எண்ணெய் வளம் கொண்ட துபாய் (Post.11,073)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,073

Date uploaded in London – –    2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

22-6-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!

ச. நாகராஜன்

எண்ணெய் வளம் கொண்ட துபாய்

இன்று உலகில் எத்தனை வாகனங்கள் உள்ளன தெரியுமா?

132 கோடி கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளன.

விமானப் பயணம் என்று எடுத்துக் கொண்டாலோ உலகில் ஒரு நாளைக்கு 60 லட்சம் பேர் விமானம் மூலம் பயணிக்கின்றனர். புகைவண்டியில் மட்டும் உலகெங்கும் ஒரு நாளைக்குப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சம்!

பெட்ரோல், டீஸல், ஒய்ட் பெட்ரொல் இல்லையெனில் என்ன ஆகும்? ஒரே ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம்! கார், லாரி, பஸ், ரயில், விமானம் எதுவும் இயங்காது. அலுவலகம் செல்ல முடியாது, நினைத்த ஊருக்குப் போக முடியாது, நாடு விட்டு நாடு போக முடியாது. உலகம் ஸ்தம்பித்து விடும்!

இது தான் இன்றைய நிலைமை. ஆக உலக இயக்கத்திற்குத் தேவை இந்த படிம எரிபொருள்களே! இவற்றைக் கொடுத்து உலக இயக்கத்திற்கு உதவும் நாடு தான் துபாய்!

எண்ணெய் வளம் மிகுந்த துபாய் உலகின் மூன்றாவது பெரும் பணக்கார நாடு! இன்னும் சுமார் 299 ஆண்டுகளுக்கு இது எண்ணெய் வளத்தைக் கொண்டிருக்கும். அதாவது 30 மில்லியன் பேரல் எண்ணெயை இது உலகிற்குத் தர வல்லது!

இன்று 12 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களே உள்ளன. ஆக வரும் காலத்திலும் படிம எரிபொருள் உலகிற்கு போக்குவரத்திற்கு உதவும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

வானளாவிய கட்டிடங்கள்

எமிரேட் ஆஃப் துபாயின் தலைநகரமாகத் திகழும் துபாய் மத்திய கிழக்கில் உள்ளது.13.5 சதுர மைல் பரப்பைக் கொண்ட இதன் ஜனத்தொகை 34.9 லட்சம். 1971ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அபுதாபி மற்றும் இதர ஐந்து எமிரேட்ஸுடன் இணைந்து துபாய் யுனைடெட் அராப் எமிரேட்ஸை உருவாக்கியது. 1973இல் பொது நாணயமாக யுனைடெட் அராப் எமிரேட்ஸ் திரம் திகழ ஆரம்பித்தது. ஒரு திரத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ 21.24.

வெறும் பாலைவனமாகத் திகழ்ந்த பூமியில் கறுப்புத் தங்கம் எனப்படும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் துபாயின் செல்வ வளமே நம்ப முடியாத அளவு சிகரத்தைத் தொட்டது. இப்போதோ

ஹாங்காங், சிங்கப்பூரை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவு இருப்பதோடு, துபாய் நாளுக்கு நாள் வளர்ந்து  கொண்டே போகிறது.

வானளாவிய கட்டிடங்கள் எழுந்து கொண்டே இருக்க கட்டிடப் பணிகளுக்காக உலகில் உள்ள கிரேன்களில் 25 சதவிகிதம் துபாயில் இருக்க ஆரம்பித்தன. இன்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய உலக நகரமாக துபாய் அமைந்து விட்டது.

சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் துபாயை விமானம் மூலம் அடைந்து விடலாம்.

துபாயின் சராசரி உஷ்ணநிலை 33 டிகிரி செல்ஸியஸ். 

துபாய் வரலாறு

துபாயின் பதிவு செய்யப்பட்ட முதல் ஆவணம் 1095ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அராபிய பூகோள நிபுணர் அப் அப்துல்லா அல் பக்ரி, துபாயைத் தனது பூகோள நூலில் குறிப்பிட்டுள்ளார். வெனிஷிய முத்து வியாபாரியான காஸ்பரோ பல்பி துபாய்க்கு 1580ஆம் ஆண்டு வந்து இங்குள்ள முத்து தொழிலைப் பார்த்துத் தனது குறிப்பேட்டில் குறித்துள்ளார். என்றாலும் கூட துபாய் நகர் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணம் 1799லிருந்தே தொடங்குகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துபாயில் பார்த்து மகிழப் பல்வேறு இடங்கள் உள்ளன.

