WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,755
Date uploaded in London – – 18 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
முதல் எழுத்து அலங்காரம் – 2
ச.நாகராஜன்
முதல் எழுத்து அலங்கார வகையில் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
இதுவும் யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் உள்ள பாடலே. இது 54வது பாடலாக அமைகிறது.
பாடல் :
கட்டளைக் கலித்துறை
புடையிற் கடலொலி நீங்கா நகுலைப்பொ னாலயத்துக்
கடவுட் குரிய குணமா றொருங்குறக் காட்டுமொழி
யொடுநற் கிளியொரு கட்பறை தேம லுவைக்கியல்பே
ரடியிற் பசுபதி நாற்சிர மெஞ்சின ஆய்ந்தறியே
கடவுளுக்குரிய குணங்கள் ஆறு. இவற்றை ஒருங்கே காட்டும் மொழி
(ப) கம்
கிளியின் பெயர் : (சு) கம்
ஒரு கட்பறையின் பெயர் :- (ப) தலை
தேமலின் பெயர் :- (தி) தலை
மேலே உள்ள (அடைப்புக்குறிக்குள் உள்ள) முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் வருவது பசுபதி என்ற சொல்.
இந்த சொற்களில் (பகம், சுகம், பதலை, திதலை) முதல் எழுத்து நீங்க மீதி வரும் சொற்கள் – கம், கம், தலை, தலை.
இவை நான்கும் நான்கு சிரங்களாகின்றன.
என்றும் கடல் ஒலி நீங்காத, நகுல பொன் ஆலயத்து கடவுளுக்குரிய குணங்களை ஒருங்கே காட்டும் மொழியும் ஒரு நல்ல கிளியின் பெயரும், ஒரு கட்பறையின் பெயரும், தேமலின் பெயரும் சேர்த்து வரும் பசுபதிக்கு மீதி உள்ளவை நான்கு சிரங்களாகின்றன. ஆய்ந்து பார்த்து அறிவாயாக.
இப்படி முதல் எழுத்து அலங்கார வகைப் பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன.