WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,995
Date uploaded in London – – 17 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மனம் என்னும் மாயம்! – 2
ச.நாகராஜன்
மூளை தான் மனமா?
இல்லை!
மனித தேகமானது தோல், சதை, ரத்தம், மாமிசம், எலும்பு, மலம், சிறுநீர், கேசம், நகம் உள்ளிட்ட பலவற்றின் சேர்க்கையே.
நன்கு சோதித்தால் இவை தவிர மற்ற எதுவும் உடலில் காணப்படவில்லை என்பதால் இவை மட்டுமே ஸ்தூல தேகம் எனப்படுகிறது.
மூளையும் இந்த ஸ்தூல தேகத்தில் அடக்கம் என்பதும் பெறப்படுகிறது.
மூளை தான் மனம் என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் மூளை உள்ள போதெல்லாம் மனத்தின் தொழில் ஏற்பட வேண்டும்.
உறங்கும் போதோ, மயங்கி இருக்கும் போதோ (அதாவது ஸுஷூப்தி மற்றும் மூர்ச்சை காலங்கள்) மூளை இருந்தாலும் அது வேலை செய்யவில்லையே.
அதே போல ஒருவர் இறந்து விட்ட போதும் மனம் செயல்படக் காணோம்.
ஆகவே ஸ்தூல சரீரம், -மனித தேகம் – தான் மனம் என்பது சரியல்ல.
உண்மையில் மனம் என்பது தேகத்திலிருந்து வேறானது என்றும், அது ஸ்தூல சரீரத்தில் ஒரு ஆற்றல் போல உள்ளது என்றும், சங்கல்பம், காமம், நிச்சயம், ஊஹம் முதலியவற்றைச் செய்யும் ஒரு சூக்ஷ்ம வஸ்து என்றும் அறிய முடிகிறது.
மனதின் தோற்றமானது மூன்று விதமாக உள்ளது.
உணர்ச்சி, எண்ணம், தீர்மானம் (Feelings, Thought, Will) ஆகியவையே மனதின் தோற்றங்கள்.
இந்த மூன்றில் எது ஏற்பட்டாலும் மனித மூளை கொஞ்சம் சலிக்கிறது.
மனம் தொழில்படுகின்ற போது மூளையில் சலனம் ஏற்படுவது உண்மை.
மூளை என்பது தலையில் உள்ள ஒரு பாகம். இதில் சலனம் ஏற்படும் போது எண்ணம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. மனம் வேலை செய்யும் போது மூளை சலனப் படுகிறது என்பதும் உண்மையே.
மனம் காணப்படாத ஒரு சூக்ஷ்ம வஸ்து என்பதால் அதன் தொழிலும் சூக்ஷ்மமாகவே இருக்கிறது.
ஒரு சைக்கிளில் செல்கிறோம். காலால் மிதித்து அதை உந்துகிறோம். சைக்கிளும் காலும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
கடிகாரம் செயல்படும் போது மணிகாட்டி முள்ளும் விநாடி முள்ளும் நிமிஷம் காட்டும் முள்ளும் சலிக்கின்றன. அதனால் கடிகாரத்தில் உள்ள சக்கரங்களும் மணி, நிமிஷம், வினாடி காட்டும் முள்ளும் ஒன்று என்று சொல்ல முடியுமா?
சக்கர இயக்கம் வேறு; முள்களின் இயக்கம் வேறு.
முள்களின் இயக்கம் நம்மால் காணப்படுகிறது. சக்கர இயக்கங்கள் காணப்படவில்லை.
இவை இரண்டும் வேறு என்பது போலவே மூளை இயக்கமும் மனதின் இயக்கமும் வேறு வேறு தான்!
ஒரு நீதிபதியும் அவர் உட்கார்ந்து விசாரிக்கும் ஆசனமும் போலத் தான் மனமும் மூளையும் உள்ளது.
கோர்ட்டில் நீதிபதியின் ஆசனம் எப்போதும் உள்ளது. ஆனால் நீதிபதி அதில் அமர்ந்தால் தான் விசாரணை நடக்கும்.
அதே போல மூளை எப்போதும் இருக்கிறது என்றாலும் அந்த மூளையில் மனம் நின்று இயக்கம் ஏற்படவில்லை எனில் எண்ணம் உள்ளிட்டவை உண்டாவதில்லை. மனம் வந்து இயக்கம் ஏற்படும் போது உணர்ச்சி முதலியன ஏற்படுகின்றன.
ஆதலால் மூளையும் மனமும் வேறு வேறு என்பது உறுதிப்படுகிறதில்லையா!
***
Tags- மனம், மாயம், மூளை
atpu555
/ May 17, 2022ஐயா,வித்தியாசமான நல்ல ஆய்வுத் தொடர். தங்கள் மற்றைய கட்டுரைகளும் அவ்வப்போது வாசித்துப் பயனடைகின்றேன்.மிக்க நன்றி. ஒரு கேள்வி எழுகிறது… மூளை பழுதடைந்தால் மனதும் பழுதடைகிறதே? (உதாரணமாக, விபத்து அல்லது dementia போன்ற நோய்கள்)அதற்கு என்ன காரணம்? மூளையின் செயற்பாடாக மனம் இருப்பதால் அல்லவா?(இது மேலும் அறிவதற்காகக் கேட்கும் ஒரு கேள்வியேயன்றி உங்கள் கருத்துகளை முறியடிப்பதற்காக அல்ல) நன்றி.ஆனந்தன்.
santhanam nagarajan
/ May 22, 2022நல்ல கேள்வி.Theory of Mind பற்றிய ஏராளமான அறிவியல் ஆய்வுகள் பல இப்போது புது உண்மைகளைத் தருகின்றன. இந்தத் தொடரில் அவற்றையும் காண்போம். என்னடா, கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன், பதிலே காணோம் – செவிப்புலன் மனதுடன் இணையவில்லை. என்ன, எதிரிலேயே நின்று கொண்டிருக்கிறேன், வான்னு கூட சொல்ல மாட்டேன் என்கிறாய் – கண்ணுடன் மனம் இணையவில்லை என்று பொருள். நேரே பார்த்து வரக் கூடாதா – மேலே வந்து இடிக்கிறே – சாரி, சார், ஏதோ யோசனையா நடந்து வந்துட்டேன் – மனம் உடல் இயக்கத்துடன் இணையவில்லை என்று பொருள். ஆக மனம் புலனுடன் இணைந்தால் தான் ஒரு அனுபவம் ஏற்படுகிறது. சரி ஒரு புலன் பழுதடையும் போது என்ன ஆகிறது? கட்டுரைத் தொடரில் பார்ப்போம். மனம் எனும் மாயம் பெரிய subject. கேள்விக்கு நன்றி. சந்திப்போம் தொடரில்