WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,527
Date uploaded in London – – 5 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 2
ச.நாகராஜன்
அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் அவரை ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொள்ள எண்ணி அவருக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.நிதி சால சுகமா என்ற கீர்த்தனையைப் பாடினார். நிதியா பெரிது, ராம பக்தி அல்லவோ பெரிது என்றார் அவர். மன்னனோ வற்புறுத்தினான். உடனே அவனுக்கு வயிற்று வலி வந்தது. காரணத்தை ஊகித்த அவன் தியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்க உடனே அவனது வயிற்று வலி நின்றது.
ஒரு சமயம் தல யாத்திரையாகக் கிளம்பிய தியாகராஜர் திருப்பதி மலைக்கு வந்தார். அர்ச்சகர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர். ஸ்வாமிக்கு முன்னே திரை தொங்கியது. உடனே தியாகராஜர் ‘தெர தீயக ராதா’ என்ற கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். உடனே திரை கீழே விழுந்தது. தியாகராஜர் ஸ்வாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியிலிருந்து காஞ்சீபுரம் செல்லக் கிளம்பினார் தியாகராஜர்.
அங்கே வழியில் புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு பாலகன் இறந்திருந்தான். அவனை கருணையுடன் உயிர்ப்பித்தார்.
தியாகராஜரின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பலரும் அவரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதில் மிகக் குறியாக இருந்தனர். ஆசியும் பெற்றனர்.
ஶ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் திருவையாறு சென்று அவரை அடிக்கடி சந்தித்து இசை கேட்டு மகிழ்வது வழக்கம்.
கோபாலகிருஷ்ண பாரதியார் அவரது இல்லத்தின் வாசலில் ஒரு நாள் அமர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். வெளியே வந்த தியாகராஜர் அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அவர் மாயூரத்திலிருந்து வருவதாகச் சொன்னார். ‘அப்படியா, அங்கு கோபால கிருஷ்ண பாகவதர் என்பவர் சிறப்பாகப் பாடல்களைப் பாடுகிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார் தியாகராஜர். ‘அடியேன் தான் கோபாலகிருஷ்ணன்’ என்று பணிவுடன் பதிலிறுத்தார் கோபாலகிருஷ்ண பாகவதர். அவரை வரவேற்று மகிழ்ச்சியுடன் உபசரித்த தியாகராஜர், ‘ஆபோகியில் என்ன பாடல் பாடி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். தான் ஒரு பாடலையும் ஆபோகியில் இது வரை இயற்றவில்லை என்று பதில் கூறினார் கோபால கிருஷ்ண பாரதியார்.
தியாகராஜர் காவிரி ஆற்றுக்கு காலையும் மாலையும் இரு முறை தவறாது செல்வது வழக்கம். காவிரி ஆற்றுக்கு அவர் சென்று திரும்பி வந்த போது கோபாலகிருஷ்ண பாரதியார், ‘இதோ ஆபோகியில் இப்போது நான் இயற்றிய பாடல் இது’ என்று கூறி ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா’ என்ற பாடலைப் பாடிக் காட்டினார். இது தான் அந்தப் பாடல் பிறந்த கதை!
தியாகராஜரின் அண்ணனுக்கு அவரது பெயரும் புகழும் பிடிக்கவில்லை. ஒரு முறை அவர் பூஜித்து வந்த விக்ரஹங்களை அவர் காவிரி ஆற்றில் எறிந்து விட்டார். விக்ரஹங்களைக் காணாமல் துடிதுடித்துப் போன தியாகராஜர் அழுது புலம்பினார். பல பாடல்களைப் பாடி அரற்றினார். பக்தியும் சற்று சோகமும் ததும்பி இருக்கும் கீர்த்தனைகளாக இவை அமைந்துள்ளன. விக்ரஹங்கள் இருக்கும் இடத்தை இராமர் அருளால் அறிந்த அவர் அவற்றை மீட்டார்.
இதே போல தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நூற்றுக் கணக்கான கீர்த்தனைகளும் ஒவ்வொரு சுவையான சம்பவத்தைத் தரும்.
ராமாயணத்தில் முக்கிய காண்டம் சுந்தர காண்டம். அதை மையமாக வைத்து ஸ்வாமிகள் புனைந்த கிருதிகள் அபாரமானவை.
தியாகராஜரின் பெண் குழந்தைக்கு சீதம்மா என்று பெயர். சீதம்மாவின் கல்யாணத்தில் அவருக்குப் பரிசாக வந்தவற்றில் சீதா ராம லக்ஷ்மண படமும் ஒன்று. அதைத் தன் பூஜை அறையில் வைத்து ‘நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத’ என்ற கிருதியை இயற்றிப் பாடினார்.
சுமார் 212 ராகங்களில் அவரது கிருதிகள் அமைந்துள்ளன. அவரே உருவாக்கிய சுமார் 66 புதிய அற்புத ராகங்களில் அவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். கேஸரி, சுத்த பங்களா, பங்களா, ஜிங்களா,நபோமணி, சுத்த தேசி, கோலாஹலம், வசந்த பைரவி, மஞ்சரி என்று அவர் இப்படி அவர் உருவாக்கிய ஏராளமான அபூர்வ ராகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். புரந்தரதாஸர் சுமார் 25 ராகங்களைப் படைத்துள்ளார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
***
தொடரும்