பர்ஜ் கலிஃபா

கலிபா கோபுரம் என்னும் பொருள் தரும் பர்ஜ் கலிஃபா உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். 163 மாடிகளைக் கொண்டுள்ள இதன் உயரம் 2716 அடியாகும். கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்று விட்ட இந்த மாபெரும் கட்டிடம் அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் போல இரு மடங்கு உயரமும் ஈபில் டவர் போல் மூன்று மடங்கு உயரமும் கொண்டது. 26000 கண்ணாடிகள் வெளிப்புறத்தை அழகு படுத்த, 12000க்கும் மேற்பட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து இதை அழகுறக் கட்டி முடித்தனர். இதைப் பார்வையிட கட்டணமும் குறிப்பிட்ட நேரமும் உண்டு. 125 மாடிகள் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அதிவேகமாக உயர எழும்பும் லிப்டும் இங்கு அதிசயமான ஒன்று.

ஒட்டக சவாரி

வேறு எங்கும் அனுபவிக்க முடியாத பாலைவன ஒட்டக சவாரி துபாயில் பிரசித்தி பெற்ற ஒன்று. காலையில் கிளம்பி மணல் குன்றுகளிடையே பயணம் செய்யலாம். பின்னர் பாலைவனத்தில் பழைய  காலத்தில் பயணம் செய்தபடி ஒட்டகத்தில் சவாரி செய்து மகிழலாம்.  மணலில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி!

நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட க்வாட் பைக் எனப்படும் பைக் சவாரியும் இங்கு உண்டு.

துபாய் மால்

பர்ஜ் கலிஃபாவிற்கு அடுத்தாற் போல உள்ள துபாய் மால் உலகின் மிகப் பெரிய மால் ஆகும். பத்து லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் 1200க்கும் மேற்பட்ட கடைகளும் நூற்றுக்கணக்கான உணவு விடுதிகளும் இரு பெரிய ஷாப்பிங் செண்டர்களும் உள்ளன. துபாயில் தங்கம் வாங்குவது ஒரு சுகமான அனுபவம். சொக்கத் தங்கத்தை இந்த மாலில் கோல்ட் சோக்கில் (தங்கச் சந்தை என்று பொருள்)வாங்க முடியும். அத்துடன் நீருக்கடியில் உள்ள அண்டர்வாட்டர் ஜு, அக்வேரியம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். இங்குள்ள ஐஸ் ரிங், ஸ்கேட்டிங் செய்பவர்களுக்கு உரிய இடம் ஆகும். சினிமா காம்ப்ளக்ஸில் திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

பாம் ஜுமேரா

பனை மர வடிவத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தீவு பாம் ஜுமேரா. சுமார் 326 கோடி கன அடி மணல் பெர்ஸியன் வளைகுடா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பரப்பப்பட்டது. சுமார் 50 மைல் நீள கடற்கரை பகுதி உருவானது. பனை மரத்தைப் போலவே அச்சு அசலாக இந்தத் தீவு இருக்க வேண்டும் என்பதால் ஜிபிஎஸ் சாடலைட்டுகளின் உதவி நாடப்பட்டு மணலைத் தூவும் பணி மேற்கொள்ளப்பட்டது. 12000 பனை மரங்களும் இங்கு நடப்பட்டன. இங்கு தீவுக்கு வர மானோரயில் வசதியும் உண்டு. விண்வெளியிலிருந்து பாம் ஜுமேராவைப் பார்க்க முடியும். விண்வெளி வீரரான கமாண்டர் லெராய் சியாவோ பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து 2005ஆம் ஆண்டு இந்தத் தீவை படம் பிடித்துக் காண்பித்தார்.

50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இங்கு வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதை விட மூன்று மடங்கு அதிகப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இது நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள கடற்கரைகள் மிக ரம்யமானவை. பாதுகாப்பானவை. சுறாமீன்கள் இங்கு உண்டு என்றாலும் மனிதர்களைத் தாக்கும் ராக்ஷஸ சுறாமீன்களாக இவை இல்லை. ஆகவே பயப்படாமல் பார்க்கலாம். நீச்சலுக்கான வசதிகளும் இந்தத் தீவில் உண்டு. இங்குள்ள கடல் நீர் சுத்தமானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.

