Picture of Naguleswaram temple in Sri Lanka
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,726
Date uploaded in London – – 9 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
முதல் எழுத்து அலங்காரம் – 1
ச.நாகராஜன்
தமிழில் எழுத்து அலங்காரங்களில் மூன்று வகை உண்டு.
முதல் எழுத்து அலங்காரம், நடுவெழுத்து அலங்காரம், கடையெழுத்து அலங்காரம் என இப்படி மூன்று வகைகள்
உண்டு.
முதல் எழுத்து அலங்காரப் பாடல் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
கூத்திளமை நொய்மை மதி கூருநயம் மங்குலொடே
வாய்த்தசம்பை யென்றேழு மாண்பெயர்க்குஞ் – சார்த்துபதில்
ஏய்ந்தமுன்கள் சேர்ந்துநகு லேச சுவாமியெனா
வாய்ந்தபெய ரென்பாம் வழுத்து.
யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் 53வது பாடலாக இது அமைகிறது.
நகுலேசசுவாமியைத் துதித்துப் பாடும் இப்பாடலில் பல சொற்கள் உள்ளன.
அநதச் சொற்கள் சுட்டிக் காட்டும் அர்த்தமுடைய ஒரு சொல்லைக் கண்டுபிடித்து எடுத்து,
அதன் முதல் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து முதல் எழுத்துக்களையும் கோர்த்துச் சொல்லாக அமைத்துப் பார்த்தால் நமக்கு பாடலின் பொருள் எளிதில் விளங்கி விடும்.
மேலே உள்ள பாடலைப் பார்ப்போம்.
கூத்து – இது குறிப்பிடும் சொல் (ந)டனம் (இது பாடலின் முதல் அடியில் முதல் சொல்லாக வருகிறது)
இளமை – இது குறிப்பிடும் சொல் (கு)ழவு (இது பாடலின் முதல் அடியில் இரண்டாம் சொல்லாக வருகிறது)
நொய்மை – இது குறிப்பிடும் சொல் (லே)சு (இது பாடலின் முதல் அடியில் மூன்றாம் சொல்லாக வருகிறது)
மதி – இது குறிப்பிடும் சொல் (ச)ந்திரன் (இது பாடலின் முதல் அடியில் நான்காம் சொல்லாக வருகிறது)
நயம் – இது குறிப்பிடும் சொல் (சு)கம் (இது பாடலின் முதல் அடியில் ஐந்தாம் சொல்லாக வருகிறது)
மங்குல் – இது குறிப்பிடும் சொல் (வா)னம் (இது பாடலின் முதல் அடியில் ஆறாம் சொல்லாக வருகிறது)
சம்பை – இது குறிப்பிடும் சொல் (மி)ன்னல் (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)
கூத்து, இளமை, நொய்மை, மதி, நயம், மங்குல், சம்பை ஆகிய ஏழு சொற்களில் உள்ள (அடைப்புக்குள்
இருக்கும்) எழுத்துக்களை இணைத்துப் பார்த்தால் வருவது நகுலேசசுவாமி.
நகுலேஸ்வரரைத் துதிக்க முதல் எழுத்து அலங்காரப் பாடல் இது.
எப்படி ஒரு எழுத்து அலங்காரம் பாருங்கள்!
இப்படி ஏராளமான முதல் எழுத்து அலங்காரப் பாடல்கள் தமிழில் உள்ளன.
விந்தை மிகு எழுத்தலங்கார மொழி தமிழ் என்பது புலனாகிறது அல்லவா!
***
TAGS– முதல் எழுத்து, அலங்காரம்