WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,758
Date uploaded in London – – 19 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
கடை எழுத்து அலங்காரம் – 1
ச.நாகராஜன்
முதல் எழுத்து அலங்காரம், நடு எழுத்து அலங்காரம் பற்றிப் பார்த்தோம்.
இனி கடை எழுத்து அலங்காரம் பற்றிப் பார்ப்போம்.
இந்தப் பாடல், யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் 57வது பாடலாக அமைகிறது.
கள்ளுடனே பன்றிசங்கு கஞ்சனிவைக் கக்கரமூன்
றுள்ளசொல்லு ளிவ்விரண் டோர்ந்தெடுத்தால் – குள்ளகடை
யெட்டெழுத்தில் வேதனரி யேத்துபிதா வின் பொருள்கண்
டிட்டுநகு லேச்சரனை யெண்
பாட்டில் உள்ள எட்டு எழுத்துக்களைக் கண்டு, அதில் கடைசி எழுத்தை மட்டும் சேர்த்துப் பார்த்தால் வருவது விதி மால் துதி தாதை என்று ஆகும்.
இதுவே “வேதனரி யேத்து பிதா” என்பதற்கான பொருளாக அமைகிறது.
அதாவது விதி மால் துதி தாதை வேதனரி யேத்து பிதா.
கள்ளு மற (வி) சங்கு நந் (து)
குந் (தி) சுத் (தி)
பன்றி மைம் (மா) கஞ்சன் விதா (தா)
கேழ (ல்) தந் (தை)
இவற்றில் கடைசி எழுத்துக்கள். வி, தி, மா, ல், து, தி, தா, தை என்று ஆகிறது.
இவற்றைச் சேர்த்தால் வருவது ‘விதி மால் துதி தாதை’.
இதே நூலில் உள்ள இன்னொரு கடையெழுத்து அலங்காரப் பாடல் இது:-
எண்சீரடி விருத்தம்
செந்நீர்கா டுகிழாள்பா டலத்திற் கேய்ந்த
செழிய மொழி மூன்றனினீற் றக்க ரத்தால்
தன்னேரில் நகுலையிடை மேவு தெய்வச்
சங்கரனுந் தேவியுந் தோற் றிடந்தான் கண்டோம்
முன்னீரீ ரக்கரத்தாற் கண்டோ மீசன்
முழங்கு மணி வாசகர்க்காக் கொண்டமூர்த்த
மன்னான்மார் பகத்துமையாள் தனத்திழைத்த(து)
அவரிருவர் திருமேனி யளவு மாதோ
இது பாடல் எண் 58 ஆகும்
இதில் மூன்று சொற்கள் திகிரி என்ற சொல்லைத் தருவதைக் காணலாம்.
செந்நீர் —- குரு(தி)
காடுகிழார் —- வடு (கி)
பாடலம் —- பாதி (ரி)
இந்த மூன்று சொற்களின் கடை எழுத்துக்களை இணைத்தால் வருவது திகிரி.
திகிரி என்ற சொல் மூங்கிலைக் குறிக்கும். (பிங்கலந்தை நிகண்டு தரும் அர்த்தம் இது.)
அதே சொல் மலையையும் குறிக்கும். (திவாகர நிகண்டு தரும் அர்த்தம் இது. )
மூங்கில் – சிவன் தோற்றிடம்
மலை (கிரி) – உமையின் தோற்றிடம்
‘
நகுலையிடத்து மேவு தெய்வ சங்கரனும் உமையும் தோன்றிய இடம் எவை?
மூங்கிலும் மலையும் ஆகும்.
மூன்று சொற்களில் கடை எழுத்து நீங்கலாக அமையும் சொற்கள்
குரு, வடு, பாதி ஆகும்.
குரு’ என்பது சிவன் மாணிக்கவாசகர்க்காக கொண்ட மூர்த்தம்.
‘வடு’ என்பது சிவன் மார்பில் உமை தனத்தால் இழைத்தது
‘பாதி’ என்பது சிவன் மேனியில் உமை திரு மேனியின் அளவு ஆகும்.
புலவார் எப்படி ஒரு அருமையான கடை எழுத்து அலங்காரப் பாடலை இயற்றி இருக்கிறார் என்பதை அறிந்து வியக்க வேண்டியது தான்!