WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,780
Date uploaded in London – – 26 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
1
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 222-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய முதலாவது உரை
தட்பவெப்ப மாற்றத்தினால் ஏற்படும் கேடுகள்!
ச.நாகராஜன்
இப்போது உலகையே அச்சுறுத்தும் தட்பவெப்ப மாற்றத்தினால் ஏற்படும் தீங்குகள் பல.
அவற்றில் ஒன்று மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடாகும்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்று வியாதிகள் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
வெப்ப அலையினால் ஏற்படும் கேடுகள் ஒரு புறம் என்றால் அசுத்தமான நீரினால் ஏற்படும் கேடுகள் இன்னொரு புறம் இருக்கிறது.
தட்ப வெப்பம் மாறுபடும் போது வெள்ள அபாயம் ஏற்படுகிறது; தொற்று வியாதிகள் பரவுகின்றன; அசுத்தமான நீரினால் பல வியாதிகள் பரவுகின்றன.
உலகம் வெப்பமயம் ஆகிக் கொண்டே இருப்பதால் ஏற்படும் தீங்குகள் பல. இப்படி வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனால், 2050ஆம் ஆண்டு வாக்கில் மலைக்க வைக்கும் 251 சதவிகிதம் என்ற அளவில் உயிரிழப்பு இருக்கும். கனடாவிலும் அமெரிக்காவிலும் மட்டும் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட உஷ்ண நிலை அதிகரிப்பால் 500 பேர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலை நீடித்துக் கொண்டே போனால் 2100ஆம் ஆண்டு வாக்கில் 120 கோடி பேர் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்படுவர்.
இது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
அதிக வெப்பம் கிருமிகளை வேகமாகப் பரவச் செய்கிறது. ஜிகா (Zika), டெங்கு, சிக்கன்குன்யா, மலேரியா, நிபா (Nipa) ஆகியவை சமீப காலத்தில் பரவியதற்கு இதுவே காரணமாகும்.
நீரினால் ஏற்படும் வியாதிகள் ஐந்து மடங்கு இப்போது பெருகி விட்டன. இதனால் மனோ வியாதியும் கூடவே ஏற்படுகிறது.
16 வயது முதல் 25 வரை வயதுள்ள இளைஞர்கள் அச்சுறுத்தும் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பயப்பட ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே இந்த அச்சத்தைத் தகுந்த முறையில் போக்கி உலகைக் காப்பாற்ற வேண்டியது இன்றைய அவசரமான கடமையாக உள்ளது.
ஆங்காங்கே பசுமை வாய்ந்த காடுகள், சோலைகளை அமைத்துப் பாதுகாப்பது, நகரங்களை வெப்பத்திலிருந்து விடுவித்து குளிர்விப்பது, மழை நீரைச் சேமிப்பது, உலகெங்கும் தட்பவெப்ப மாற்றம் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றிச் சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது ஆகியவை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்களாகும்.
இது அனைவரது கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம்.
அனைவரும் இணைவோம்; வெல்வோம்.
***