லெகோலேண்ட்

அறுபதுக்கும் மேற்பட்ட ரைடுகளும் நீர்வீழ்ச்சிகளும் கொண்ட லெகோ லேண்ட் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது 3 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கவரும் இடம்; ஆகவே மழலைப் பட்டாளமும் சிறுவர், சிறுமியரும் குழுமும் இடமாக கலகலப்பாக எப்போதுமே திகழ்கிறது லெகோலேண்ட்.

நடன நீரூற்று

துபாயில் பார்க்க வேண்டிய தனித்துவம் மிக்க ஒரு காட்சி நடன நீரூற்றுக் காட்சி. செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த நீரூற்றில் உயரமாகவும் தாழ்ந்தும் வளைந்தும் நெளிந்தும் எழும்பும் நீரானது நடனமாடும். இந்த நடனக் காட்சி பார்ப்போரை மலைக்க வைக்கும். துபாய் மாலை ஒட்டி அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா லேக் என்னுமிடத்தில் இந்த நீரூற்று அமைந்துள்ளது. சுமார் 500 அடி உயரம் வரை நீரூற்று எழும்பி நடனமாடும். 6000க்கும் மேற்பட்ட ஒளிவிளக்குகள் இந்தப் பகுதியை அலங்கரிக்கின்றன. இசைப் பாடல்கள் ஒலிக்க அதற்கேற்ப குதூகலத்துடன் ஆடும் நீர் நடனம் அதிசயங்களுள் ஒன்று.

துபாய் க்ரீக்

துபாயின் பாரம்பரியம் மிக்க இடம் க்ரீக். வெவ்வேறு வடிவமைப்பில் காட்சி தரும் சுமார் இருபது அடி நீளமுள்ள படகுகளில் க்ரீக் நீர்நிலையில் சென்று க்ரீக்கை பார்வையிடலாம்.

இங்கு துபாய் அருங்காட்சியகம் உள்ளது. ஏராளமான கடைகளும் இந்தப் பகுதியில் உள்ளது.

துபாய் மெட்ரோ

துபாய்க்கு வருகை புரிபவர்களும் துபாயிலேயே வசிப்பவர்களும் பெரிதும் புகழும் ஒன்று துபாய் மெட்ரோ.

தானியங்கி சாதனங்களுடன் மிகத் திறம்பட இயங்கும் மெட்ரோ போக்குவரத்து 2009இல் துவங்கப்பட்டது. ரெட் மற்றும் க்ரீன் ஆகிய இரு லைன்களில் 49 ஸ்டேஷன்களைக் கொண்டுள்ள மெட்ரோ போக்குவரத்து ஒரு நாளக்கு மூன்றரை லட்சம் பயணிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தன் சேவையை வழங்குகிறது. இதில் பயணம் செய்வதால் ஒரு இடத்திற்கு மிக சீக்கிரத்தில் செல்ல முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

ஏராளமான கடைப் பகுதிகள், பூங்காங்கள், செயற்கை நீரூற்றுகள், பாரம்பரியமான பழைய காலக் கட்டிடங்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளதால் நாம் துபாயில் தங்க இருக்கும் காலத்திற்குத் தக்கபடி, அந்தந்தப் பகுதியில் கால்நடையாகச் சென்று பார்க்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்

துபாயில் சட்ட ஒழுங்கு மிகச் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதால் துபாய் செல்வதற்கு முன்னர் அங்குள்ள அடிப்படை விதிமுறைகளை சுற்றுலா செல்வோர் தெரிந்து கொள்ளல் அவசியம். பெண்களும் ஆண்களும் உடை அணிவதில் கவனம் செலுத்தி மற்றவர்கள் மதிக்கத்தக்க விதத்தில் கண்ணியமாக உடை அணிதல் வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல் புகை பிடித்தல் கூடாது. மேலை நாடுகளில் இருப்பது போல பொது இடங்களில் முத்தமிடுதல் கண்டிப்பாகக் கூடாது. மற்றவர்களின் அனுமதியின்றி யாரையும் போட்டோ எடுத்தல் கூடாது. இன்ன பிற விதிமுறைகளை அறிந்து அதற்குத் தக நடந்து கொள்ள வேண்டும்.

துபாயில் பயணிகள் பயமின்றி நடமாடலாம். குற்றங்கள் மிகக் குறைவாக இருக்கும் நாடு இது.

துபாயைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால் அங்கு பயணம் செய்தவர்கள் கூறுவது Dubai! UNIQUE, AMAZING! – துபாயா,  தனித்தன்மை வாய்ந்தது, பிரமிக்க வைப்பது!

***

Tag-  துபாய்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: