Post No. 11,076
Date uploaded in London – – 3 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்!
ச.நாகராஜன்
ட்ரோன் (Drone)!
அனைத்தையும் பார்க்கும் ட்ரோன் எதிர்கால உலகின் நம்பிக்கை நட்சத்திரமா அல்லது அறிவியல் கண்டுபிடித்துள்ள Dull, Dirty And Dangerous சாத்னங்களுல் ஒன்றா?
விடை : இது மனிதனின் கையில் தான் உள்ளது!
ஆனால் உறுதிபடச் சொல்ல முடிவது ஒன்று உண்டு:
அது தான் ட்ரோன் ஏஜ் – ட்ரோன் காலம் ஆரம்பித்து விட்டது என்று!
ட்ரோன் என்பது பல்வேறு அளவுகளில் வடிவமைக்கப்படும் பைலட் இல்லாத வானில் பறக்கும் வாகனங்கள் ஆகும். இவை தரையிலிருந்து இயக்கப்படுகின்றன.
ஏவுகணை போல ஒரே ஒரு தடவை பயன்படுத்துப்படுவது போல அல்லாமல் இவை திரும்பத் திரும்பப் பயன்படுத்தக் கூடியவை ஆகும்.
மிலிடரி ட்ரோன் எனப்படுபவை இராணுவ சம்பந்தமான தாக்குதலுக்கும் ஆயுதங்களைக் கொண்டு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் அதே சமயம் ஆக்கபூர்வமான செயல்களுக்கும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைத் தயாரிப்பதில் அமெரிக்க கம்பெனிகள் பல முனைந்து ஈடுபட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்திற்குச் சென்று என்ன நடந்தது என்று கண்காணித்துத் தகவல் அளிப்பது, எதிரி நாட்டில் ஒற்று வேலை பார்ப்பது, தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் கண்காணித்து அவர்களை ஒடுக்குவது, பிடிப்பது போன்றவையெல்லாம் ட்ரோனின் பணிகள்.
ஒரு கலகக் கும்பல் பெரிய போராட்டம் நடத்தும் போது வானில் பறந்து அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கும்பலைக் கலைக்க இப்போது ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு சில ட்ரோன்களே இருந்தன. இன்றோ 90க்கும் மேலான நாடுகள் ட்ரோன் பயன்பாட்டில் வலுவடைந்துள்ளன.
சீனா மட்டும் தரையிலிருந்தும் கடலிலிருந்தும் இயக்கப்படக் கூடிய 42000 ட்ரோன்களை 2023க்குள் தயாரிக்கத் திட்டம் தீட்டி இருக்கிறது.
பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மட்டும் இதில் ஈடுபடவில்லை.
பன்னாட்டு நிறுவனங்கள், அரசு சாரா தனியார் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பணியில் உள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு பணிகளுக்காக ட்ரோன் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளன.
நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் என்ற அளவில் பெரிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. 9000 பேர்கள் இறந்தனர். இன்னும் 16800 பேர்கள் காயமடைந்தனர். ஆறு லட்சம் வீடுகள் இடிந்தன. இன்னும் மூன்று லட்சம் வீடுகள் பாதி இடிந்த நிலையில் இருந்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கு விரைந்தன. இந்த பூகம்பத்தில் டிஸாஸ்டர் ட்ரோன் எனப்படும் விபத்து கால மீட்பு நடவடிக்கை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
அங்கு ஊசிகள், மருத்துகள் ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து 2010இல் ஹைதியில் (Haiti) ஏற்பட்ட பூகம்பத்திலும் அங்கு ட்ரோன்கள் சென்று படம் பிடித்து மீட்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்ய வழிகோலின.
அதிக எடை இல்லாத பொருள்களை ட்ரோன்கள் டெலிவரி செய்கின்றன. ஆனால் ஒரு பாக்கெட்டை டெலிவரி செய்ய ஒரு டாலர் முதல் 6 டாலர் வரை செலவாகிறது. ஆனால் இதைக் குறைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது ஒரு பாக்கட் டெலிவரி செய்ய 88 செண்டுகள் என்ற நிலையை இப்போது ட்ரோன் தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது.
எதிர்காலத்தில் இது இன்னும் மிக மிகக் குறைந்து அனைத்து பொருள்களின் டெலிவரியும் ட்ரோன் மூலமாகவே வழங்கப்படும் உலகத்தை நாம் பார்க்க முடிகிறது.
அதே சமயம் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும் தங்கள் தீவிரவாதத் தாக்குதலை நடந்த ட்ரோன் பயன்படுத்தக் கூடும் என்பது அச்சமூட்டும் செய்தி.
ஆக இனி வானில் ஒரு கண் அனைவரையும் எப்போதுக் கண்காணித்துக் கொண்டே இருக்கப்போகிறது.
நமது வீட்டு மாடியிலோ அல்லது அருகிலோ நமக்கு வரவேண்டிய பொருள்கள் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.
மனிதனுக்கு மனிதன் சண்டை போட்ட காலம் போய் ஆங்காங்கே ட்ரோனுக்கும் ட்ரோனுக்கும் சண்டைகள் ஏற்படும் அபாயமும் உண்டு.
ஒரு புதிய யுகத்தில் நாம் நுழைய இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
இதை ஆக்கபூர்வமாக ஆக்குவது என்பது – எப்போதும் சொல்லக் கூடிய தத்துவ வார்த்தை போல – ‘மனிதனின் கையில் தான் எல்லாம் இருக்கிறது’!
***
குறிப்பு : இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களுக்கு ஆதாரமான நூலாக அமைவது The Drone Age என்ற நூல். இதை எழுதியவர் Michael J.Boyle. 2020ல் வெளிவந்த இந்த நூல் 387 பக்கங்கள் கொண்டது. விலை $29.95 (2323.62 ரூபாய்)
xxxxx
tags- ட்ரோன் , எதிர்கால உலகம்,