WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,711
Date uploaded in London – – 4 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயி பாபா அருளுரை!
ச.நாகராஜன்
வேதங்களின் மஹிமை பற்றி ஶ்ரீ சத்யசாயி பாபா 3-10-1989 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஒரு விளக்கவுரையை நிகழ்த்தினார்.
அதன் மொத்த சாரம் வேதங்களை அலட்சியப்படுத்தினால் ஆன்மீகச் சீரழிவு ஏற்படும் என்பது தான்!
அவர் உரையின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:
வேதங்கள்
வேதங்கள் நான்கு.
ஒவ்வொர் வேதத்திலும் பல சாகைகள் (கிளைகள்) உண்டு. உபசாகைகளும் உண்டு. (உள் கிளைகள்).
ரிக் வேதத்தில் 20 சாகைகளும் 21 உபசாகைகளும் உள்ளன. அவற்றில் இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
அதே போல யஜூர் வேதத்தில் 96 சாகைகள் உண்டு. அவற்றில் இன்று நம்மிடம் காலவெள்ளத்தை எதிர்த்து இருப்பது இரண்டு மட்டுமே.
அடுத்து சாம வேதத்தில் 1000 சாகைகள் உண்டு. இன்று நம்மிடம் இருப்பது மூன்று மட்டுமே.
இப்போது நம்மிடம் இருக்கின்றவற்றிலேயே அத்துணை ஆன்மீகச் செல்வம் இருக்கிறது என்றால் வேதம் அனைத்தும் அப்படியே நம்மிடம் இன்று இருந்தால் பாரதீயர்களின் ஆன்மீகப் பாரம்பரியம் எவ்வளவு இருந்திருக்கும்!
வேதங்களை அலட்சியப்படுத்தியதாலேயே பாரதீயர்களின் ஆன்மீக மற்றும் அறிவியல் அறிவு படிப்படியாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக அவர்களிடையே ஒரு குறுகிய மனப்பான்மை வந்து விட்டது.
பரந்த பார்வை என்பதை கிரகணம் பிடித்து விட்டது.
இன்று வேதங்களின் பால் பற்றும் மதிப்பும் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பிராமணர்களிடையே கூட வேதத்தின் மீதுள்ள அக்கறையும் ஆர்வமும் குறைந்து விட்டது.
பிராமணர்கள்
பிராமணர்கள் யார்? பிராமணர் என்றால் மந்திரத்தின் மறு உருவம். பிரம்மத்தைக் குறிக்கும் மந்திரங்களை சீராக ஓதுபவர்களே பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்று பிராமணர்கள் தங்கள் மந்திரத்தை மறந்து விட்டார்கள்.
நவீனக் கல்வி முறை, பணத்தின் மீது கொண்ட பேராசை, குறுகிய மனப்பான்மையுள்ள் விஷயங்களின் மீதான ஆர்வம் ஆகிய இவற்றால் அவர்கள் தங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை மறந்து விட்டார்கள்.
அதன் விளைவாக, அமைதியும் பாதுகாப்பும் பலியாகி விட்டன.
வேதம் என்றால் என்ன? ஒரு அர்த்தம் விழிப்புணர்ச்சி என்பதாகும்.
இன்னொரு அர்த்தம் புத்திகூர்மை என்பதாகும். இன்னொரு அர்த்தம் விவேகம் என்பதாகும்.
விவேகத்தை வளர்க்க விரும்புவோர்கள் வேதத்தின் மீது அளவற்ற ஆர்வத்தைக் கொள்ள வேண்டும்.
இன்று புத்திகூர்மை அதிகார பதவிகள் மற்றும் உடைமைகளை பெறவும் வசதிகளையும் சுகங்களையும் பெறவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. நல்ல குணங்களை வளர்த்து இறைவனை அடையும் நோக்கத்துடன் நல்ல மனிதராக ஆவதில் அது பயன்படுத்தப்படாமல் போய் விட்டது. எல்லா புத்திகூர்மையும் சிறிய நோக்கங்களுக்காகவே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
பரந்து விரிந்த பார்வையைத் தரும் வேதங்கள்
மனித குணாதிசயங்களைக் கொண்டு அதன்படி வாழ்ந்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாலேயே மனிதன் நிஜமான மனிதன் என்று கூறப்படுவான் என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன.
இன்று வேதங்களை ஓதுபவர்களில் பலரும் அதன் உண்மையான நோக்கத்தை அறிய சிரமப்படுகிறார்கள்.
அவற்றின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அவற்றை அவர்கள் ஓதத் தொடங்கினால் எல்லையற்ற சந்தோஷத்தை அடைவார்கள்.
அப்போது மட்டுமே அவர்கள் வேதங்களின் உள்ளார்ந்த தெய்வீகத்தையும் ஆற்றலையும் அறிவர்.
வேதங்கள் எதெல்லாம் சிறந்தவையோ எதெல்லாம் உன்னதமானவையோ அவற்றைத் தழுவி உலகளாவிய பரந்த பார்வையைக் கொண்டுள்ளவை.
அனைத்திலும் சமத்வம் என்னும் கொள்கையை அவை கற்பிக்கின்றன.
ஏகம் என்ற ஒருமையை அவை பறை சாற்றுகின்றன.
துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகப் பாவிக்குமாறு அவை கற்பிக்கின்றன.
இன்று மந்திரங்களை ஓதுபவர்கள் அந்த உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
ஒரே ஒரு மந்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் கூட, அதுவே போதும்!
ஒவ்வொரு நாளும் சாந்தி மந்திரம் ஓதப் படுகிறது.
ஓம் சஹனாவவது|
சஹனௌ புனக்து|
சஹவீர்யம் கரவாவஹை|
இது எதைக் குறிக்கிறது?
நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்.
நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்த லயத்துடன் இருப்போம்.
என்ன ஒரு பிரமாதமான பரந்த ஒரு பார்வையை இந்த மந்திரம் தருகிறது!
இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையைச் சுட்டிக் காட்டும் மந்திரங்கள் கூட குறுகிய உணர்வில் இன்று தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆகவே தான் அந்தக் காலத்தில் இருந்த சமத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்றைய நாளில் நம்மால் காண்பதற்கு முடியவில்லை.
ஏனெனில் மனிதனின் அணுகுமுறைகளும் உணர்வுகளும் மனித அளவிலிருந்து கீழிறங்கி பிளவு சக்திகள் உட்புகுந்து விட்டதால் தான்!
மேற்கூறிய உரையில் பகவான் பாபா இன்னும் அதிக விளக்கங்களைத் தருவதோடு, வேதங்களையும் உபநிடதங்களையும் உள்ளபடி உணர்ந்து கொண்டால் தான் உண்மையான அத்வைதத்தை உணர முடியும் என்கிறார்.
இந்த உரை வேதங்களின் பெருமையை விளக்கும் அற்புதமான ஒரு உரையாகும்.
இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் ‘Sathya Sai Speaks’ தொகுதி 22இல் 29வது அத்தியாயமான ‘Message of the Vedas’ -இல் படித்து மகிழலாம்;
வேதங்கள் வாழி! பாரதம் வாழி வாழி!!
tags- பிராமணர்கள்,சத்யசாயி பாபா, வேதங்கள்,