Post No. 10,331
Date uploaded in London – – 13 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc
12-11-2021 காலை ஒலிபரப்பான இரண்டா உரை கீழே தரப்படுகிறது.
பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள்! ச.நாகராஜன்
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழும் ஒரே இடமாக இருப்பது அற்புதமான பூமி மட்டுமே ஆகும். இதில் உள்ள கடல்கள் மூலம் நீரைப் பெறுகிறோம். காடுகள் மூலம் பல வாழ்வாதாரங்களை அபரிமிதமாகப் பெறுகிறோம். ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு பெரும் அபாயமாக இருப்பது பிளாஸ்டிக்கே!
இது பிரபஞ்சத்தில் விஞ்ஞானிகள் விளக்கும் ஒரு பெரிய கருந்துளை – ப்ளாக் ஹோல் – போல இன்று ஆகி, அனைத்தையும் விழுங்கும் நிலையில் இருக்கிறது. நீரில் நாம் எறியும் அனைத்தும் நமக்கே திரும்பி வருகிறது. ஆம், ஒவ்வொரு ஆண்டும் நாம் 8 ட்ரில்லியன் (Trillion) கிலோகிராம் பிளாஸ்டிக் பொருள்களை உலகெங்கும் உள்ள கடல்களில் தூக்கி எறிகிறோம். ஒரு ட்ரில்லியன் என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் பெரிய எண்ணிக்கையாகும். இப்படிப் போடப்படும் பிளாஸ்டிக் மாசு மனித குலத்தை அழிக்கும் பெரும் அபாயமாக மாறி இருக்கிறது.
இந்த அபாயத்தை உணர்ந்து மனித குலம் அலறும் போது, இதைப் போக்க தம்மால் முடிந்த அளவு சிறிய உணவு விடுதி வைத்திருக்கும் சாமானியரிலிருந்து பெரும் நிறுவனம் வரை பல அரிய செயல்களைச் செய்து வழிகாட்டுகின்றனர். அவற்றில் சிலவற்றைப் பார்த்து உத்வேகம் பெறுவோம்.
அந்தமான் தீவிலிருக்கும் இயற்கை ஆர்வலர்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க எண்ணி அதை எண்ணத்தோடு நிறுத்தாமல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தி அதற்குப் பதிலாக மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். சிறு மரக் கன்றுகளையும் நாற்று இளஞ்செடிகளையும் பிளாஸ்டிக் பைகளில் மண்ணைப் போட்டு அதில் வைப்பது வழக்கம். அதை நிறுத்தி அப்படிபட்ட மரக்கன்றுகளை மூங்கிலினால் ஆன கூடைகளில் போட ஆரம்பித்து புதிய வழியைக் காட்டியுள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ள முனிசிபல் கார்பரேஷன் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து தரும் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே பெருமளவு கழிவு பிளாஸ்டிக் பொருள்கள் நீங்கி நகர் சுத்தமாகிறது. ஏழைகளும் உணவை இதற்கான உணவு விடுதியிலிருந்து இலவசமாகப் பெறுகின்றனர்.
கௌஹாத்தியில் உள்ள ஒரு பள்ளி (அக்ஷர் என்ற பள்ளி) தனது மாணவர்களை பிளாஸ்டிக் கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வர ஊக்கப்படுத்துகிறது. அவர்கள் இப்படி கழிவு பிளாஸ்டிக் பொருள்களைத் தரும் போது அதுவே அவர்கள் கொடுக்க வேண்டிய பள்ளிக் கட்டணமாகக் கருதப்படுகிறது. பள்ளிக் கட்டணம் அவர்களுக்கு இந்த சேவையின் மூலம் கிடையாது.
இது போல ஒவ்வொரு ஊரிலும் புது விதமான வழிகள் உருவாக்கப்படுகின்றன; பிளாஸ்டிக் கழிவுகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. நாமும் சில புதிய வழிகளைக் காணலாமே!
–subham–
**
Tags- பிளாஸ்டிக், அபாயம் ,