
Post No. 11,128
Date uploaded in London – – 22 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தேனீ போல இரு; மூங்கில் போல அழியாதே – மேலும் சில சமண சமய உவமைகள்
சமண மத தீர்த்தங்கரர்களில் கடைசியாக வந்தவர் 24-ஆவதாக வந்த மஹாவீரர் ஆவார் . அவர் புத்தருக்கும் முந்தையவர். அவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பார்ஸ்வநாதர், மற்றும் கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த நேமிநாதர் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைப்பதால் அந்த மதத்தின் பழமை நமக்கு விளங்குகிறது . தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும், வழிதவறிப்போன சில சமணர்கள் அரசியலில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் ஏனைய இடங்களில் அவர்கள் அமைதியான துறவற வாழ்க்கை வாழ்ந்ததால் நல்ல பெயர் மிஞ்சியது. எடுத்துக்காட்டாக தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சமணர்களை வெகுவாகப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். நிற்க.
சென்ற ஒரு கட்டுரையில் சமணர்களின் புஸ்தகமான மஹாவீர வசனாம்ருதத்தில் இருந்து சில சுவையான உவமைகளைக் காட்டினேன். மஹாவீர வசனாம்ருதம் என்ற நூல் மகாவீரரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு ஆகும். அது பிராகிருத மொழிகளில் ஒன்றான அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இதோ மேலும் சில உவமைகள் :–
நமது உடல் படகு அல்லது கப்பல்; அதன் மாலுமி அல்லது படகோட்டி நமது ஆன்மா ; இகலோக வாழ்க்கை எனப்படும் சம்சாரம் ஒரு சாகரம்/கடல். பல மஹான்கள், முனிவர்கள் அதைக் கடந்து சென்றுள்ளனர் இதோ மஹாவீரர் வாக்கியத்தில் —
ஸரீரமாஹு நாவத்தி ஜீவோ வுச்சயி நாவி ஓ
ஸம்ஸாரோ அண்ணவோ வுத்தோ ஜம் தரந்தி மஹேஸிணோ
இது கீதையில் உள்ள கருத்து; சம்சார சாகரம் என்பதை கிருஷ்ணர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ஸம்ஸ்க்ருதத்தைக் கரைத்துக் குடித்த வள்ளுவன் ,அதை அப்படியே பத்தாவது குறளில் பிறவிப் பெருங்கடல் என்று பயன்படுத்துகிறார்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10
Xxx
தேனீக்கள் மரங்களில் உள்ள பூக்களில் இருந்து தேனை அருந்துகின்றன. அவைகளும் திருப்தி அடைகின்றன. ஆனால் பூக்களுக்கோ மரங்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது போல அமைதியையும் , சமநிலையையும் நாடும், பற்றற்ற சமணத் துறவிகளும் தூய உணவையும் பானங்களையும் தேனீக்கள் போல பெற வேண்டும்
ஜஹா துமஸ்ஸ புஷ்பேஸு பமரோ ஆவியஈ ரஸம்
ண ய புஷ்பம் கிலா மே இ ஸோய பீணேஇ அப்பயம்
ஏ மே ஏ ஸமணா முத்தா ஜே லோஏ ஸந்தி சாஹுணோ
விஹம் கமா வ புஷ்பேஸு தா ண பத்தேஸணே ரயா
Xxx
அகந்தை , கோபம், ஆடம்பரம் அல்லது உதாசீனம்/கவனக்குறைவு காரணமாக ஒரு துறவி அடக்கத்தை / பணிவைக் கற்காவிடில் அது ஆன்மீக வறட்சிக்குச் சமம் ஆகும் ; அவன் ஒரு மூங்கில் மரத்தின் பழம் போல தனக்குத்தானே தனக்கு அழிவைத் தேடிக் கொள்வான் –
தம் பா ந கோஹா வ மயப்பமாயா குரு ஸ் சஹாஸே விணயம் ந ஸிக்கே
ஸோ சைவ ஊ தஸ்ஸ அபூயி பாவோ பலம் ச கீயஸ் ஸ வஹாய ஹோ இ
மூங்கில் மர உவமை ஏன்?
