WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,733
Date uploaded in London – – 11 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 1
ச.நாகராஜன்
சித்திர கவியில் வினா – உத்தரம் என்பது ஒரு வகை.
பாடலிலேயே வினாவும் அதற்கான பதிலும் – அதாவது உத்தரமும் – அமைந்திருப்பதால் இது வினா-உத்தரம் என்று அழைக்கப்படுகிறது.
இராமச்சந்திரக் கவிராயர் சித்திர கவி பாடுவதில் வல்லவர்.
அவர் திருவேங்கடநாதன் என்ற பிரபுவின் மீது பாடிய ஒரு பாடல் இது.
இரவல னேயுனக் கில்லாத தென்ன விதயமென்ன
பரவுண வேது சுவையற்ற தென்னசொற் பான்மையென்ன
தரவுரை செய்திட வென்றா னதற்கொன்றுஞ் சாற்றிலன் யான்
வரதிரு வேங்கட னாதாவென் றேன்பொன் வழங்கினனே
இந்தப் பாடலைச் சொன்னவுடன் திருவேங்கடநாதன் என்ற அந்த பிரபு பொன்னை வழங்கினார்.
அப்படி என்ன இருக்கிறது பாடலில்? பார்ப்போம்.
பொருள்:
இரவலனே – யாசகனே
உனக்கு இல்லாதது என்ன – உனக்கு இல்லாதது என்ன
இதயம் என்ன – உனது மனம் எத்தகையது
பர உணவு ஏது = மேன்மையாகிய உணவுக்கு ஆகாரம் ஏது?
சுவையற்றது என்ன – உணவுக்குச் சுவையற்ற உறுப்பு யாது?
சொல் பான்மை என்ன – நீ சொல்வதற்குரிய தன்மை யாது?
தர – நான் கொடுக்கும்படி
உரை செய்திட – சொல்லக் கூடியவை
என்றான் – எவை என்று வினவினான்
அதற்கு – அந்தக் கேள்விக்கு
யான் ஒன்றும் சாற்றிலன் – நான் ஒன்றுமே பதில் சொல்லவில்லை (என்றாலும் கூட)
வர திருவேங்கடநாதா – வர திருவேங்கடநாதா என்று மட்டும் சொன்னேன்
பொன் வழங்கினனே – நான் சொல்லிய அதன் பொருளை உணர்ந்து எனக்குப் பொன் வழங்கினானே
இந்தப் பாடலில் வினாவும் உத்தரமும் அடங்கியுள்ள விதத்தைப் பார்ப்போம்.
வினா உத்தரம்
உனக்கு இல்லாதது என்ன – திரு (செல்வம்)
இதயமென்ன – வேம் (புழுங்கும்)
உணவேது – கடன் (கடன் பட்ட பொருளினால் வாங்கிய உணவுப் பொருள்)
சுவையற்றதென்ன – நா (நாக்கு)
சொற்பான்மை என்ன – தா (கொடு)
பணம் இல்லாமல் புழுங்குகிறேன். கடன் பட்டு வாங்கிய பொருளையே உண்ணுகிறேன். சுவையற்ற நாக்கு உள்ளது. எனது சொல் ஒன்றே ஒன்று தான் – கொடு!
அவ்வளவு தான்! பொருளை உணர்ந்த திருவேங்கடநாதன் பொன்னை இராமச்சந்திரகவிராயருக்குத் தந்தார்.
தமிழுக்கு அழகிய இந்த வினா- உத்தரம் என்ற வகையிலான சித்திரக் கவி கிடைத்தது.
tags – இராமச்சந்திரக் கவிராயர் ,சித்திர கவி,திருவேங்கடநாதன்