Post No. 11,091
Date uploaded in London – – 9 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
1
விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!
ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே ரயிலில் அவர் அமர்ந்திருந்த பெட்டியிலேயே சில இளம் பெண்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஸ்வாமிஜியின் ஆடையைப் பார்த்த பெண்களுக்கு அவர் ஒரு விநோதமான ஆசாமியாகத் தென்பட்டார்.
அவரை சீண்ட வேண்டுமென்று நினைத்த அவர்கள் ஸ்வாமிஜியை நோக்கி, “ உங்கள் ரிஸ்ட் வாட்சை கழட்டித் தாருங்கள். இல்லையேல் பெண்களான எங்களை நீங்கள் கிண்டல் செய்வதாகப் புகார் செய்வோம்” என்று மிரட்டினர்.
ஸ்வாமிஜி இதைக் கேட்டார். ஆனால் காது கேட்காதவர் போல, சைகையால் அபிநயம் பிடிக்க ஆரம்பித்தார்.
பெண்களிடம் அவர் சைகை மூலம் தனக்கு காது கேட்காது என்றும், அவர்கள் சொல்வதை ஒரு பேப்பரில் எழுதிக் காட்டுமாறும் கூறினார்.
பெண்களும் தாங்கள் சொன்னதை அப்படியே ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.
அதை கையில் வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்ட ஸ்வாமிஜி, ”இப்போது போலீஸை கூப்பிடுங்கள். நான் புகார் செய்ய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது” என்றார்.
பெண்கள் மிரண்டு போனார்கள்.
2
முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!
ராஜஸ்தானில் ஒரு சமயம் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமி விவேகானந்தர்.
அவர் பயணித்த பெட்டியிலேயே இரு ஆங்கிலேயர்களும் பயணித்தனர்.
ஸ்வாமிஜி கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல மௌனமாக அமர்ந்திருந்தார்.
இரு ஆங்கிலேயர்களும் அவரது காவி உடை பற்றியும் அவரைப் பற்றியும் மிகவும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு ஸ்வாமிஜிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற எண்ணம்!
நேரம் போய்க் கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து கம்பார்ட்மெண்டில் வந்த ஒரு ரயில்வே அதிகாரியிடம், ‘தண்ணீர் குடிக்க வேண்டுமே! ஒரு கிளாஸ் வாட்டர் எங்கே கிடைக்கும்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
இதைக் கேட்ட இரு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.
இவ்வளவு தெளிவாக ஆங்கிலம் பேசும் அவர், தாங்கள் அவரைத் திட்டி இழிவாகப் பேசிய போது ஒன்றுமே சொல்லவில்லையே என்று திகைத்தனர்.
அவரையே கேட்டும் விட்டனர்.
அதற்கு ஸ்வாமிஜி பொறுமையாக பதில் கூறினார் இப்படி: “முட்டாள்களை நான் பார்ப்பது இது முதல் முறை அல்ல!”
3
நெட்டைப் பயன்படுத்தத் தடை
1994ஆம் ஆண்டு பிரபல பத்திரிகையான PC தனது ஏப்ரல் இதழில் இன்டர்நெட்டை போதையில் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் ஒரு சட்டம் இயற்றப் போவதாக ஒரு முக்கிய செய்தியை பிரசுரித்திருந்தது. இதைப் பார்த்த பலரும் அரண்டு போனார்கள்.
இது பற்றி தொடர்பு கொள்ள வேண்டிய பெண்மணியின் பெயராக
Lirpa Sloof என்ற பெயரும் தரப்பட்டிருந்தது.
பலரும் விசாரித்த பின்னர் தான் தெரிய வந்தது அந்த செய்தி ஏப்ரல் முதல் தேதியன்று முட்டாள்கள் தின செய்தியாக பிரசுரிக்கப்பட ஒன்று என்று!
வாசகர்களை முட்டாள்கள் தினத்தன்று முட்டாளாக்க நினைத்த பத்திரிகை அதை தொடர்பு கொள்ள வேண்டிய பெண்மணியின் பெயரில் சூசகமாகத் தெரிவித்திருந்தது.
அந்தப் பெண்மணியின் பெயராகத் தரப்பட்டது Lirpa Sloof.
அதைத் திருப்பிப் போட்டால் வருவது Fools April!
4
கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!
‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற பஞ்ச் டயலாக்கை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
ஒரு கணித பேராசிரியர் தன் பையனிடம் இதை எப்படி சொன்னார் தெரியுமா?
“நான் n தடவை ஒரு விஷயத்தைச் சொன்னா அதை n + 1 தடவையா நீ எடுத்துக்கணும்!” (“If I’ve told you n times, I’ve told you n+1 times…”)
****
Tags- நடந்தவை தான் நம்புங்கள் 24, விவேகானந்தர்