டுரையை ஏற்கனவே பிரசுரித்திருப்பதால் அதை மீண்டும் இங்கு தரவில்லை (கட்டுரை எண் 10200 வெளியிட்ட தேதி 12-10-2021 மற்றும் கட்டுரை எண் 10205 வெளியிட்ட தேதி 13-10-2021 பார்க்கவும்)
தொண்டை மண்டலச் சிறப்பைச் சொல்ல வந்த சொக்கநாதப் புலவர் கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றியது தொண்டை மண்டலத்தில் தான் என்று கூறிச் சிறப்பிக்கிறார்.
கச்சியப்பர் கந்தனின் மஹிமையைக் கூறும் புராணத்தை இயற்றியதால் இருபத்துநான்கு கோட்டத்து வாழ் வேளாளர்களும் மனம் மிக மகிழ்ந்தனர். கச்சியப்பர் ஒரு வருடம் இந்தப் புராணச் செய்யுள்களை விவரித்துத் தினமும் கூறி வந்தார். 24 நான்கு கோட்டத்தைச் சேர்ந்த வேளாளர்களும் இறுதி நாளன்று அவரை ஒரு தந்தப் பல்லக்கில் ஏற்றி திருமுறையையும் வைத்து தாமே சுமந்து நகர் வலம் வந்தனர். பின்னர் அதைக் கோவிலில் முறையாக பூஜை செய்து அரங்கேற்றினர்.
இந்தப் பெருமையை புலவர் 27ஆம் பாடலில் தருகிறார் இப்படி:-
அந்தப்புரமு மறுநான்குகோட்டகத் தாருமொன்றாய்க்
கந்தப்புராணம்பன் னீராயிரஞ்சொன்ன கச்சியப்பர்
தந்தப் பல்லக்கையுந் தாங்கிக் குமரர் பொற் சந்நிதிக்கே
வந்தப் புராண மரங்கேற்றினார் தொண்டை மண்டலமே (பாடல் 27)
பாடலின் பொருள் :- கந்தனின் சரித்திரமாகிய கந்தப்புராணத்தைப் பன்னீராயிரம் செய்யுள்களால் செய்தவர் கச்சியப்ப சிவாசாரியர். அந்தப் புராணத் திருமுறையோடு தந்தப் பல்லக்கின் மீது அவரை ஏற்றி தாமே சுமந்து நகர் வலம் வந்து, குமர கோட்டத்தில் அரங்கேற்றுவித்தவர் தொண்டை மண்லத்தைச் சேர்ந்த இருபத்து நான்கு கோட்டத்தும் காஞ்சீபுரத்தும் வாழ்ந்த வேளாளரே தாம்!
கடவுள் வாழ்த்து, நூல் பெயர், அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகிய நூலுக்குரிய அம்சங்களைப் பெற்றுள்ள கந்த புராணமானது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் (‘குற்றமில்லாத அருட்குரவராகிய கச்சியப்ப சிவாசாரியர் சகாத்தம் எழுநூற்றில்”) கச்சியப்ப சிவாசாரியரால் கச்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றப்பட்டது. இதில் மொத்தம் 10346 பாடல்கள் உள்ளன.
***
tags – கச்சியப்பர், தந்தப் பல்லக்கு, நகர் வலம் ,