மூங்கில் மரமானது 100 ஆண்டுகளில் ஒரு முறை பூத்து பழத்தை உண்டாக்கிவிட்டால் அது காய்ந்து உதிர்ந்து விடுமாம். அதாவது அந்த மரம் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறது
xxx
சமணர்கள் கணித மேதைகள். இந்துக்கள் எப்படி யுகங்களுக்கும் , பிரம்மாவின் ஆயுளுக்கும், மன்வந்தரத்துக்கும் பெரிய எண்களைத் தருகிறார்களோ அதே போல சமணர்களும் ஒரு கணக்கு உவமை தருகின்றனர். ஒரு யோஜனை என்பது எட்டு மைல் . ஒரு யோஜனை அகலமும், ஆழமும், உள்ள ஒரு குழி தோண்டி அதை மனிதரின் மயிர்களால் நிரப்புங்கள். நன்றாக அமுக்குங்கள். ஒரே இராணுவமே அதன் மீது நடந்தாலும் அது அமுங்காதபடி நெருக்கமாக நிரப்புங்கள் . பின்னர் ஒவ்வொரு முடியையும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுங்கள். அத்தனை முடியையும் எடுத்து முடிக்கும் காலம் ஒரு பல்யோபமா .அது போல 100 கோடி ஒரு சாகரோபமா அதுபோல 400 கோடி ஆண்டு ஒரு கால சக்ர . எண்ணற்ற காலசக்ர சேர்ந்தது ஒரு புத்கல பராவர்த்த . ஒரு தலை முடியை சத கோடியாகப் பிரிக்கும் உவமைகளை தமிழில் திருமூலரும் பயன்படுத்துகிறார். திருவள்ளுவரோ பத்து அடுக்கிய கோடி பற்றிப்படுகிறார் . அவர்கள் அனைவரும் சொல்லவருவது மிகப்பெரிய கற்பனைக்கெட்டாத கால அளவு
அல்லது எண்.!!!
Xxx
பரிபூரண நிலையை அடைந்தவர்களை சமணர்கள், ‘தீர்த்தங்கரர்’ அல்லது ‘அர்ஹத்’ என்பர். இதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் சித்தர்கள். அவ்ர்களைத் தமிழ் சித்தர்களுடன் ஒப்பிடலாம்.
அவர்கள் குணங்களை வருணிக்கும் அர்த்தமாகதி மொழி ஸ்லோகம்-
அரூவிணோ ஜீவகணா நாண தம்சண ஸ ண்ணி யா
அ உலம் ஸுஹம் ஸம்பத்தா உவமா ஐஸ்மா நத்தி உ
அவர்களுக்கு / சித்தர்களுக்கு உருவம் இல்லை. உயிர் உள்ளவர்கள்; ஆனால் உடல் அற்றவர்கள் ; அறிவும் தொலைநோக்கும் உள்ளவர்கள்; எப்போதும் பேரானந்தத்தில் திளைப்பவர்கள் . அந்த ஆனந்தத்துக்கு உவமை ஏதும் இல்லை.
Xxx
அவர்களுடைய உலகம் நம் உலகிற்கு மேலே உள்ளது ; சனாதனம் ஆனது. அதற்கு ஏறிச் செல்லுவது கடினம். இந்த உலக வாழ்க்கை என்னும் சூழலில் இருந்து தப்பித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் அங்கே செல்கிறார்கள்; அவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது. இதோ அதற்கான ஸ்லோகம் —
தம் டாணம் ஸாஸயம் வாஸம் லோகக்கம்ஸி
ஜம் ஸம்பத்தா ந சோயந்தி பவோஹம் தகரா முணீ
xxx
உயிர்வாழும் இனம் மொத்தம் 84 லட்சம் வகை, ஆத்மா என்பது அழிவற்றது, தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் — என்ற கருத்துக்கள் சமண சமயத்திலும் உண்டு . ஒரு கைப்பிடி விதைகளைத் தூவினால் அது காலப்போக்கில் கோடி கோடியாகப் பெருகுவது போல ஒரு வினையிலிருந்து பல கோடி வினைகள் பரிணமிக்கும் என்று உரைகாரர் செப்புவர்
xxx
நான்கு விஷயங்கள் கிடைப்பதற்கு அரிது. அவையாவன — மனித ஜன்மம் , சமய போதனை, உண்மை மதத்தில் நம்பிக்கை, புலனடக்கம் .
