WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,946
Date uploaded in London – – 7 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு ரூபாய் நோட்டு!
ச.நாகராஜன்
1917ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.
கொல்கத்தாவில் அவதரித்த பெரும் மகானான உபேந்த்ர மோஹன் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் மைமென்ஸிங் என்ற இடத்தில் டெபுடி மாஜிஸ்ட்ரேட்டாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது பிரிட்டிஷ் அரசு ஒரு ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது.
பேப்பரில் ஒரு நாணயமா?
இந்திய மக்களுக்கு அது கசந்தது.
இன்று எங்கு பார்த்தாலும் பேப்பர் நோட்டுகள் இருக்கும் காலத்தில் பேப்பர் நோட்டை இந்திய மக்கள் வெறுத்தார்கள் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியாக இருக்கும்.
ஆனால் அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் மீது மக்களுக்கு சந்தேகமும் வெறுப்பும் ஏற்பட்டது.
ஒரு ரூபாய் நாணயங்களை அனைவரும் 1.4 மடங்கோ அல்லது 1.8 மடங்கோ அதிகமாகக் கொடுத்து வாங்க முற்பட்டனர்.
பிரிட்டிஷ் அரசு தவித்தது.
இராக் என்று இன்று அழைக்கப்படும் மெஸபடோமியாவில் நடக்கும் போரில் பிரிட்டிஷ் அரசு பெரிய தோல்வியைத் தழுவப் போகிறது என அனைவரும் நம்பினர்.
அப்படி மெஸபடோமியாவில் அது தோல்வியுற்றால் இந்தியாவை விட்டு அவர்கள் ஓடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
இந்த சமயத்தில் லார்ட் ரொனால்ட்ஸே (Lord Ronaldsay) வங்காள கவர்னராக இருந்தார்.
அவர் ஒரு நாள் உபேந்த்ரமோஹன்ஜி வேலை பார்த்து வந்த மைமென்ஸிங்கிற்கு வந்தார்.
மரியாதை நிமித்தம் உபேந்த்ரமோஹன்ஜியும் இதர அரசு அதிகாரிகளும் கவர்னரைச் சந்திக்கச் சென்றனர்.
அப்போது இந்த ஒரு ரூபாய் நோட்டு பற்றிய பேச்சு எழுந்தது.
உபேந்த்ரமோஹன்ஜி மிக தைரியமாகத் தனது கருத்தைத் தெரிவித்தார் : “ மக்கள் இந்த ஒரு ரூபாய் நோட்டை அரசு வெளியிட்டதன் காரணமே வெள்ளி முழுவதையும் சுரண்டி எடுத்துச் சென்று விட்டு, வெறும் பேப்பர் கரன்ஸியை மட்டும் இந்தியாவில் விட்டு விடப் போகிறார்கள் என சந்தேகப்படுகிறார்கள்.”
பிரிட்டிஷ் அரசு நிச்சயமாக இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும் அதைத் தைரியமாகச் சொல்ல யாரும் முன்வருவதில்லை.
அதுவும் அரசு அதிகாரிகளோ நிச்சயமாக அதைச் சொல்லப் பயப்பட்டனர்.
ஆனால் உபேந்த்ரமோஹன் அவர்களோ அதை இப்படி தைரியமாக கவர்னரிடமே சொல்லி விட்டார்.
இதைக் கேட்ட லார்ட் ரொனால்ட்ஸே திகைத்துப் போனார்.
ஆனால் உடனே சமாளித்தவாறே, “ அந்தப் பணம் எங்கே போகப் போகிறதாம்?” என்று கேட்டு விட்டு அதற்குத் தானே பதிலையும் சொன்னார் : “மெஸபடோமியாவிற்கு என்று நான் நினைக்கிறேன்”
மேலும் அவர் தொடர்ந்தார்: “ அங்குள்ள போர்வீரர்களுக்கு!”
அனைவரும் பிரமித்துப் போயினர் – கவர்னரே இப்படிச் சொல்வதைக் கேட்டு!
பிரிட்டிஷ் அரசு சுரண்டிச் சென்ற வெள்ளி சொல்ல முடியாத அளவு அதிகம்! அந்தக் காலத்தில் வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. ஆகவே ஒரு ரூபாய் நோட்டு பேப்பராக வந்தவுடன் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதில் வியப்பே இல்லை.
முர்ஷிதாபாத்தில் பாகீரதி நதிக் கரை முழுவதும் முகலாயர் காலத்திலிருந்தே தாமிரத் தகடுகளால் நிரம்பி இருந்ததையும் அடுக்கு அடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த தாமிரத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி கபளீகரம் செய்ததையும் அனவரும் அறிவர்.
இப்படி பிரிட்டிஷார் அடித்த கொள்ளைகள் ஏராளம்.
இவற்றை எந்த வரலாற்றுப் புத்தகமும் சொல்வதில்லை. மெக்காலே கல்வித் திட்டம் வெகு கவனமாக இந்திய சரித்திரத்தைத் தனக்குச் சாதகமாக கிறிஸ்தவ மயமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் வகுத்தது.
இன்று நாம் படிக்கும் இந்திய சரித்திரத்தில் ஏராளமான பொய்கள் உள்ளன; ஏராளமான சரித்திர உண்மைகளும் அவர்கள் அடித்த கொள்ளையும் இடம் பெறவே இல்லை.
இப்போதாவது இந்திய மக்கள் விழித்தெழ வேண்டும்; உண்மையான புதிய இந்திய சரித்திரத்தை எழுத வேண்டும்.
செய்வோமா?
***
ஆதாரம், நன்றி : Truth Vol 89 No 30 dated 19-11-2021
tags- ரூபாய் நோட்டு!