இதோ மஹாவீரர் ஸ்லோகம்
சத்தாரி பரம் ஸங்காணி துல் லஹாணிஹ ஐந்துணோ
மா ணுசத்தம் சுயி ஸத்தா ஸஞ்ஜமம்மி ய வீரியம்
சம்சயாத்மா விநஸ்யதி – சந்தேகப் பேர்வழி அழிந்தே போவான் என்று கிருஷ்ணரும் பகவத் கீதையில் பகிர்கிறார் . ஆயிரத்தில் ஒருவன்தான் இறையன்பை நாடுவான் என்றும் சொல்கிறார்.
ஆதி சங்கரரும் மனித ஜன்மம் துர்லபம் என்றும், சத்சங்கமே மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்றும் நுவல்கிறார் ; அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அவ்வைப்பாட்டியும் சொல்கிறாள்.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.
இதோ ஆதிசங்கரர் ஸ்லோகம்
ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபதஹ பும்ஸ்த்வம் ததோ விப்ரதா
தஸ்மாத்வைதிக தர்ம மார்க பரதா வித்வத்மஸ்மாத்பரம்
எல்லாவற்றிலும் மனிதனாய் பிறப்பது கடினம்; அதிலும் ஆண்மகனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் அந்தணனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் வேதமார்கத்தைப் பின்பற்றுபவராய் (இந்துவாய்ப்) பிறப்பது அரிதிலும் அரிது.
அடுத்த ஸ்லோகத்தில் 100 கோடி பிறப்புகளில் சேர்த்த புண்ணியத்தால்தான் முக்தி கிடைக்கும் என்கிறார்.
விவேக சூடாமணியின் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார் —
துர்லபம் த்ரய மேவைத தேவானுக்ரஹ ஹேதுகம்
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயஹ
–விவேக சூடாமணி
மூன்று விஷயங்கள் அரிதிலும் அரிது ; அவை இறைவன் அருளால் கிட்டும்; மனித ஜன்மம் , மோட்சம் பெற ஏங்குதல் , குரு அருள் ; அதாவது பூ ரணத்துவம் பெற்ற ஒரு மஹானின் கடாக்ஷம் /கவனிப்பு
ஆதி சங்கரரின் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அர்த்தமாகதி மொழியில் மஹாவீரர் சொன்னதைப் படித்தால் மிகவும் எளிதாகப் புரியும்.
Xxx
ஆச்சர்யத்துடன் பார்க்கிறான், கேட்கிறான்
இது கீதையிலுள்ள வாக்கியம் ; அபூர்வம், அரிது , அதிசயம் என்பது அதன் பொருள் . அதை மகாவீரரும் பயன்படுத்துகிறார் —
ஆஹச்ச ஸவணம் லப்தும் ஸ த்தா பரம துல்லஹா
ஸோச்சா ணேஆஉயம் மக்கம் பஹவே பரி பஸ்ஸஈ
அபூர்வமாக சமய சொற்பொழிவைக் கேட்கலாம். அதில் நம்பிக்கை ஏற்படுவது கடினம்; அப்படிக் கேட்டவர்களிலும் பலர் வழி தவறிப்போவதுண்டு
இதோ கீதை ஸ்லோகம் –
आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥
ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||
கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்
ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = வியப்பெனக் காண்கிறான்
ஆஸ்²சர்யவத் வத³தி = வியப்பென ஒருவன் சொல்கிறான்
ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = வியப்பென ஒருவன் கேட்கிறான்
கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்
இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்
(Gita slokam -From Sangatham.com)
Xxx subham xxxx
TAGS –சமண உவமைகள் , மூங்கில், தேனீ , துறவிகள், உடல் படகு, ஞானி , மனிதப் பிறப்பு, துர்லபம்